திமுக அரசியல் ஆதாயங்களை விட நமது குழந்தைகளின் நலனுக்கு முன்னுரிமை கொடுக்க அமைச்சர் வேண்டுகோள்
பிஎம்ஸ்ரீ பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசின் ஒப்புதல் கடிதத்தை வெளியிட்டார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
'எக்ஸ்' சமூக வலைதளத்தில் இந்தகா கடிதத்தை வெளியிட்டவர் கூறியுளளதாவது: பிஎம்ஸ்ரீ பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் தொடர்பாக கூறி நாடாளுமன்றத்தை நான் தவறாக வழிநடத்துவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டினார். நாடாளுமன்றத்தில் நான் சொன்னதில் உறுதியாக இருக்கிறேன். 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதியில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அனுப்பிய ஒப்புதல் கடிதத்தை பகிர்கிறேன்.
தி.மு.க., நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எவ்வளவு வேண்டுமானாலும் பொய்களை அடுக்கி வைக்கலாம். ஆனால், உண்மை சரிந்து விழும்போது தட்டிக் கேட்பது கிடையாது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிான தி.மு.க., அரசு மக்களுக்கு நிறைய பதில் சொல்ல வேண்டியுள்ளது. மொழிப் பிரச்னையை திசைதிருப்பும் தந்திரமாகப் பேசி தங்கள் வசதிக்கு ஏற்ப உண்மைகளை மறுப்பது என்பது அவர்களின் நிர்வாகத்தை காப்பாற்றாது.
தேசிய கல்விக் கொள்கை மீதான இந்த திடீர் நிலைப்பாடு ஏன்? தி.மு.க.,வின் அரசியல் செல்வாக்கை மீட்டெடுப்பதற்காகவே இந்த மாற்றம். தி.மு.க.,வின் இந்த பிற்போக்குத்தனமான அரசியல், தமிழ்நாட்டிற்கும் அதன் மாணவர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கும் அவமானம்.
தேசிய கல்விக் கொள்கையை அரசியல் பார்வையில் பார்க்க வேண்டாம். அரசியல் ஆதாயங்களை விட தமிழ்நாட்டில் உள்ள நமது குழந்தைகளின் நலனுக்கு முன்னுரிமை கொடுங்கள். இவ்வாறு அந்தப் பதிவில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
தி.மு.க.,வின் வெற்றுப் பேச்சுகள் தொடர்ந்து மற்றொரு பதிவில் தர்மேந்திர பிரதான் கூறியதாவது: மொழித்திணிப்பு மற்றும் தேசிய கல்விக் கொள்கை குறித்த தி.மு.க.,வின் சமீபத்திய கூச்சல், அக்கட்சியின் பாசாங்குத் தனத்தை வெளிப்படுத்துகிறது. தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு என்பது, தமிழ் மொழி , கலாசாரம் மற்றும் பெருமையை பாதுகாப்பதற்கு எந்தத் தொடர்பும் இல்லை. அரசியல் ஆதாயத்திற்காக தான் எதிர்க்கிறது.
தமிழ் மொழியை மேம்படுத்த போராடுவதாக தி.மு.க., கூறுகிறது. ஆனால், உண்மையில் தமிழ்மொழி, கலாசாரம் மற்றும் இலக்கிய சிந்தனைகளை ஊக்கப்படுத்தவும், மேம்படுத்தவும் எதுவும் செய்யவில்லை.
ஆனால், தரவுகளின் படி, 2018 - 19 ஆம் கல்வியாண்டில் தமிழ் வழிக்கல்வியில் 65.87 லட்சம் ஆக இருந்த மாணவர் சேர்க்கை 2023-24 ல் 46.83 லட்சமாக குறைந்துள்ளது. ஐந்து ஆண்டுகளில் 19.05 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது.
67 சதவீத மாணவர்கள் ஆங்கில வழி பள்ளியில் படிக்கின்றனர். அதே நேரத்தில் தமிழ் வழியில் மாணவர் சேர்க்கை 54 சதவீதத்தில் (2018 -19) இருந்து 36 சதவீதம் (2023- 24) ஆகக் குறைந்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஐந்தாண்டுகளில் 3.4 லட்சத்தில் இருந்து 17.7 லட்சமாக ஐந்து மடங்கு அதிகரித்து உள்ளது.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 7.3 லட்சமாக குறைந்துள்ளது.
இது தமிழகத்தில், தமிழ் வழியில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருவதை காட்டுகிறது. இது மொழி விருப்பத்தில் ஏற்பட்ட மாற்றமல்ல, காலனித்துவ மனநிலையின் மாற்றமாகும். வேலை மற்றும் அந்தஸ்துக்கு ஆங்கிலம் நுழைவு வாயிலாக கருதப்படுகிறது. இந்திய மொழிகள் பின்தங்கிய நிலையின் அடையாளமாக காணப்படுகின்றன.
தாய் மொழிக் கல்வியை ஊக்குவிப்பது என்பது தேசிய கல்விக் கொள்கையின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். இளம் மனங்களில் விமர்சன சிந்தனையை வளர்ப்பதற்கும், இந்திய மக்கள் தொகையின் முழு திறனையும் வெளிக் கொண்டு வருவதற்கும் இது மிகவும் உறுதியான பாதையில் ஒன்றாகும்.
தேசியக் கல்விக் கொள்கை மற்றும் மொழித்திணிப்பு குறித்த தி.மு.க.,வின் வெற்றுப் பேச்சுகள் மூலம் அவர்களின் தோல்வியை மறைக்க முடியாது. தமிழகத்தின் எதிர்காலத்தை பணயம் வைத்து அதிகாரம் செலுத்துவது என்ற அவர்களின் அரசியல் திட்டம் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
கருத்துகள்