தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள்,
ஆசிரியர்களுக்கு 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.07.2024 முதல் 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டதாவது;மத்திய அரசுப் பணியாளர்களுக்கு 01.07.2024 முதல் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 53 சதவீதமாக உயர்த்தப்பட்ட நிலையில் மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் முதல்-அமைச்சர் அதனைக் கனிவுடன் பரிசீலித்து 01.07.2024 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிட ஆணையிட்டுள்ளார். அதனால் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 3 சதவீதம் உயர்ந்து 01.07.2024 முதல் 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால், 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.
இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூபாய் 1,931 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள். ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்."
என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி(DA) மற்றும் அகவிலை நிவாரணத்தை (DR) ஆண்டுக்கு இரண்டு முறை அரசு உயர்த்தி வருகிறது. இந்நிலையில், மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படி குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கானது 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது வரை அது நிலுவையில் உள்ளது. மேலும், இந்த வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை 2024 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதியன்று நடைபெற்ற நிலையில், விரிவான விசாரணை தேவை என உச்சநீதிமன்றம் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்துள்ளது
கருத்துகள்