போலியாக பேராசிரியர்கள் நியமனம் செய்த விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு,
போலியாக பேராசிரியர்களை நியமனம் செய்து கணக்குக் காட்டிய கல்லூரிகளின் விபரங்களை மீண்டும் ஆய்வு செய்யவும், ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளில் பணியாற்றிய பேராசிரியர்கள் மீதான நடவடிக்கையை ஒத்திவைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் நியமனத்தில் மோசடி நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், 295 பொறியியல் கல்லூரிகளில் 700க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போலியாக பல கல்லூரிகளில் பெயர்களை பதிவு செய்திருந்த அதிர்ச்சி தகவல் வெளியானது.இந்த விவகாரத்தில் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான 295 பொறியியல் கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.மேலும் அந்தக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் ஆதார் எண், பான் எண் போன்றவை வாங்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டது. மேலும், அங்கீகாரம் பெறுவதில் போலியாக ஆசிரியர்களை கணக்கு காண்பித்த விவகாரத்தில், விசாரணை செய்வதற்கு தேசிய ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் உஷா நடேசன், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் குமரவேல், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஆபிரகாம் ஆகியோர் கொண்ட உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.மேலும், கல்லூரிகளில் போலியான ஆவணங்களை அளித்தது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் பெயர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருப்பதும் கண்டறியப்பட்டது.அந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் 272 வது சிண்டிகேட் கூட்டம், கடந்த ஜூலை 29ஆம் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், போலி பேராசிரியர்களை கணக்கு காண்பித்தது குறித்தும் விவாதிக்கப்பட்டு, கல்லூரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிண்டிகேட் கூட்டத்தில், தமிழ்நாட்டிற்குள் உள்ள எந்தவொரு கல்லூரியிலும் மோசடியில் ஈடுபட்ட ஆசிரியர்களின் கற்பித்தல் பணியை தடை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவும், போலியான தகவலை வழங்கிய கல்லூரிகளுக்கு எதிராக (குற்றவியல் நடவடிக்கை உட்பட) கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அண்ணா பல்கலை சிண்டிகேட் கூட்டம் தொடர்பான அறிக்கை இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் 273 வது சிண்டிக்கேட் கூட்டம் சமீபத்தில் (ஜனவரி 8) நடைபெற்றது. அதிலும் போலி பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து மீண்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதில், அண்ணா பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் பெறுவதற்கு போலியாக பேராசிரியர்களை கணக்கு காண்பித்த விவகாரம் குறித்து விசாரணை செய்து அறிக்கை அளிப்பதற்கு நிலைக்குழு அமைக்கப்பட்டது. 118வது இணைப்பு நிலைக்குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்து அங்கீகாரம் வழங்கும் மையத்தின் இயக்குநர் அதுகுறித்து சிண்டிகேட்டிற்கு விளக்கினார்.
போலியாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் குறித்த விவகாரத்தில் செய்யப்பட்ட பரிந்துரைகளில் சிண்டிகேட் திருப்தி அடையவில்லை. எனவே, இந்த விஷயத்தில் நிலைக்குழுவின் பரிந்துரைகளை தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறையால் அமைக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழுவிடம் அதன் ஆய்வுக்காக வைக்குமாறு சிண்டிகேட் உத்தரவிட்டது. உண்மை கண்டறியும் குழுவின் கருத்துக்கள் பொருத்தமான வழிமுறைகளுக்காக வரவிருக்கும் சிண்டிகேட் கூட்டத்தில் வைக்கப்பட உள்ளன.போலி ஆசிரியர்களை நியமனம் செய்வதில் இருந்த அனைத்து ஓட்டைகளும் அகற்றப்பட்ட அங்கீகாரம் வழங்கும் மையத்தின் இணையதளத்தில் மேற்கொள்ளப்பட்ட அகிரடி மாற்றங்களை சிண்டிகேட் பாராட்டியது.பொதுப்பணித்துறை மேற்பார்வை பொறியாளரிடமிருந்து கட்டமைப்பு நிலைத்தன்மை சான்றிதழை சமர்ப்பிக்காத சில பொறியியல் கல்லூரிகளுக்கு ஒப்புதல் தொடர்வது குறித்து சிண்டிகேட்டிடம் அங்கீகாரம் வழங்கும் மையத்தின் இயக்குநர் வழிகாட்டுதல்களைக் கோரினார்..மாணவர்களின் பாதுகாப்பு முதன்மையான கவலைக்குரியது என்றும், எனவே தேவையை பூர்த்தி செய்யப்படும் வரை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக இந்த நிறுவனங்களுக்கான அங்கீகார மையத்தின் இணையதளத்தின் போர்ட்டலைத் திறக்க வேண்டாம் என்றும் சிண்டிகேட் அறிவுறுத்தியது.மேலும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு செலுத்த வேண்டிய 30 கோடி ரூபாய் நிதியை வசூலிப்பது குறித்து அடுத்த கூட்டத்தில் ஆய்வு செய்யவும் முடிவுச் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 295 பொறியியல் கல்லூரிகளில் போலியான பேராசிரியர்கள் நியமனம்! ஆட்சி
அதிகார வர்க்கமும், தனியார் மயமும் இணைந்த மோசடி !
அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 400 பொறியியல் கல்லூரிகளில் 295- ல் போலியான பேராசிரியர்கள் பணியாற்றி வருவதாக அறப்போர் இயக்கம் புள்ளி விவரங்களை வெளியிட்டதில் பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி 34 போலிப் பேராசிரியர்களை கணக்குக் காட்டி மோசடி செய்துள்ளதாகவும் இந்தக் கல்லூரி சட்ட மன்ற உறுப்பினர் கதிரவன் குடும்பத்திற்குச் சொந்தமானது என்றும் தெரிவிக்கிறது. இரண்டாவது இடத்தில் முன்னாள் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.வி.தங்கபாலுவின் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான டி.ஜே பொறியியல் கல்லூரி என வரிசையாக புள்ளி விவரங்கள் நீண்டு கொண்டே போகிறது.
இது போக டாக்டர்.முரளி பாபு, மாரிச்சாமி போன்றோர் ஒரே நேரத்தில் 11 கல்லூரிகளில் வேலை பார்ப்பதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இவர்கள் அதிக கல்லூரிகளில் பணியாற்றும் போலிப் பேராசிரியர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். இதேபோல் வெங்கடேசன் என்பவர் 10 கல்லூரியில் போலியாக கணக்கு காட்டப்பட்டு இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையனின் மகன் கதிர் நடத்தும் பொறியியல் கல்லூரிகள், அதிமுக சார்பாக சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் ஜெயச்சந்திரன் என்பவருக்குச் சொந்தமான JNN பொறியியல் கல்லூரிகள், அதிமுக ஆதரவாளர் கனகராஜுக்கு சொந்தமான ஜெயா பொறியியல் கல்லூரிகள், பாரதிய ஜனதா கட்சியின் அனுஷாவிற்கு சொந்தமான கோயம்புத்தூரை மையமாக கொண்டு இயங்கும் பார்க் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரிகள், பாட்டாளி மக்கள் கட்சியின் செஞ்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்த கணேஷுக்குச் சொந்தமான ஏ.ஆர்.எம் பொறியியல் கல்லூரிகள், திமுகவின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு சொந்தமான புதுக்கோட்டை கற்பக விநாயகர் பொறியியல் கல்லூரிகள், திமுகவின் வேளாண்மைத் துறை அமைச்சரான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் குடும்ப உறுப்பினர்கள் நடத்தக்கூடிய எம்.ஆர்.கே பொறியியல் கல்லூரிகள், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்குச் சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரிகள் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதில் உள்ள அனைத்துக் கல்லூரிகளும் போலியான பேராசிரியர்களை நியமித்து பல்வேறு முறைகேடுகளிலும் ஈடுபட்டுள்ளார்கள் என்பது வெட்ட வெளிச்சம்.
போலிப் பேராசிரியர்கள் நியமிப்பதன் மூலம் இவர்கள் பெருமளவு ஆதாயமடைகிறார்கள். அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் விதிகளின்படி ஒரு கல்லூரியிலுள்ள பாடப்பிரிவுகளின் அடிப்படையில் எவ்வளவு பேராசிரியர்கள் நியமிக்க வேண்டும் என்பது பற்றிய விதிகள் உள்ளது. அந்த விதிகளின் அடிப்படையில் பேராசிரியர்களை நியமிக்காமல் மிகக்குறைந்த அளவே பேராசிரியர்களையும் ஊழியர்களையும் நியமிக்கிறார்கள். அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் ஆய்வின் போது எல்லா பணியிடங்களும் நிரப்பப்பட்டது போல போலியாகக் கணக்குக் காண்பிக்கிறார்கள். அதை அந்த தொழில்நுட்பக் கவுன்சிலும் பணம், பொருள் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டு கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது ஒரு இயல்பாகவே மாறிவிட்டது.
மேலும் பல்வேறு பொறியியல் கல்லூரிகளும் அதனுடன் இணைந்து பாலிடெக்னிக் கல்லூரிகள் நடத்துகின்றனர். பாலிடெக்னிக்கில் பணிபுரிபவர்களை பொறியியல் கல்லூரியில் கணக்குக் காண்பிப்பதும் நடக்கிறது. இன்னும் பல கல்லூரிகளில் தங்களிடம் வேலை செய்துவிட்டு வெளியேறிப் போன பேராசிரியர்களின் சான்றிதழ்களை வைத்தே மாதம் தோறும் சம்பளம் போட்டு அவர்களே எடுத்துக் கொள்வதும் தொடர்ந்து நடைபெறுகிறது.
இதனால் சில பேராசிரியர்களே பல வகுப்புகளை நடத்தும் நெருக்கடிக்குத் தள்ளப்படுகின்றனர். இது மாணவர்களுக்கு தரமான பாடங்களை நடத்துவதில் அங்கு வேலை செய்யும் பேராசிரியர்களையுமே பெரிய அளவுக்கு நெருக்கடிக்கு உள்ளாக்கக்கூடியது.
தனியார்மயம் என்றால் தகுதி தரம் என்று இன்னும் நம் மத்தியில் பேசக்கூடியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதை இந்த பொறியியல் கல்லூரிகளின் போலியான பேராசிரியர்கள் மோசடி உடைத்துச் சுக்குநூறாக்கியுள்ளது. தனியார்மயம் என்றாலே ஊழல் முறைகேடு மோசடி லஞ்ச லாவண்யம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
இந்த ஊழல் முறைகேடு மோசடிகளில் கட்சி வேறுபாடின்றி பலரும் இணைந்திருப்பது என்பது தனியார்மயத்தை வளர்த்தெடுத்ததின் விளைவுதான். அதிகார வர்க்கம் அரசியல்வாதிகள் என அனைவரும் இதில் கைகோர்த்து பின்னிப் பிணைந்துள்ளனர். இப்போது ஆய்வு குழு அமைத்து விசாரணை செய்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இவர்கள் எந்த சட்டதின் கீழும் தண்டிக்கப் படுவதில்லை. காரணம் மாநிலத்தின் லோக் ஆயுக்தா இருந்தும் செயல்படவில்லை அதற்கு உரிய நீதிபதிகள் நியமனம் செய்யாமல் உள்ள நிலையில் மக்கள் போராட்டங்களின் மூலமாகத்தான் இவர்களை தண்டிக்க முடியும் என்ற நிலை வருகிறது. தரமான கல்வி வேண்டும் என்றால் தனியார்மயத்திற்கு எதிரான உறுதியான போராட்டங்களைக் கட்டியமைப்பதே தீர்வு என கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இந்த நிலை மாறுவதெப்போது.. இதில் பொது நீதி யாதெனில்:-உலகெங்கும் ஊழல் மலிந்து கிடக்கும் மிகவும் சோதனையான காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம்.
கலைவாணர் N.S.கிருஷ்ணன் பாடிய பாடலை மாற்றி,
நீதி நேர்மை நியாயம் இருந்தது அந்தக் காலம் அது அந்தக்காலம்
ஜாதியின் பெயரால் நீதியை வளைப்பது இந்தக் காலம்
நேர்வழி நடந்தது அந்தக் காலம் நேரெதிரானது இந்தக் காலம்
சீர் பெற வாழ்ந்தது அந்தக் காலம் சீ யென்று தாழ்ந்தது இந்தக் காலம்
என்றே பாடத் தோன்றுகிறது.
பின்னர் புலவர் மருதகாசி எழுதிய
1956 ஆம் ஆண்டு பாடலிது
"மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை
வானம் பொழியுது பூமி விளையுது தம்பிப் பயலே - நாம
வாடி வதங்கி வளப்படுத்துறோம் வயலே!
ஆனா
தானியமெல்லாம் வலுத்தவனுடைய கையிலே
இது
தகாதுனு எடுத்துச் சொல்லியும் புரியல்லே அதாலே......
தரையைப் பார்த்து நிக்குது நல்ல கதிரு - தன்
குறையை மறந்து மேலே பாக்குது பதரு
அதுபோல்
அறிவு உள்ளது அடங்கிக் கெடக்குது வீட்டிலே !
எதுக்கும்
ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் செய்யுது வெளியிலே அதாலே ...
ஆணவத்துக்கு அடிபணியாதே தம்பிப் பயலே எதுக்கும்
ஆமாஞ்சாமி போட்டு விடாதே தம்பிப் பயலே...
பூனையைப் புலியாய் எண்ணி விடாதே தம்பிப் பயலே. ஒண்ணப்
புரிஞ்சிக்காமலே நடுங்கிடாதே தம்பிப் பயலே
மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை
மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை!
கருத்துகள்