விளையாட்டுத்துறையில் நாட்டிற்கு பெருமை சேர்த்து சாதித்தவர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதான
கேல் ரத்னா விருது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் டி.குகேஷ் மற்றும் துப்பாக்கி சுடுதல் வீரர் மனு பாக்கர் உள்ளிட்ட 4 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற மனு பாக்கரின் பெயர் இப்பட்டியலில் முதலில் விடுபட்டிருந்தது. கேல் ரத்னா விருது பெறுவோர் பட்டியலில் மனு பாக்கரின் பெயர் விடுபட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
'மனு பாகர் விண்ணப்பிக்கவில்லை,' என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் விளக்கமளித்திருந்தது. இதனிடையே மனுபாக்கரின் தந்தை ராம் கிஷன், “மனு பாக்கரை துப்பாக்கிசுடுதல் வீராங்கனையாக உருவாக்கியதற்கு பதிலாக கிரிக்கெட் வீராங்கனையாகக் கொண்டு வந்திருக்க வேண்டும்.” என்று தெரிவித்திருந்தார். முன்னதாக மனு பாக்கரும், “நாட்டுக்காக விளையாடி பெருமை சேர்ப்பது மட்டுமே என் வேலை.
விருதுகளும், அங்கீகாரமும் சிறப்பாக செயல்படுவதற்கான துாண்டுகோலே. ஆனால் விருதுகளைப் பெறுவது மட்டுமே எனது இலக்கில்லை.” என்று தெரிவித்திருந்தார். இந்திய அரசின் தயான் சந்த் கேல் ரத்னா விருதுக்கு தேர்வாகியிருக்கும் தமிழ்நாடு மாநிலம் சார்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ், அர்ஜூனா விருதுக்குத் தேர்வாகியிருக்கும் துளசிமதி முருகேசன், நித்யஸ்ரீ சுமதி சிவன் மற்றும் மனிஷா ராமதாஸ் ஆகியோரும் பாராட்டுக்குரியவர்கள்.
மேலும், உலகளவிலான போட்டிகளில் பதக்கங்களைக் குவித்து நம் இந்தியத் தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் 2024-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் கேல் ரத்னா விருது அறிவிப்பு சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும்
உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷ், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், பாரீஸ் ஒலிம்பிக்கில் 2 வெண்கலப் பதக்கங்கள் வென்ற துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் மற்றும் பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற பிரவீன் குமார் ஆகிய நால்வருக்கு இந்திய அரசின் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற இருக்கும் விழாவில், மனு பாக்கர், குகேஷுடன் இணைந்து இந்திய ஆண்கள் ஹாக்கி அணித் தலைவர் ஹர்மன்ப்ரீத் சிங் மற்றும் பாரா ஒலிம்பிக் வீரர் பிரவீன் குமார் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த விருதினை வழங்குகிறார்.
இதுகுறித்து இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலும், உரிய ஆய்வுக்கு பின்பும் கீழ் கண்ட விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விருது வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.” என்று தெரிவித்துள்ளது. அதன்படி, 2025 ஜனவரி மாதம் 17 ஆம் தேதி கேல் ரத்னா, அர்ஜுனா மற்றும் துரோணாச்சாரியா விருது பெறுவவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, நான்கு பேர் கேல் ரத்னா விருதும், 32 விளையாட்டு வீரர்கள் அர்ஜுனா விருதும், 3 பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சாரியா விருதும் வழங்கப்பட உள்ளன.
கருத்துகள்