மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபர் கருமுத்து தி.சுந்தரம் செட்டியார் மீட்பு;
ரூபாய்.பல கோடி மதிப்புள்ள சொத்தை அபகரிக்க முயற்சித்த 8 பேர் கைது. கடத்தப்பட்ட மதுரை தொழிலதிபர்
ஆ.தெக்கூர் பூர்வீகமாகக் கொண்ட கருமுத்து தி.சுந்தரம் செட்டியார் 12 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டார். இதுதொடர்பாக 8 பேர் கைதுசெய்யப்பட்டனர். மேலும் சிலரைத் தேடி வருகின்றனர்.
மதுரை நாராயணபுரத்தில் வசிக்கும் கருமுத்து தி.சுந்தரம் செட்டியார் (வயது 58). மதுரையில் கல்வி நிறுவனங்கள், மில்களை உருவாக்கிய கருமுத்து தியாகராஜன் செட்டியார் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது மூதாதையர்களுக்கு பல மாவட்டங்களில் பல்வேறு சொத்துக்கள் உள்ளன. அதில் ஒன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரூபாய்.பல கோடி மதிப்புள்ள 6 ஏக்கர் சொத்து
அதை திண்டுக்கல் மரியராஜ் (வயது 70), என்பவர் அபகரிக்கத் திட்டமிட்டு தனக்கு கருமுத்து தி.சுந்தரம் செட்டியார் பொது அதிகாரப் பத்திரம் எழுதிக் கொடுத்தது போல் ஆவணங்களைத் தயார் செய்தது தொடர்பாக நீதிமன்றத்தில் கருமுத்து தி.சுந்தரம் செட்டியார் வழக்குத் தொடர்ந்தார். தீர்ப்பு கருமுத்து தி.சுந்தரம் செட்டியாருக்கு சாதகமாக வர இருப்பதை அறிந்த மரியராஜ், நண்பர்களுடன் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதியில் கருமுத்து தி.சுந்தரம் செட்டியார் வீட்டிற்கு சென்று சொத்தை தன் பேருக்கு எழுதித்தருமாறு கேட்டு மிரட்டி காரில் கடத்திச் சென்றார். முன்னெச்சரிக்கையாக கண்காணிப்புக் கேமரா, ஹார்டு டிஸ்க், மோடம் உள்ளிட்டவற்றையும் சேர்த்து எடுத்துச் சென்றனர்.
காரைக்குடி கூட்டிச் சென்று, அங்கிருந்து மற்றொரு காரில் மயிலாடுதுறைக்கு கூட்டிச் சென்று ஜெனமேந்திரன் (வயது 38), என்பவர் வீட்டில் தங்க வைத்தனர். பின்னர் மறுநாள் வடமாநிலங்களுக்கு கூட்டிச் சென்றனர். அவரை தேடி வந்த தனிப்படை காவல்துறையினர் மகாராஷ்டிராவின் சில பகுதிகள் மற்றும் நாக்பூர், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மாநிலத்தில் பெங்களூரு என கடத்தல்காரர்களைப் பின் தொடர்ந்தனர். இதற்கிடையே ஆள் கடத்தல் வழக்கில் மரியராஜ், அருள்செல்வன் (வயது 35), அருள் (வயது 42), விக்னேஷ் (வயது 24), முத்துகிருஷ்ணன் (வயது 42), ஜெனமேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதை அறிந்து கொண்டு அவர்களின் கூட்டாளிகள் சிவகங்கை மாவட்டம் வேலங்குடி இராமச்சந்திரன் (என்ற) அழகு (வயது 42), மயிலாடுதுறை கிரிவாசன் (வயது 46), கருமுத்து தி.சுந்தரம் செட்டியாரை மதுரையில் இறக்கி விடத் திட்டமிட்டு திரும்பினர். அவர்களைப் பின்தொடர்ந்து வந்த காவல்துறையினர் நேற்று முன்தினம் இரவு மதுரை ரிங் ரோட்டில் கருமுத்து தி.சுந்தரம் செட்டியாரை மீட்டனர். காவல்துறையினரிடமிருந்து தப்பிக்க முயன்ற போது இருவருக்கும் காலில் காயம் ஏற்பட்டது. கைது செய்த தனிப்படை காவல்துறையினரை ஆணையர் லோகநாதன் பாராட்டினார். மீட்கப்பட்ட நபர் பிரபலமான தொழிலதிபர் ஆ.தெக்கூர் காலஞ்சென்ற கருமுத்து தியாகராஜன் செட்டியார் பேரனாவார்.
கருத்துகள்