தமிழ்நாட்டில் ஆளும் கட்சி ஆதரவுடன் செயல்படும் மணல் மாஃபியாக்களை இரும்புக் கரத்தால் ஒடுக்க வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சியின தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம் வலையபட்டி பகுதியில் சரக்கூந்து மூலம் மணல் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கடத்தல் கும்பலைப் பிடிப்பதற்காக அங்கு விரைந்த இலுப்பூர் கோட்டாட்சியர் தெய்வநாயகியின் சிற்றூந்து மீது சரக்குந்தை மோதி கொலை செய்ய மணல் கடத்தல் கும்பல் முயற்சி செய்துள்ளது. மணல் சரக்கூந்து மோதியதில் வட்டாட்சியர் பயணித்த சிற்றூந்து சேதமடைந்த நிலையில், மணல் சரக்கூந்தை பின்னோக்கி இயக்கி வந்து மீண்டும் மோதிய மணல் கடத்தல் கும்பல் முயன்றதில். சிற்றூந்தின் ஓட்டுநர் சாமர்த்தியமாகச் செயல்பட்டு, வாகனத்தை இடதுபுறமாகத் திருப்பியதால் கோட்டாட்சியரும், அவரது உதவியாளர்களும் தப்பியுள்ளனர். கோட்டாட்சியர் மீதான கொலை முயற்சி கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் மணல் கடத்தல் கடந்த சில ஆண்டுகளாகத் தலைவிரித்தாடுகிறது. அதிகாரப்படி நிலையில் உயர்ந்த இடத்தில் உள்ள கோட்டாட்சியரையே கொலை செய்யும் அளவுக்கு மணல் கடத்தல் கும்பல் துணிகிறது என்றால் அவர்களுக்கு எந்த அளவுக்கு ஆட்சியாளர்களின் ஆதரவு இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆளுங்கட்சியினர் கொடுக்கும் தைரியத்தால் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மணல் கடத்தல் கும்பல்கள் மாஃபியாக்களாக மாறி வருகின்றனர். இது இயற்கை வளங்களுக்கு மட்டுமின்றி சமுக அமைதிக்கும் மிகப்பெரிய ஆபத்தாகும்.
மணல் மாஃபியாக்களால் தமிழ்நாட்டின் பொது அமைதி எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறது என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியில் மணல் கொள்ளைக்கு எதிராக செயல்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அவரது அலுவலகத்தில் வைத்துக் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டார்.
அதன்பின் சேலம் மாவட்டம் மானாத்தாள் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தக் கிராம நிர்வாக அலுவலரை வெட்ட கடத்தல் கும்பல் அரிவாளுடன் துரத்தியது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகில் சின்ன தோட்டாளம் என்ற இடத்தில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற காவல்துறை சிறப்பு சார் ஆய்வாளர் மணவாளன் என்பவரை மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கி கொலை செய்ய முயன்றது, வேலூர் மாவட்டத்தின் அணைக்கட்டுப் பகுதியில் பொன்னையாற்றிலிருந்து மணல் கொள்ளையடிக்கப்படுவதைப் படம் பிடித்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உமாபதியை மணல் கடத்தல் கும்பல் அரிவாளால் வெட்டி காயப்படுத்தியது என மணல் கடத்தல் கும்பல்களின் அட்டகாசங்கள் தொடர்கின்றன.
இப்போதும் கூட இலுப்பூரில் வருவாய் கோட்டாட்சியரை கொலை செய்ய முயன்ற மணல் கடத்தல் கும்பலையும், அதன் பின்னணியில் இருப்பவர்களையும் கைது செய்யவோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ தமிழக அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மாறாக கோட்டாட்சியர் மீதான கொலை முயற்சி குறித்த செய்திகள் ஊடகங்களில் வராமல் தடுப்பதில்தான் ஆர்வம் காட்டினார்கள். முறப்பநாட்டில் மணல் கொள்ளையர்களால் கொல்லப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு ரூ.1 கோடி நிதி கொடுத்ததைத் தவிர, மணல் கொள்ளையைத் தடுக்கவும், மாபியாக்களின் அட்டகாசத்தை ஒடுக்கவும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மணல் கடத்தலை தடுக்க முயலும் அதிகாரிகளைக் கொல்ல முயற்சிகள் நடப்பதை அரசின் மீதான போராகக் கருதி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் அட்டகாசம் செய்யும் மணல் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும். மாறாக, அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டால், ஆட்சியாளர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆர்.டி.ஓ மீது லாரியில் மோத முயற்சி! கடுமையான நடவடிக்கை எடுத்திடக் கேட்டு சி.பி.ஐ(எம்) செய்தி அறிக்கை மாநில செயற்குழு சார்பில்: மணல் கடத்தலை தடுக்க முயற்சித்த இலுப்பூர் கோட்டாட்சியர் மற்றும் அலுவலர்கள் இருவர் மீது லாரி ஏற்ற முயன்ற கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
கடந்த, வெள்ளிக்கிழமை இரவு அன்னவாசல் பகுதியில் மணல் கடத்தல் நடப்பதாக கோட்டாட்சியர் தெய்வநாயகிக்கு தகவல் கிடைத்து , அவரின் உதவியாளர் ராஜேந்திரன் மற்றும் ஓட்டுநர் கனகராஜ் ஆகியோருடன் சென்ற போது விபத்து நடத்த முயற்சியில் காயமின்றி தப்பினர்.
லாரியை இயக்கிய இருவரும் வாகனத்தை விட்டுவிட்டு ஓடியுள்ளனர். அதுபற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், புதுக்கோட்டை மாவட்டம் காவனூரிப்பட்டி கே.சுந்தரம் மற்றும் வி.சங்கர் ஆகிய இருவரும் குற்றவாளிகளாக அடையாளம் கண்டுள்ளனர்.
மணல் கடத்தலை தடுக்க முயன்ற அலுவலர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தப்படுவது முதல் முறை அல்ல. எனவே இந்த வழக்கை கொலை முயற்சியாக பதிவு செய்து குற்றவாளிகளை கடுமையாக தண்டிப்பதுடன், மணல் கொள்ளை கும்பலை எதிர்கொள்ளச் செல்லும் அலுவலர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கிட வேண்டும் எனவும் சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழுவின் சார்பில் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். என சிபிஐ (எம்). மாநில செயலாளர்.கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் ஆனால் இதில் பொதுவான நீதி யாதெனில் : வருவாய் துறையினர் பெரிய மணல் கடத்தல் மாஃபியாகள் பிடிபடுவதில்லை, இவர்கள் பிடிப்பதும் இல்லை காரணம் அந்த நபர்கள் தரும் மாத மாமூல் என்பது அனைவரும் அறிந்ததே, இந்தக் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் சிறிய மணல் திருடர்களைப் பிடித்து பெரிய மணல் மாஃபியா திருடர்களுக்கு வழியமைத்துக் கொடுப்பது ஊர் அறிந்த ரகசியம்.
கருத்துகள்