பத்ம விபூஷண் பண்டிட் சன்னுலால் மிஸ்ரா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்
பத்ம விபூஷண் பண்டிட் சன்னுலால் மிஸ்ரா மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பண்டிட் சன்னுலால் மிஸ்ராவின் மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றும் அவர் தனது வாழ்க்கையை கலை மற்றும் கலாச்சாரத்திற்காக அர்ப்பணித்தவர் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
பண்டிட் மிஸ்ரா தனது குரலாலும் பாடல்களாலும் காசியின் மரபுகளையும் பண்டிகைகளையும் வளப்படுத்தினார் என்று குறிப்பிட்டுள்ள திரு மோடி, அவரது இசை காசியில் என்றென்றும் எதிரொலிக்கும் என்று கூறியுள்ளார்.
தனது தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட பிரதமர், பண்டிட் மிஸ்ரா அவர்களை பலமுறை சந்தித்து அவரது அன்பைப் பெறும் பாக்கியம் தனக்குக் கிடைத்ததாகக் கூறினார். 2014 தேர்தலில் பண்டிட் சன்னுலால் மிஸ்ரா தன்னை முன்மொழிந்தவர்களில் ஒருவராக இருந்தார் என்பதை நினைவுகூர்ந்த பிரதமர், காசியுடன் பண்டிட் மிஸ்ராவுக்கு இருந்த ஆழமான, உணர்ச்சிபூர்வமான தொடர்பு உண்மையிலேயே தனித்துவமானது என்றார்.
காசியின் வளர்ச்சி மற்றும் மரபுகள் குறித்து பண்டிட் மிஸ்ரா அடிக்கடி மதிப்புமிக்க ஆலோசனைகளை வழங்கியதாக பிரதமர் மேலும் கூறினார். மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளின் போது அவர் தமது இல்லத்திற்கு வருகை தந்ததை நினைவு கூர்ந்துள்ள திரு மோடி, காந்தி ஜெயந்தி அன்று இந்த செய்தியை எழுதும்போது அந்த நினைவு மிகவும் உணர்வுபூர்வமாகத் தெரிகிறது என்று கூறியுள்ளார்.
பண்டிட் மிஸ்ரா இப்போது உடல் அளவில் இல்லாவிட்டாலும், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இசை ஆர்வலரும் அவரது வாழ்க்கையிலிருந்து தொடர்ந்து உத்வேகம் பெறுவார்கள் என்றும், ஒவ்வொரு கொண்டாட்டத்திலும் அவரது பஜனைகள் மூலம் காசி அவரை நினைவுகூரும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்
பண்டிட் மிஸ்ராவின் மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு தமது இரங்கலைத் தெரிவித்துள்ள பிரதமர், அவர்களின் துயரம் தமது துயரம் என்றும் கூறியுள்ளார். பாபா விஸ்வநாத், பண்டிட் சன்னுலால் மிஸ்ராவுக்கு தமது பாதங்களில் ஓர் இடமளித்து, இந்த துயர நேரத்தில் அவரது நலம் விரும்பிகளுக்கு வலிமை அளிக்க வேண்டும் என்று பிரதமர் பிரார்த்தனை செய்துள்ளார்.
கருத்துகள்