அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை மற்றும் அனைவரின் முயற்சி என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடியின் உரைகள் அடங்கிய தொகுதிகளை குடியரசு துணைத்தலைவர் வெளியிட்டார்
‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை மற்றும் அனைவரின் முயற்சி’ என்ற தலைப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகள் அடங்கிய இரண்டு தொகுதிகளை குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று வெளியிட்டார். பிரதமரின் இரண்டாவது ஆட்சிக் காலத்தின் 4 மற்றும் 5-ம் ஆண்டுகளில் அவர் ஆற்றிய உரைகள் இந்தத் தொகுதிகளில் இடம்பெற்றுள்ளன.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் புதுதில்லியில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், புனித பண்டிகையான நவராத்திரியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு, தாம் பதவியேற்ற பின் கலந்து கொள்ளும் முதல் பொது நிகழ்ச்சி இது என்று குறிப்பிட்டார்.
நாட்டிற்கு பிரதமர் அளித்த பங்களிப்புகள், தொலைநோக்குப் பார்வை மற்றும் கனவுகளைப் பற்றி புரிந்து கொள்ள இந்த இரண்டு தொகுதிகள் அடங்கிய புத்தகங்கள் பேருதவியாக இருக்கும் என்றார் அவர். பிரதமர் திரு மோடி, "உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு ஒரு வாழும் ஊக்கசக்தியாக விளங்குகிறார். மக்கள் தங்கள் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்த தனது சொந்த வழிகாட்டுதல்கள் மூலம் ஊக்குவிக்கிறார். சாமானிய மக்களின் பிரதிநிதி என்ற நிலையில் இருந்து உண்மையான மக்கள் தலைவராக வளர்ந்துள்ள அவர், சாத்தியமற்றதை எவ்வாறு சாத்தியமாக்க முடியும் என்பதை உறுதியுடன் எடுத்துரைத்துள்ளார்" என்று குடியரசு துணைத்தலைவர் கூறினார்.
11 கருப்பொருட்கள் சார்ந்த பிரிவுகளை உள்ளடக்கிய இரண்டு தொகுதிகளில், 2022-23ம் ஆண்டிற்கான தொகுதியில் 76 உரைகளும், 12 மனதின் குரல் நிகழ்ச்சி உரைகளும், 2023-24ம் ஆண்டிற்கான தொகுதியில் 82 குறைகளும் 9 மனதின் குரல் உரைகளும் இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டிய குடியரசு துணைத்தலைவர், இவை அனைத்தும் பிரதமரின் தெளிவான சிந்தனை, தொலைநோக்குப் பார்வை மற்றும் உள்ளடக்கிய நிர்வாகத்தில் அவரது உறுதிப்பாடு ஆகியவற்றை பிரதிபலிக்கின்றன, என்றார். உரைகளை மிகுந்த சிரத்தையுடன் தேர்வு செய்து அவற்றை வடிவமைப்பதற்காக தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் வெளியீட்டு பிரிவை குடியரசு துணைத்தலைவர் பாராட்டினர்.
‘எழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின்!’ என்ற சுவாமி விவேகானந்தரின் பொன்மொழியைக் குறிப்பிட்டு, பிரதமரின் ஒவ்வொரு உரையும் விடாமுயற்சி, உறுதிப்பாடு மற்றும் மக்கள் நலன் சார்ந்த செய்தியையே தாங்கி இருக்கிறது என்று தெரிவித்தார். அரசின் திட்டங்கள் சமூகத்தின் கடைகோடி நபரையும் சென்றடைவதை உறுதி செய்யும் பிரதமர் திரு மோடியின் தொலைநோக்குப் பார்வையை அவரது உரைகள் பிரதிபலிப்பதாக குடியரசு துணைத்தலைவர் கூறினார்.
ஒரே பாரதம் உன்னத பாரதம், காசி தமிழ் சங்கமம், பழங்குடியின கவுரவ தினம், ராஜ பாதைக்கு கடமை பாதை என்று பெயர் மாற்றியது உள்ளிட்ட முன்முயற்சிகளின் வாயிலாக இந்தியாவின் கலாச்சார அடையாளத்தை மீட்டெடுப்பதில் பிரதமரின் பங்கை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதை பற்றி பேசுகையில், ஸ்டார்ட் அப் இந்தியா, ஃபிட் இந்தியா, கேலோ இந்தியா, திறன் இந்தியா மற்றும் வேலை வாய்ப்பு திருவிழாக்கள் முதலிய முன்முயற்சிகளை பாராட்டி 2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைப்பதற்கு இவை அடிப்படைத் தூண்களாக விளங்கும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்பு, ரயில்வே, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், மாநிலங்களவை துணைத்தலைவர் திரு ஹரிவன்ஷ், குடியரசு துணைத் தலைவரின் செயலாளர் திரு அமித் கரே, தகவல் ஒலிபரப்பு அமைச்சக செயலாளர் திரு சஞ்சய் ஜாஜூ மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.



கருத்துகள்