தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு பணி நியமனம்: வழிகாட்டு நெறிமுறை அரசாணையாக வெளியீடு.
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் படித்தவர்களுக்கான அரசுபணியில் முன்னுரிமை என்ற விதி பொருந்தும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 2-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை நேரடியாக பள்ளிகளில் சேர்ந்து, தமிழ் மொழியினை பயிற்று மொழியாக கொண்டு பயின்று தேர்ச்சி பெற்றவர்களுக்கும், பிற மாநிலங்களில் தமிழ் மொழியினை பயிற்று மொழியாக கொண்டு பயின்று, பின்னர் தமிழ் நாட்டில் தங்களது கல்வியினை சேரும் வகுப்பில் இருந்து தொடர்ந்து தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும்
மேற்படி முன்னுரிமை வழங்க தகுதி உடையவர்கள் என்றும் பள்ளி செல்லாமல் நேரடியாக தனித் தேர்வர்களாக தமிழ் வழியில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த முன்னுரிமை வழங்க தகுதி உடையவர்கள் அல்ல என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற ஆணையின் அடிப்படையிலும், பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையிலும், அரசு கவனமாக ஆய்வு செய்து, தமிழ்நாடு அரசுப் பணிநியமனங்களில், நேரடி நியமனத்திற்கான காலிப்பணியிடங்களில், இருபது விழுக்காடு (20%) பணியிடங்களை தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்வது குறித்து வெளியிடப்பட்ட அரசாணை (நிலை) எண். 82-ல், பத்தி 4-இல் (i) முதல் (xi) வரை உள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்குப் பதிலாக பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளை மாற்றியமைத்து ஆணையிடுகிறது:-
அதாவது
(i) ஒன்றாம் வகுப்பு முதல், தொடர்புடைய பணி விதிகளில் நேரடி நியமன முறைக்கென வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதி வரையில் முழுவதுமாக தமிழ்வழியில் கல்வி பயின்றவர்கள் மட்டுமே 2010-ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டம் மற்றும் அச்சட்டத்திற்கான 2020-ஆம் ஆண்டு திருத்தச் சட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்பட தகுதியுடையவர்கள் ஆவர்.
(ii) இதர மொழிகளை பயிற்று மொழியாகக் (Medium of instruction) கொண்டு பயின்று, தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்கள், இம்முன்னுரிமை ஒதுக்கீட்டிற்கு தகுதியுடையவர்கள் அல்லர்.
(iii) ஒன்றாம் வகுப்பில் பள்ளியில் சேராமல், வயதின் அடிப்படையில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2 முதல் 8 வரையிலான வகுப்புகளில் நேரடியாக பள்ளிகளில் சேர்ந்து, தமிழ்மொழியினைப் பயிற்று மொழியாகக் கொண்டு பயின்று தேர்ச்சி பெற்றவர்களும், பிற மாநிலங்களில் தமிழ்மொழியினைப் பயிற்று மொழியாகக் கொண்டு பயின்று, பின்னர் தமிழ் நாட்டில் தங்களது கல்வியினை, சேரும் வகுப்பிலிருந்து தொடர்ந்து தமிழ் வழியில் பயின்றவர்களும் மேற்படி முன்னுரிமை வழங்கப்படத் தகுதியுடையவர்கள் ஆவர். நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி வரை அவர்கள் பயின்ற சம்பந்தப்பட்ட அனைத்து கல்வி நிலையங்களிலிருந்தும் தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களைப் பெற வேண்டும். அதாவது, பள்ளிக் கல்வியைப் பொறுத்தமட்டில், சம்பந்தப்பட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் வழங்கும் சான்றிதழ்களின் அடிப்படையிலும், உயர்கல்வியைப் பொறுத்தமட்டில் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக முதல்வர் அல்லது பதிவாளர் வழங்கும் சான்றிதழ்களின் அடிப்படையிலும் முன்னுரிமை அளிக்கப்படும். மேற்படி சான்றிதழ்கள் பணியில் உள்ள அலுவலர்களால் மட்டும் அளிக்கப்படவேண்டும் எனவும், ஓய்வுபெற்ற அலுவலர்களால் அளிக்கப்படக்கூடாது எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
அரசு பொதுத் தேர்வுகளின் தனித் தேர்வர்களாக தேர்ச்சி பெற்று தொடர்ந்து கல்லூரிகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கும் இது பொருந்தும்.
கல்வி மற்றும் மாற்று சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றில் தமிழ் வழிக் கல்வி பயின்றவர்கள் என்பதை நியமன அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் படி விதிகளை திருத்தம் செய்து தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கருத்துகள்