தமிழ்நாட்டில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் பிரம்மாண்டமாக நடந்தன.
ஜார்ஜ் கோட்டை முகப்பில், புதுப்பிக்கப்பட்ட கொடிக் கம்பத்தில் இந்திய தேசியக்கொடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது கொடியிலிருந்து பூக்கள் காற்றில் பறந்து வந்து விழுந்தன. மூன்று வர்ணத்தில் பலூன்களும் பறக்கவிடப்பட்டன. தேசியக்கொடி ஏற்றப்பட்டபோது காவல் பேண்டு வாத்தியக் குழுவினர் தேசிய கீதத்தை இசைத்தனர். அனைவரும் எழுந்து நின்றனர்.
அதன்பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-
நாட்டு மக்கள் அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்துகள். சுதந்திர தினத்தில் விடுதலை வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோரை வணங்குகிறேன். விடுதலைக் காற்றை சுவாசிக்க காரணமாக விளங்கும் தியாகிகளை போற்றுவோம். அனைத்து சமூக மக்களும் ரத்தம் சிந்தி பெற்றது நம் விடுதலை
மாநில முதல்-அமைச்சர்களும் கொடி ஏற்ற உரிமையைப் பெற்றுத் தந்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி. அனைவருக்குமான நாடாக இந்தியா இருக்க வேண்டும் என பல தலைவர்கள் கனவு கண்டனர். 1967-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வரும் முன் தியாகிகளுக்காக 3 நினைவு மண்டபங்கள் இருந்தன. தற்போது திமுக ஆட்சியில் பெரும்பாலான தியாகிகளுக்கு மணிமண்டபம், சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தியாகிகளைத் தொடர்ந்து போற்றிவரும் அரசாக திமுக அரசு விளங்குகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி கடந்த 14 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை இலக்கத்தில் உள்ளது. ஓட்டுநர் பயிற்சி பெற மாநில அளவில் பயிற்சி மையம் அமைக்கப்படும். மண்டல அளவில் இரண்டு பயிற்சி மையங்கள், மாவட்டத்திற்கு ஒரு ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி தொடங்கப்படும்.
மத்திய-மாநில அரசுகளுக்கு இடையான அதிகாரம் மற்றும் நிதிப் பகிர்வில் மாநில அரசின் பங்கை மீட்டெடுத்திட அரசியல் சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்பது தான் ஒரே தீர்வு. இதை நிறைவேற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என இவ்விடுதலை நாளில் உறுதியாக உள்ளது என்றார்.
அதனைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்:-
விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு அரசு வழங்கும் மாதாந்திர ஓய்வூதியம் ரூபாய்.22ஆயிரமாக உயர்த்தப்படும்.
தியாகிகளுக்கான மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூபாய்.12 ஆயிரமாக வழங்கப்படும் மருதுபாண்டியர், கட்டபொம்மன் உள்ளிட்ட தியாகிகளின் வழித்தோன்றல் பெறப்படுகிறது. மாதாந்திர ஓய்வூதியம் ரூபாய்.11ஆயிரமாக உயர்த்தப்படும். இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற தமிழ்நாட்டின் வீரர்களுக்கு மாதாந்திர நிதியுதவி ரூபாய்.15ஆயிரமாக உயர்த்தப்பட்டது.
இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற வீரர்களின் கைம்பெண்களுக்கு மாதாந்திர நிதி ரூபாய்.8,000ஆக உயர்த்தி வழங்கப்படும்.
முன்னாள் படை வீரர்கள் வசதிக்காக சென்னை மாதவரத்தில் தங்கும் விடுதி அமைக்கப்பட்டுள்ளது
முன்னாள் படை வீரர்கள் தங்கும் விடுதி 33ஆயிரம் சதுர அடி பரப்பில் ரூபாய்.22 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு விடியல் பயணம் விரிவாக்கம் செய்யப்படும். தமிழ்நாட்டில் வளர்ச்சிக்கு மாபெரும் பங்கான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருதையும்.
துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருதை பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கும் வழங்கினார். இஸ்ரோ தலைவர் முனைவர். நாராயணனுக்கு டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருதை வழங்கினார் பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பனுக்கு முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதை வழங்கினார்.
கருத்துகள்