வீட்டு மனைகள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி
தமிழ்நாடு அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும் படி ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த தற்போதைய ஊரக வளர்ச்சித் துறையின் அமைச்சர் ஐ.பெரியசாமி இருந்த போது 2008 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் அப்போது ஐபிஎஸ் அலுவலராக இருந்த ஜாபர் சேட்டின் மனைவி பர்வீன் உள்ளிட்ட சிலருக்கு திருவான்மியூரில் 3,457 சதுர அடி மற்றும் 4,763 சதுர அடி வீட்டு மனைகளை தமிழ்நாடு அரசு செய்த ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, அப்போதைய வீட்டுவசதித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ஜாபர் சேட், அவரது மனைவி பர்வீன், க.முருகையா, கே.ராஜமாணிக்கம், ஆர்.துர்கா சங்கர் உள்பட ஏழு பேர் மீது ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை, 2013 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது அதில்
அமைச்சர் ஐ.பெரியசாமி தவிர மற்றவர்கள் மீதான வழக்கு உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மீதான ஊழல் லஞ்ச லாவண்ய வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், இந்த வழக்கில் அமைச்சர். ஐ. பெரியசாமி தவிர மற்றவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும், அரசுக்கு எந்த இழப்புமில்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. அமைச்சர் என்பதால் வழக்குத் தொடர ஆளுநர் மட்டுமே அனுமதி அளிக்க முடியும் எனும் போது, சபாநாயகர் அனுமதியளித்தது தவறு என வாதிட்டார். மேலும் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார். எதிர் தரப்பைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, மனுவுக்கு டிசம்பர் 19 ஆம் தேதிக்குள் பதிலளிக்க ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை டிசம்பர் மாதம் 20 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
கருத்துகள்