செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நேரு நகரைச் சேர்ந்தவர்,
அச்சிறுப்பாக்கம் தலையாரி (கிராம உதவியாளர்) 45 வயதான கீதா. கிராம நிர்வாக அலுவலகராக பணி செய்யும் முத்துக்குமாரியை சந்திக்க வரும் சில ஆண்கள், மதுபோதையில் வந்து, கிராம உதவியாளரான கீதாவிடம் தகராறு செய்வதாக புகார் எழுந்தது. மேலும், கிராம நிர்வாக அலுவலகத்துகு சான்றிதழ் பரிந்துரை கேட்டு வரும் பொதுமக்களிடம் தனக்கு லஞ்சம் வாங்கி கொடுக்கும்படி கிராம நிர்வாக அலுவலர் முத்துக்குமாரி கட்டாயப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. கிராம நிர்வாக அலுவலர் முத்துமாரி லஞ்சம் வாங்குவதில் கில்லாடியாம். அவர் பயனாளிகளிடம் லஞ்சம் வாங்காமல் எந்தவிதமான பரிந்துரை கையொப்பமும் போடுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு. இந்தநிலையில், 'இனி நான் பொதுமக்களிடம் நேரடியாக லஞ்சம் வாங்க மாட்டேன். தலையாரியான நீதான் வாங்க வேண்டும். உன் மூலம்தான் என்னிடம் லஞ்சப்பணம் வரவேண்டும்' என தலையாரி கீதாவை லஞ்சம் வாங்கித்தரச்சொல்லி, கிராம நிர்வாக அலுவலர் முத்துமாரி கட்டாயப்படுத்தி வந்துள்ளார். அதற்கு உடன்பாடில்லாததால் இதுகுறித்து, வருவாய் ஆய்வாளர் நாகராஜன் என்பவரிமும் மதுராந்தகம் வட்டாட்சியர், கோட்டாட்சியர் ரம்யா ஆகியோரிடம் கிராம நிர்வாக அலுவலர் முத்துமாரி மீது, புகார் அளித்துள்ளார் கிராம உதவியாளர் கீதா. ஆனால், அவர்களும் லஞ்சம் வாங்குவதில் கில்லாடி என்பதால் "இதுல என்ன இருக்கு? லஞ்சம் வாங்கிக்கொடுக்கவேண்டிதானே?” என்கிற ரீதியில் கூறியுள்ளார். அதற்கு உடன்படாததால் கீதாவை, மேலும் அணைவரும் கார்னர் செய்ய ஆரம்பித்ததாக கூறப்படுகிற நிலையில் தான், தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, ஆட்சேபணையில்லா வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்க ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி அச்சிறுப்பாக்கம் பகுதியில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, தலையாரி கீதா கால தாமதமாக பணிக்குச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால், கோபமடைந்த கோட்டாட்சியர் ரம்யா, அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் கீதாவை அவமானப்படுத்தும் விதமாகத் திட்டியதாகக் கூறப்படுகிறது. அதாவது, கீதா ஏற்கனவே கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு லஞ்சம் வாங்கிக்கொடுப்பதில்லை என்பதை மனதில் வைத்துக்கொண்டு, இதுபோன்றே அடிக்கடி அவமனாப்படுத்தியதால் கீதா மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, லஞ்ச ஊழல் அலுவலர்களின் நேரடி நெருக்கடி அதிகமானதால், அச்சிறுப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்து, கீதா விஷம் குடித்துத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதைப் பார்த்த ஊர் பொதுமக்கள், உடனடியாக அவரை மீட்டு அச்சிறுப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்த்து கடந்த 5 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி மாலை, கீதா பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த கீதாவின் மகள் லாவண்யா என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் சரவணன், விசாரணை நடத்திவருகிறார். கிராம நிர்வாக அலுவலர் முத்துமாரி, வருவாய் ஆய்வாளர் நாகராஜன், கோட்டாட்சியர் ரம்யா உள்ளிட்டோர் லஞ்சம் வாங்கிக்கொடுக்கச் சொல்லி, கடந்த எட்டு மாதங்களாக தனது தாய் கீதாவுக்கு கொடுத்த நெருக்கடி, மற்றும் மன உளைச்சல்தான் அவர் தற்கொலை செய்வதற்குக் காரணம் எனப் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில்தான், கிராம நிர்வாக அலுவலர் முத்துமாரி கையொப்பம் வாங்க வந்த பொதுமக்களில் ஒருவரிடம் லஞ்சம் வாங்கி, சிரித்தபடி தனது Bag-ல் வைக்கும் காணொளிக் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் அங்கு விஜிலென்ஸ் அலுவலகம் ஆழ்ந்த தூக்கத்தில் உள்ளதாக மக்கள் மத்தியில் பேச்சு.
கருத்துகள்