இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டத்தில் விதவைகளுக்கு வழங்கும் உதவித்தொகை மனு மீது பரிந்துரை செய்து நடவடிக்கை எடுப்பதற்கு
ரூபாய். ஐந்தாயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைதாகிச் சிக்கியுள்ளார். அவர் மீது புதிய குற்றவியல் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாத காலத்தில் இலஞ்சம் வாங்கியதாக மூன்று கிராம நிர்வாக அலுவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டத்தில் சிறுமணியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 62 வயதாகும் பாண்டித்துரை தனது மகளுக்கு அரசு வழங்கும் ஆதரவற்ற விதவைக்கான உதவிதொகை பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளார். மேலும் அது சம்பந்தமாக நல்லூர் குரூப் கிராம நிர்வாக அலுவலர் பூமிச்சந்திரனை (வயது 47) சந்தித்து விவரம் கேட்ட போது மனு மீது நடவடிக்கை எடுக்க தனக்கும் தனக்கு மேல் உள்ள அலுவலர்களுக்கும் இலஞ்சமாக ரூபாய். ஆறாயிரம் கொடுக்க வேண்டுமென்று கேட்டாராம். என்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாதென பாண்டித்துரை தெரிவித்தாராம். அதனால் ரூபாய் ஐந்தாயிரமாவது கொடுக்க வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர் பூமிச்சந்திரன் கூறிய நிலையில் இலஞ்சம் கொடுக்க விரும்பாத பாண்டித்துரை, அது குறித்து இராமநாதபுரம் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகாரளித்தார். அதன் பின்னர் நேற்று முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 173-ன் படி வழக்குப்பதிவு செய்து, பினாப்தலின் ரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை பாண்டித்துரையிடம் வாங்கி அதை அரசு சாட்சிகள் முன்பு கொடுத்தார்கள்.
பாண்டித்துரை அந்தப் பணத்தை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது புரோக்கராகக் கூறப்படும் கற்பகவள்ளி என்பவர் மூலம் கொடுத்துள்ளார். பணத்தை கற்பகவள்ளியிடமிருந்து பூமிச்சந்திரன் பெற்றுக்கொண்டபோது அந்தப்பகுதியில் மறைந்து நின்றிருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் இராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர் லஞ்சம் பெற்ற கையுடன் அவரைக் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. மேலும் கற்பகவள்ளியிடமும் விசாரணை நடத்தினார்கள் பிறகு இருவரும் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள்.
கருத்துகள்