காலஞ்சென்ற உயர் நீதிமன்ற நீதிபதி சத்யநாராயண பிரசாத்துக்கு அரசு சார்பில் இறுதி மரியாதையுடன் நல்லடக்கம்
காலஞ்சென்ற உயர் நீதிமன்ற நீதிபதி சத்யநாராயண பிரசாத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் இறுதி மரியாதை
சென்னையில் நேற்றிரவு மாரடைப்பால் உயிரிழந்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் காவல்துறை அணிவகுப்புடன் இறுதி மரியாதை செலுத்தப்பட்ட நிலையில் அவரது உடல் பெசன்ட் நகர் மின்சார மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது உடலுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள், பல மூத்த வழக்கறிஞர்கள் அஞ்சலி செலுத்தினர். நீதிபதியின் மறைவுக்கு தமிழக முதல்வர்மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றியவர் ஜெ.சத்யநாராயண பிரசாத் (வயது 56). நீதிபதிகளுக்கான பணிமூப்பு தரவரிசைப்பட்டியலில் 42-வது இடத்திலுள்ளார்.
பசுமை வழிச் சாலையில் உள்ள நீதிபதிகளுக்கான குடியிருப்பில் வசித்தவருக்கு செவ்வாய்க்கிழமை இரவு திடீர் நெஞ்சுவலி காரணமாக உள்ள அருகில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கக் கொண்டு சென்ற நிலையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் அவர் இறந்து விட்டதை உறுதி செய்தனர். அதையடுத்து அவருடைய உடல் ஆம்புலன்ஸ் மூலமாக அவரது வசிக்கும் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இறந்த நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத்தின் உடலுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எம்.எஸ்.ரமேஷ், எம்.வேல்முருகன், சி.வி.கார்த்திகேயன், ஆர்.எம்.டி.டீக்காராமன், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா உள்ளிட்ட நீதிபதிகள், உயர் நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் எஸ்.அல்லி தலைமையில் உயர் நீதிமன்ற நீதித்துறை அலுவலர்கள், மாவட்ட நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன், தமிழ்நாடு அரசின் மாநிலத் தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் உள்ளிட்ட அரசு வழக்கறிஞர்கள், தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார், மெட்ராஸ் பார் அசோசியேஷன் சங்க நிர்வாகிகள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்
மறைந்த உயர் நீதிமன்ற நீதிபதி சத்யநாராயண பிரசாத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் இறுதி மரியாதை
உயிரிழந்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத்துக்கு தமிழக அரசின் சார்பில் காவல்துறை அணிவகுப்புடன் இறுதி மரியாதை செலுத்தப்பட்டு அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
கருத்துகள்