பென்சில்வேனியாவில் நடந்த பிரசாரப் பொதுக்கூட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த டொனால்ட் டிரம்ப் நலமாய் உள்ளதாகத் தகவல்
பென்சில்வேனியாவில் நடந்த பிரசாரப் பொதுக்கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு
நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மேடையிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் முகம் சுளித்தபடி, அவரது வலதுபுற காதில் கை வைத்திருப்பதை சம்பவத்தின் காணொளிக் காட்சிகள் காட்டுகின்றன. டிரம்பின் இந்தப் பொதுக்கூட்டத்தின் போது பலமுறை துப்பாக்கி சுடும் சப்தம் கேட்டது.
டிரம்ப் தரப்பிலிருந்து அவர் நலமாக உள்ளதாகவும் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு சப்தம் கேட்டவுடன் அவர் விரைவில் அமெரிக்க ரகசிய சேவை ஏஜென்டுகளால் சூழப்பட்டார். அங்கிருந்து உடனடியாக அவருக்காகக் காத்திருந்த வாகனத்திற்கு விரைவாகக் கொண்டு செல்லப்பட்டார். காரில் ஏற்றப்பட்ட போது அவர் தனது முஷ்டியை வெளியே உயர்த்திக் காட்டினார்.டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் என்ற சமூக ஊடக தளத்தில் இட்டிருந்த பதிவில், தனது வலது காதின் மேல் பகுதியில் தோட்டா ஒன்று துளைத்துச் சென்றதாகக் கூறியுள்ளார். அதற்கு முன்னதாக அவரது செய்தித் தொடர்பாளர், டிரம்ப் “நலமாக உள்ளதாகவும்” உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.
“ஏதோ தவறு இருப்பதாக நான் உடனடியாக அறிந்தேன். அப்போது உச்ச ஸ்துதியில் விசில் போன்ற சப்தமும் துப்பாக்கிச்சூட்டின் சப்தமும் கேட்டது. இதைத்தொடர்ந்து உடனடியாக தோட்டா ஒன்று என் தோலைக் கிழித்துச் சென்றதை உணர்ந்தேன்,” என்று டிரம்ப் அவரது பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும், “ரத்தப்போக்கு அதிகமாவதைக் கண்டவுடன், என்ன நடக்கிறது என்பதை உணர்ந்துவிட்டேன்,” என தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அதிகாரிகள் டிரம்பை சூழ்ந்து அழைத்துச் செல்லும்போது அவரது காது மற்றும் முகத்தில் வடிந்திருந்த ரத்தம் தெளிவாகத் தெரிந்தது.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் சம்பவ இடத்திலேயே அமெரிக்க ரகசிய சேவை ஏஜென்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அந்தோணி குக்லீல்மி தெரிவித்துள்ளார். அதோடு, “துப்பாக்கிச் சூட்டில் பொதுக்கூட்டத்தில் பங்கெடுத்த பார்வையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும்” அவர் குறிப்பிட்டார். படுகாயமடைந்த இருவரின் உடல்நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாவும் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள ஆல்லிஜெனி பொது மருத்துவமனையின் நிர்வாகம் தெரிவித்தது.
சட்ட அமலாக்க வட்டாரங்கள் தெரிவித்த தகவல் படி இந்தத் தாக்குதலை நடத்திய ஆண் துப்பாக்கி ஏந்தியிருந்ததாகவும், மைதானத்திற்கு வெளியே சில நூறு மீட்டர் தொலைவிலுள்ள உயரமான அமைப்பிலிருந்து சுட்டதாகவும்” கூறியுள்ளனர். அதோடு, இந்தத் தாக்குதல் ஒரு படுகொலை முயற்சியாகவே கருதப்படுவதாகவும் தெரிவித்தனர்.
டிரம்ப் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவரது பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இந்தச் சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் டிரம்பின் செய்தித் தொடர்பாளர் குக்லீல்மி தெரிவித்தார். இந்த தாக்குல் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கூகுள் நிறுவனம் சார்பில் சுந்தர் பிச்சை உள்ளிட்ட பலரும் கன்டனங்களைத் தெரிவித்துள்ளனர்
கருத்துகள்