ஜம்மு காஷ்மீரில் ஜூன் 6 அன்று பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்
உலகின் மிக உயரமான ரயில்வே வளைவுப் பாலமான செனாப் பாலத்தை பிரதமர் திறந்து வைக்கிறார்
நாட்டின் முதலாவது கம்பிவழி ரயில் பாலமான அஞ்சி பாலத்தையும் பிரதமர் திறந்து வைக்கிறார்
கட்ராவில் ரூ.46,000 கோடிக்கும் அதிக மதிப்புடைய பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர், நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்
பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூன் 6 அன்று ஜம்மு காஷ்மீர் பயணம் மேற்கொள்கிறார். அப்பகுதியில் ரயில் உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான தமது உறுதிப்பாட்டிற்கு இணங்க, பிரதமர் செனாப் பாலத்தைத் திறந்து வைத்து, காலை 11 மணியளவில் பாலத்தைப் பார்வையிடுகிறார். அதன் பிறகு, அவர் அஞ்சி பாலத்தைப் பார்வையிட்டு திறந்து வைக்கிறார். நண்பகல் 12 மணியளவில் அவர் வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து, கத்ராவில் ரூ.46,000 கோடிக்கும் அதிக மதிப்புடைய பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அவர், நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
செனாப் மற்றும் அஞ்சி ரயில் பாலங்கள்
ஆற்றிலிருந்து 359 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கட்டிடக்கலையின் அற்புதமான செனாப் ரயில் பாலம், உலகின் மிக உயரமான ரயில்வே எஃகு வளைவுப் பாலமாகும். இதன் நீளம் 1,315 மீட்டர். இது நில அதிர்வு மற்றும் பலத்த காற்று சூழலைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜம்மு, ஸ்ரீநகர் இடையேயான போக்குவரத்தை மேம்படுத்துவதில் இப்பாலம் முக்கியப் பங்கு வகிக்கும். பாலத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் மூலம், கத்ராவிற்கும் ஸ்ரீநகருக்கும் இடையே பயணிக்க சுமார் 3 மணிநேரம் மட்டுமே ஆகும். இதனால் தற்போதுள்ள பயண நேரம் 2 முதல் 3 மணி நேரம் வரை குறையும்.
அஞ்சி பாலம் நாட்டின் முதலாவது கம்பிவழி ரயில் பாலமாகும், இது சவாலான சூழலில் நாட்டிற்கு சேவை செய்யும்.
போக்குவரத்துத் திட்டங்கள் மற்றும் பிற மேம்பாட்டு முயற்சிகள்
உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் போக்குவரத்து திட்டத்தையும் பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். 272 கி.மீ தொலைவிலான இத்திட்டப் பணிகள் சுமார் ரூ.43,780 கோடி செலவில் நிறைவு செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தில் 36 சுரங்கப்பாதைகள் (119 கி.மீ தொலைவு) மற்றும் 943 பாலங்கள் உள்ளன. இந்தத் திட்டம் காஷ்மீர் பள்ளத்தாக்குக்கும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இடையே அனைத்து வானிலைக்கும் ஏற்ற, தடையற்ற ரயில் போக்குவரத்தை ஏற்படுத்துகிறது. இது பிராந்திய அளவிலான போக்குவரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதையும் சமூக - பொருளாதார ஒருங்கிணைப்பை மேற்கொள்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கத்ராவிலிருந்து ஸ்ரீநகர் வரை இயக்கப்படும் இரண்டு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையையும் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். அது அங்கு வசிக்கும் மக்கள், சுற்றுலாப் பயணிகள், யாத்ரீகர்கள் உள்ளிட்டவர்களுக்கு விரைவான, வசதியான மற்றும் நம்பகமான பயண வசதியை அளிக்கும்.
குறிப்பாக எல்லையின் கடைக்கோடி பகுதிகளில் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், பிரதமர் பல்வேறு சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார். தேசிய நெடுஞ்சாலை-701-ல் ரஃபியாபாத் முதல் குப்வாரா வரையிலான சாலை விரிவாக்கத் திட்டத்திற்கும், தேசிய நெடுஞ்சாலை - 444-ல் ரூ.1,952 கோடிக்கும் அதிக மதிப்புடைய ஷோபியன் புறவழிச்சாலை கட்டுமானத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். ஸ்ரீநகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சங்கராமா சந்திப்பிலும், தேசிய நெடுஞ்சாலை-44-ல் உள்ள பெமினா சந்திப்பிலும் இரண்டு மேம்பாலத் திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டங்கள் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயணிகளுக்குப் போக்குவரத்து வசதியை அதிகரிக்கும்.
கத்ராவில் ரூ.350 கோடிக்கும் அதிக மதிப்பிலான ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி உயர் மருத்துவ நிறுவனத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இது ரியாசி மாவட்டத்தில் சுகாதார உள்கட்டமைப்பிற்கு கணிசமான பங்களிப்பை வழங்கும் முதலாவது மருத்துவக் கல்லூரியாகும்.
கருத்துகள்