ஜாபர் சாதிக் உள்ளிட்ட இருவரின் ஜாமின் மனு மீதான விசாரணையிலிருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல்
போதை பொருள் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் ,
அவரின் சகோதரர் இருவரின் ஜாமின் மனு மீதான விசாரணையிலிருந்து விலகுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா தெரிவித்தார். போதைப்பொருள் கடத்தல் வழக்கில், மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுக் காவல் துறையினரால், மார்ச்சு மாதம் சென்னை ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டதையடுத்து, சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனாபானு, சகோதரர் முகமது சலீம், திரைப்பட இயக்குனர் அமீர் ஆகியோர் மீது, அமலாக்கத்துறை யினர் தனியாக பதிவு செய்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஜாபர் சாதிக், அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோர் தரப்பில் ஜாமின் கோரி, கூடுதல் சி.பி.ஐ., நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத்துறை சார்பில், ஆஜரான வழக்கறிஞர், 'இருவரின் ஜாமின் மனுவை கடந்த 19 ஆம் தேதி மாலை சி.பி.ஐ., நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால், அதற்கு முன்பாகவே, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது' எனக்கூறினார்.
இதனையடுத்து மனு நிலுவையில் உள்ள போது எப்படி மனுத்தாக்கல் செய்யப்பட்டது? எனக்கேள்வி எழுப்பிய நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, இந்த வழக்கு விசாரணையில் இருந்து தாம் விலகுவதாக அறிவித்தார்.
கருத்துகள்