கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூபாய்.5 லட்சம் அபராதம் மாநிலத்தின் புதிய சட்டம்
கடனை கட்டாயப்படுத்தி வலுக்கட்டாயமாக வசூலித்தால் ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூபாய்.5 லட்சம் அபராதம்
விதிக்க வகைசெய்யும் மசோதாவை சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார். இந்த மசோதா இன்று 29-ம் தேதி நிறைவேற்றப்பட்டது.
கடன்களை வசூலிக்க சட்டவிரோத கந்து வட்டி செயல்பாடுகளில் ஈடுபடுவோருக்கு சிறை தண்டனை விதிக்க வகைசெய்யும் மசோதாவை சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தாக்கல் செய்தார். மசோதாவில்
பணக் கடன் வழங்குவோர் மற்றும் அடகுக் கடைகள் உரிமம் மூலம் தொழிலை ஒழுங்குமுறைப்படுத்தி, கடும் வட்டியில் இருந்து மக்களை காப்பதில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதாகவும் தமிழ்நாடு அடகு கடைக்காரர்கள் சட்டம்-1943, தமிழ்நாடு பணக் கடன் வழங்குவோர் சட்டம்-1957, தமிழ்நாடு கந்துவட்டி தடை சட்டம்-2003 ஆகியவற்றை அரசு இயற்றியுள்ளது. ஆனாலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய, நலிந்த பிரிவினர், குறிப்பாக சிறு விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர், பணியாளர்கள், நடைபாதை வியாபாரிகள், பால் பண்ணைத் தொழிலாளர்கள், கட்டிடப் பணியாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆகியோர் பணக் கடன் வழங்கும் நிறுவனங்களால் ஈர்க்கப்படுகின்றனர். அத்தகைய கவர்ச்சிகரமான கடன்களுக்கு இரையாகி, தாங்க இயலாத கடன் சுமைக்கு ஆளாகின்றனர்.
அதேநேரம், பணக் கடன் வழங்கும் நிறுவனங்கள், ஏற்கெனவே நிதி நெருக்கடி சுமையில் இருக்கும் கடனாளிகளிடம் இருந்து கடனை வசூலிக்க, முறையற்ற வழிகளை நாடுகின்றனர். அது துயரத்தில் இருக்கும் கடனாளிகளை தற்கொலை செய்துகொள்ளத் தூண்டுதலாக அமைந்து, அதன்மூலம் பலரது குடும்பங்களை அழித்து, சமூக ஒழுங்கை பாதிப்படைய செய்கிறது.
எனவே, தனிநபர், சுயஉதவிக் குழுக்கள், கூட்டுப் பொறுப்பு குழுக்கள் ஆகியோருக்கு பணக் கடன் வழங்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் வலுக்கட்டாய வசூலிப்பு முறையால் ஏற்படும் இன்னல்களிலிருந்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய, நலிந்த பிரிவினரைப் பாதுகாக்க சட்டமியற்றுவது அவசியமாகிறது. அதற்கான சட்டத்தை இயற்ற அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு இந்த மசோதா வழிவகை செய்கிறது. வங்கிகள், ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்ட வங்கி சாரா நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் தவிர, தமிழ்நாட்டில் உள்ள பணக் கடன் வழங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும். ஆனால், கடன் வாங்கியவரிடம் வலுக்கட்டாய வசூல் நடவடிக்கை மேற்கொண்டால், இந்த வங்கிகள், பதிவு செய்யப்பட்ட மாநிலத்தின் அளவில் வங்கி சாரா நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.
கடன் வழங்கிய நிறுவனமோ, அதன் முகவரோ, அல்லது தனிநபரோ கடன் வாங்கியவர் மற்றும் அவரது குடும்பத்தினரை வலுக்கட்டாயமாக நடவடிக்கைக்கு உட்படுத்த கூடாது. அந்த வகையில், அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது, வன்முறையை பயன்படுத்துவது, அவமதிப்பது, மிரட்டுவது, அவர்கள் செல்லும் இடங்களில் பின்தொடர்வது, அவர்களுக்கு சொந்தமான அல்லது பயன்படுத்தும் சொத்துகளில் தலையிடுவது, அதை பயன்படுத்த முடியாமல் இடையூறு செய்வது, அந்த சொத்துகளை பறித்துக் கொள்வது ஆகிய செயல்களில் ஈடுபடக் கூடாது.அதேபோல, கடன் வாங்கியவரின் வீடு, வசிப்பிடம், வேலை அல்லது தொழில் செய்யும் இடம் ஆகியவற்றுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்த அல்லது கடனை வசூலிக்க, தேவையற்ற செல்வாக்கைப் பயன்படுத்தி வலுக்கட்டாயப்படுத்துவது, தனியார் அல்லது வெளி தரப்பு முகமைகளின் சேவைகளை பயன்படுத்துவது, அரசு திட்டத்தின் கீழ் உரிமை அளிக்கும் ஆவணங்கள், பிற முக்கிய ஆவணங்கள், பொருட்கள், வீட்டு உடமைகளை வலுக்கட்டாயமாக எடுக்க கோருவது போன்றவை இச்சட்டத்தின் 20-வது பிரிவின்படி வலுக்கட்டாய நடவடிக்கைகளாகக் கருதப்படும்.
அதற்கான தண்டனைகள்: 20-வது பிரிவில் கூறப்பட்டுள்ள குற்றங்களைச் செய்தால், 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூபாய்.5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். வலுக்கட்டாய நடவடிக்கைகளுக்கு வெளி முகமைகளை பயன்படுத்துவது, ஆவணங்களை எடுப்பது போன்ற குற்றங்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூபாய்.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். கடன் பெற்றவர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர் யாராவது தற்கொலை செய்து, அதற்கு கடன் வழங்கிய நிறுவனம் அல்லது முகவரின் வலுக்கட்டாய நடவடிக்கை காரணமாக இருந்தால், அது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 108-வது பிரிவின்கீழ் குற்றமாகக் கருதப்படும். மேலும், கடன் வழங்கும் நிறுவனம் அல்லது தனிநபர் பதிவுச் சான்றிதழ் பெறாமல் கடன் வழங்கினால், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூபாய்.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மசோதா குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் என்று அதிமுக, விசிக ஆகிய கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ‘‘சட்டமன்றப் பேரவையில் இன்று 29-ஆம் தேதி விவாதத்துக்கு பிறகு இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.. இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து வரப்பெற்ற ஆலோசனையின் அடிப்படையில் இந்தச் சட்ட முன்வடிவின் பிரிவு இரண்டில் வரப்பெறும் வங்கிகள் என்ற வார்த்தை நீக்கப்படும் என்பதை இங்கு திருத்திய நிலையில் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறினார். இதையடுத்து இந்தத் திருத்தங்களுடன் மசோதா நிறைவேறியது.
கருத்துகள்