சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்குத் தயாராகிறது விசாகப்பட்டினம்: ஏற்பாடுகள் குறித்து மூத்த அதிகாரிகளின் முக்கிய ஆய்வுக் கூட்டம்
சர்வதேச யோகா தின கொண்டாட்டங்கள் பத்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளன. 11-வது ஆண்டு கொண்டாட்டம் வரும் 21-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி தேசிய அளவிலான நிகழ்ச்சியை நடத்த விசாகப்பட்டினம் நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விழா ஏற்பாடுகள் குறித்து, மத்திய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநில அரசு ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் விரிவான ஆய்வுக் கூட்டத்தை நடத்தினர். கடைசி நிலையில் உள்ள நபருக்கும் யோகாவை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தெளிவான தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், நாடு முழுவதும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்திய ராஜேஷ் கோடேச்சா, ஆந்திரப் பிரதேச அரசின் சிறப்பு தலைமைச் செயலாளர் திரு கே. விஜயானந்த் ஆகியோர் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், ஆயுஷ் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திருமதி மோனலிசா தாஷ், விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் எம்.என்.ஹரேந்திர பிரசாத் போன்ற மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். முக்கிய இடங்களான ஆர்கே கடற்கரை, ரிஷிகொண்டா கடற்கரை, ஆந்திர பல்கலைக்கழகம், ஜிஐடிஏஎம் பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கு அவர்கள் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்த இடங்களில் எல்லாம் முக்கிய யோகா நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன. யோகாவை மக்களை மையமாகக் கொண்ட இயக்கமாக மாற்றும் பிரதமர் திரு நரேந்திர மோடியின்தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் போது, துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு, மக்களை ஒருங்கிணைக்கும் உத்திகள், பாதுகாப்பு நெறிமுறைகள் போன்றவை குறித்து விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டன. உள்கட்டமைப்புகளை நிர்வகிப்பது, போக்கு வரத்து வசதிகள் போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. யோகாவை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கான தேசிய லட்சியத்துடன் இந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் இந்த ஆண்டு சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. மேலும் விசாகப்பட்டினத்தில் மட்டும் ஐந்து லட்சம் பங்கேற்பாளர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்