நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர், திருமருகல், திட்டச்சேரி, கீழ்வேளூர், கீழையூர் தலைஞாயிறு,
வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம், நாள் தோறும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக, அம்மையப்பன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் நாகப்பட்டினம் நகராட்சி மற்றும் வேளாங்கண்ணி பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு ராக்ஷ்ஸ குழாய்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 22.50 மில்லியன் லிட்டர் குடிநீர் கொண்டு வரப்படுகின்றன.
இதனிடையே கடந்த மூன்று மாத காலமாக நாகப்பட்டினம் நகராட்சி மற்றும் ஒன்றியங்களில் உள்ளிட்ட கிராமப்புறப் பகுதிகளில் சரிவர குடிநீர் வரவில்லை என பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். அதனால் சந்தேகமடைந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், முறையாக தண்ணீர் கொண்டு வந்தும் பொது மக்களுக்குத் தண்ணீர் தட்டுப்பாடு எதனால் ஏற்படுகிறது என விடை தெரியாது குழம்பினார்கள் .இதையடுத்து கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டக் குழாய்கள் செல்லும் பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ள திட்டமிட்ட குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் நாகப்பட்டினம், தெத்தி பகுதியில் திடீரென சோதனைகள் மேற்கொண்ட போது கிழக்குக் கடற்கரைச் சாலையிலிருந்து, நாகூர் நாகப்பட்டினம் பழைய நாகூர் செல்லும் சாலையில் அமைத்துள்ள இஜிஎஸ் பிள்ளை தனியார் பொறியியல் கல்லூரி சாலை வழியாக, நாகை நகராட்சி மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு செல்லும் ராட்சத குடிநீர் குழாய்களை தோண்டிப் பார்த்தனர்.
அதில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் ராக்ஷ்ஸ குழாயிலிருந்து, திருட்டுத்தனமாக துவாரமிட்டு, ஏஜிஎஸ் பிள்ளை தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் புதிய பைப் லைன் மூலம் அனுமதி எதுவும் இல்லாமல் தண்ணீரைத் திருடி வந்தது தெரிந்தது. மேலும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயில், நாள்தோறும் ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் என கடந்த மூன்று மாதமாக சுமார் 3, கோடியே 60 லட்சம் லிட்டர் குடிதண்ணீரை இதுவரை EGS பிள்ளை தனியார் கல்லூரி நிர்வாகம் நூதன முறையில் திருடி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் தெரிந்து அதிர்ச்சி அடைந்த மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் முறையற்ற இணைப்பைத் துண்டித்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் பல மாதங்களாக பொது மக்களுக்கு வழங்க வேண்டிய குடிநீரை நூதன முறையில் திருடி அதனைப் பயன்படுத்திய தனியார் ஏஜிஎஸ் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவும், இரண்டு கோடி ரூபாய் அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
நாகப்பட்டினம் மக்களுக்கு வழங்க வேண்டிய மூன்று கோடியே 60 லட்சம் லிட்டர் குடிநீரை மடை மாற்றி தனியார் கல்லூரி நிர்வாகம் நூதன முறையில் திருடி வந்த சம்பவம் மாவட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
கருத்துகள்