சட்ட அமலாக்கம் மற்றும் பாதுகாப்பு கல்வியில் சர்வதேச ஒத்துழைப்பை ராஷ்டிரிய ரக்ஷா பல்கலைக்கழகம் விரிவாக்கம்
சட்ட அமலாக்கம் மற்றும் பாதுகாப்பு கல்வித் துறைகளில் உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்த ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை ராஷ்டிரிய ரக்ஷா பல்கலைக்கழகம் (ஆர்.ஆர்.யு), அக்டோபர் 4, 2023 அன்று எடுத்துள்ளது. உகாண்டாவின் நாகுருவில் உள்ள காவல்துறை தலைமையகத்தில் உகாண்டா காவல் படையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஆர்.ஆர்.யு கையெழுத்திட்டது. ஆர்.ஆர்.யு.வின் அங்கீகாரம் மற்றும் சேர்க்கை இயக்குநர் கமாண்டர் மனோஜ் பட், பல்கலைக்கழகத்தின் ஐ.சி.ஓ.டி தலைவர் திரு ரவீஷ் ஷா மற்றும் மனிதவள மேம்பாட்டு இயக்குநர் ஏ.ஐ.ஜி.பி கோலுபா காட்ஃப்ரே ஆகியோர் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
ஆர்.ஆர்.யு மற்றும் உகாண்டா காவல் படைக்கு இடையிலான ஒத்துழைப்பு, சட்ட அமலாக்க பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் பரஸ்பர புரிதல் மற்றும் அறிவு பரிமாற்றத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. படைகளில் இணைவதன் மூலம், இரு நிறுவனங்களும் தங்கள் கல்வித் திட்டங்களை மேம்படுத்தவும், சட்ட அமலாக்க பணியாளர்களின் தொழில்முறை வளர்ச்சிக்கு பங்களிக்கவும் முயல்கின்றன.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், ஆர்.ஆர்.யு , உகாண்டா காவல் படை ஆகியவை ஆசிரியர் பரிமாற்ற திட்டங்கள், கூட்டு ஆராய்ச்சித் திட்டங்கள், பாடத்திட்ட மேம்பாட்டு முன்முயற்சிகள் மற்றும் சட்ட அமலாக்க கல்வியில் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வது போன்ற பல்வேறு கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும். இரு நிறுவனங்களும் நிபுணத்துவம் மற்றும் அனுபவங்களிலிருந்து பயனடைய இந்த முயற்சிகள் உதவுவதுடன், இறுதியில் அந்தந்த நாடுகளில் மேம்பட்ட சட்ட அமலாக்க நடைமுறைகளுக்கும் வழிவகுக்கும்.
இந்த கூட்டாண்மை குறித்து பேசிய கமாண்டர் மனோஜ் பட், "உகாண்டா காவல் படையுடன் இந்த உத்தி சார்ந்த கூட்டு முயற்சியில் ஈடுபடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், சட்ட அமலாக்க கல்வியில் சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டைக் குறிக்கிறது. அறிவு மற்றும் வளங்களைப் பகிர்வதன் மூலம், உலகெங்கிலும் உள்ள சட்ட அமலாக்க முகமைகள் எதிர்கொள்ளும் வளர்ந்து வரும் சவால்களை கூட்டாக எதிர்கொள்ள முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்’’ என்று கூறினார்.
"இந்த ஒத்துழைப்பு ஆர்.ஆர்.யு.வுக்கு அதன் உலகளாவிய தடத்தை விரிவுபடுத்துவதற்கும் உகாண்டாவில் சட்ட அமலாக்க கல்வியின் வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கும் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது. உகாண்டா காவல் படையுடன் நெருக்கமாக பணியாற்றவும், இரு நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்ளவும் இது உதவும் ”, என்று திரு ரவீஷ் ஷா கூறினார்.
உகாண்டா காவல் படையின் மனிதவள மேம்பாட்டு இயக்குநர் ஏ.ஐ.ஜி.பி கோலூபா காட்ஃப்ரே, இந்த கூட்டாண்மைக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்: "எங்கள் பணியாளர்களுக்குத் தரமான பயிற்சி மற்றும் கல்வியை வழங்குவதற்கான எங்கள் திறனை மேம்படுத்துவதில் ராஷ்டிரிய ரக்ஷா பல்கலைக்கழகத்துடன் ஒத்துழைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அறிவு மற்றும் நிபுணத்துவத்தை பரிமாறிக்கொள்ள உதவும், இது எங்கள் சட்ட அமலாக்க நடைமுறைகளை மேம்படுத்தவும், நாட்டின் பாதுகாப்பிற்கு பங்களிக்கவும் உதவும்”, என்றார், அவர்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது ஆர்.ஆர்.யு.வுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும். ஏனெனில் அது அதன் சர்வதேச ஒத்துழைப்பு முயற்சிகளை விரிவுபடுத்துவதுடன், சட்ட அமலாக்கம் மற்றும் பாதுகாப்பு கல்வியில் ஒரு முன்னணி நிறுவனமாக அதன் நிலையை வலுப்படுத்துகிறது. உகாண்டா காவல் படையுடனான இந்தக் கூட்டாண்மை, மற்ற சர்வதேச அமைப்புகளுடன் எதிர்கால ஒத்துழைப்புக்கான களத்தை அமைக்கிறது. அறிவு பகிர்வு மற்றும் ஒத்துழைப்பின் உலகளாவிய வலையமைப்பை ஊக்குவிக்கிறது.
கருத்துகள்