திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மருத்துவக் கழிவுக் குப்பைகளைக் கொட்டிய கேரளத்தின் நடவடிக்கைகள் குறித்த நிகழ்வில் இன்று 18 லாரிகளில் கழிவுகள் கேரளாவுக்கு திரும்ப அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் 5-6 லாரிகள் நாளை அனுப்பப்பட உள்ளன. கழிவுகள் கொட்டப்பட்டிருந்த இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மை செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தற்போது வரை 5 குற்றவாளிகள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது வரவேற்கத்தக்கது என்றாலும் அரசே இந்த செயலை செய்ய முன்வராத நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்
கே.அண்ணாமலை தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "காவிரி நீர் உள்ளிட்ட தமிழ்நாட்டு உரிமைகளை தனது கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர், கேரள மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களை, கேரள கம்யூனிஸ்ட் அரசின் குப்பைக் கிடங்காக மாற்றவும் அனுமதித்திருக்கிறார்.
கேரள கம்யூனிஸ்ட் அரசுடன் திமுக அரசு உறவாடிக் கொண்டிருக்கும் அதே வேளையில், கேரள மாநிலத்தின் பயோமெடிக்கல், பிளாஸ்டிக் மற்றும் இறைச்சிக் கழிவுகளின் குப்பைக் கிடங்காக நமது தென்மாவட்டங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. தினம் தினம் லாரிகளில் கொண்டு வந்து கொட்டப்படும் இந்தக் கழிவுகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய சோதனைச் சாவடிகள், வெறும் வசூல் மையங்களாக மட்டுமே மாறிவிட்டன. ஒருபுறம் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து கேரள மாநிலத்துக்குச் சட்டவிரோதமாக கனிமங்கள் கடத்தப்படுவதைக் கண்டும் காணாதது போல் இருக்கும் திமுக அரசு, மறுபுறம் தமிழ்நாடு குப்பை கொட்டும் இடமாகப் பயன்படுத்திக்கொள்ள சுதந்திரமான அனுமதி அளித்துள்ளது.
அலுவலர்களிடமும், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் பலமுறை புகார் அளித்தும், இதனைத் தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. முழுக்க முழுக்க திமுக அரசுக்குத் தெரிந்தே இவை நடைபெறுகின்றன.
உடனடியாக, கேரள மாநிலத்தின் குப்பைக் கிடங்காக தமிழ்நாடு எல்லையோர மாவட்டங்கள் மாற்றப்படுவதைத் திமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இனியும் இதே போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால், வரும் 2025 ஜனவரி முதல் வாரத்தில், பொதுமக்களைத் திரட்டி, இந்த உயிரியல் மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகளை லாரிகளில் ஏற்றிச் சென்று, கேரளாவில் கொண்டுபோய் கொட்டுவோம். முதல் லாரியில் நானும் செல்வேன் என்பதைத் திமுக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியிருந்தார் இந்த நிலையில் அதன் பின்னர் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது குப்பை வந்த வழியே கேரளா திரும்பிச் சென்றது
கருத்துகள்