ஊழல் லஞ்ச வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அரசு அலுவலர்கள் மறைமுகமாக உதவுவதாக உயர் நீதிமனற நீதிபதி கருத்து
ஊழல் லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கியவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையைத் தாமதப்படுத்தும் வகையில் அரசு அலுவலர்கள் அவர்களுக்கு மறைமுகமாக உதவுகின்றனர்'
என, சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். கரூர் மின்சார வாரியத்தில் பணியாற்றியவர் சரவணன் உள்ளிட்ட மூன்று பேர், சக தொழிலாளர் ஒருவர் மீதான பணியிடை நீக்கம் செய்துள்ள நடவடிக்கையை இரத்து செய்ய, 5,000 ரூபாய் லஞ்சம் பெற்றதாக, 2011ஆம் ஆண்டில் கைதான. சரவணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அது தொடர்பாக விளக்கமளிக்க அவருக்கு 'மெமோ' அனுப்பப்பட்டது.
அவர், '10 ஆண்டுகள் கழித்து 2021 ஆம் ஆண்டில் மெமோ அனுப்பி உள்ளனர். இது சட்டவிரோதம். எனக்கு எதிரான நடவடிக்கையை இரத்து செய்ய வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்த வழக்கை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். மின்சார வாரியம் தரப்பில், 'மனுதாரர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, இலஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் உரிய ஆவணங்களைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. குற்ற வழக்கில் சிக்கும் மின்சார வாரிய ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதில், ஒரே மாதிரியான கொள்கை தான் கடைப்பிடிக்கப்படுகிறது. மின்சார வாரியத்தில் 225 ஊழியர்கள் மீது ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பதிவு செய்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில், 56 பேருக்கு மட்டும் குற்றச்சாட்டுக் குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் தேவையான ஆவணங்கள் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கோரப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
'குற்ற வழக்கு நிலுவையிலிருக்கும் போது, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க எந்தத் தடையும் இல்லை' என ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், ஊழல் லஞ்ச வழக்குகளில் சிக்கியவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதில் வேண்டுமென்றே காலதாமதம் செய்கின்றனர். இதை நீதிமன்றம் கவனித்து வருகிறது. மனுதாரர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, 2018 ஆம் ஆண்டில் ஒப்புதல் கோரப்பட்டது; 2019 ஆம் ஆண்டில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதை தாமதமாகக் கருத முடியாது. தாமதமாகக் கருதினாலும் ஊழல் லஞ்சப் புகார் தீவிரமானது என்பதால், மனுதாரருக்கு அனுப்பிய மெமோவை ரத்து செய்ய முடியாது. மனுதாரர் உரிய விசாரணையைச் சந்திக்க வேண்டும். இவ்வழக்கை கரூர் நீதிமன்றம் ஆறு மாதத்தில் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும். என உத்தரவிட்டார்.
கருத்துகள்