டெல்லி யூனியன் பிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய
மதுபானக்கொள்கை ஊழல் விவகாரத்தில் மாநிலத்தில் முதல்வராக இருந்த அர்விந்த் கெஜ்ரிவால் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதவியை ராஜினாமா செய்தார். டெல்லி அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என 2021-22 ஆம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த அர்விந்த் கெஜ்ரிவால் அரசு புதிய மதுபானக்கொள்கையைக் கொண்டு வந்தார் .
இதில் பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கப்பிரிவு தெரிவித்தது. சௌத் பிளாக் என்ற நிறுவனம் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு ரூபாய் .100 கோடி லஞ்சம் கொடுத்தாக அமலாக்கப்பிரிவு குற்றம்சாட்டியது.
மேலும் தனியாருக்கான லாபம் 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதாக சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 2022-ஆம் ஆண்டு டெல்லி தலைமைச் செயலாளர் மதுபான கொள்கையில் முறைகேடு நடப்பதாக கூறி ஆளுநர் சக்சனாவிற்கு அறிக்கை அனுப்பியதன் அடிப்படையில் ஆளுநர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்த ஊழலில் வழக்கில் முதல் குற்றவாளியாக அப்போதைய கலால் துறை அமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா சேர்க்கப்பட்டு 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிபிஐயால் கைது செய்யப்பட்டார். 17 மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருந்தார். 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த ஊழல் சதியில் முதன்மையானவர் அர்விந்த் கெஜ்ரிவால் எனக் கூறி சிபிஐ அவரைக் கைது செய்தது. அவரும் 6 மாதம் சிறையில் இருந்தார். அதன் பிறகு நடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியைத் தழுவியது. அவர்கள் மீதான வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்ததில் தீர்ப்புக் கூறிய நீதிமன்றம், அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் மனீஷ் சிசோடியா ஆகிய இரண்டு பேரையும் இவ்வழக்கிலிருந்து விடுதலை செய்து உத்தரவிட்டது. டெல்லி நீதிமன்றம் தனது உத்தரவில் சிபிஐக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்தது. `அரசு தரப்பு தனது குற்றச்சாட்டுகளை நம்பகமான ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தவறிவிட்டது' என்று தீர்ப்பளித்தது. பெரிய சதி மற்றும் குற்றவியல் நோக்கம் பற்றிய கூற்றுக்கள் நீதித்துறை ஆய்வுக்கு நிற்காது என்றும் நீதிமன்றம் கூறியது.
``கெஜ்ரிவாலுக்கு எதிரான கடுமையான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தேவையான ஆதாரங்கள் வேண்டும்" என்று கூறிய டெல்லி நீதிமன்றம், ``மத்திய சதித்திட்டத்தில் பங்கு வகித்ததற்கான காரணத்தை ஆதாரங்கள் இல்லாமல் உறுதி செய்ய முடியாது" என்றும் கூறியது. ``அரசுத் தரப்பு கூற்றுகள் ஆதாரங்களுடன் வழங்கப்படவில்லை என்று கண்டறியப்பட்டால், சி.பி.ஐ மீதான பொதுமக்களின் நம்பிக்கை பாதிக்கப்படும்" என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
டெல்லி கலால் கொள்கை வழக்கில் மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) விசாரணை குறித்து டெல்லி நீதிமன்றம் கடுமையான கேள்விகளை எழுப்பி தனது கண்டனத்தை தெரிவித்தது. மேலும், கலால் கொள்கையை உருவாக்கும் போது பல நிலைகளில் ஆலோசனை நடத்தப்பட்டதாக ஆவணங்கள் கூறுகின்றன என்று நீதிமன்றம் தெரிவித்தது. தீர்ப்பைக் கேட்டதும் அர்விந்த் கெஜ்ரிவால் ஆனந்தக் கண்ணீர் விட்டார். இது குறித்து அவர் உணர்ச்சி பெருக்குடன் கூறுகையில்,''இந்த வழக்கு சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் சதி. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை அதிகாரத்திலிருந்து வெளியேற்ற பாஜக திட்டமிட்டது. அதிகாரத்திற்காக யாரும் நாட்டுடனும் அரசியலமைப்புடனும் இந்த வழியில் விளையாடக்கூடாது. உண்மை வெல்லும் என்று நாங்கள் எப்போதும் கூறி வந்தோம். எங்களுக்கு நீதி வழங்கிய நீதிபதிக்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன். உண்மை வென்றது" என்று கெஜ்ரிவால் கூறினார்.டெல்லி கலால் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 21 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு புலனாய்வு அமைப்பு ஆயிரக்கணக்கான பக்கங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலும், அதில் சட்ட ரீதியான ஆதாரம் இல்லையென்றால் நீதிமன்றம் அதைக் கண்மூடித்தனமாக ஏற்காது என்பதை இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்துகிறது.
பாஜகவின் ஏவல் அமைப்புகளுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு
இந்திய நீதித்துறை வரலாற்றில் ஒரு மிக முக்கியமான மைல்கல்லாகும்.
இன்றைக்கு நீதிமன்றமே நற்சான்றிதழ் தந்துள்ளது, ஆம் ஆத்மி தலைவர்களுக்கு…!
’’நிரபராதிகள், ஊழல் செய்யவில்லை. சிபிஐ, வழக்கில் உள்ள ஓட்டைகளை மறைக்க 'அப்ரூவர்' மட்டுமே நம்பியுள்ளது. இது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள தனிநபர் சுதந்திரத்திற்கு எதிரானது..’’ என நல்ல தீர்ப்பு வந்துள்ளது, காலம் கடந்து!
நான் அறிந்த வரை சமீப காலத்தில் ஓரளவு நேர்மையான ஆட்சியைக் கொடுத்தவர் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்!
இந்தியாவின் தலைநகரிலேயே நம்மை தலை எடுக்கவிடாமல் தடுக்கிறதே ஆம் ஆத்மி என பாஜக தவித்தாலும், தொடர்ந்து மூன்று தேர்தல்களில் கேஜ்ரிவாலையே முதல்வராகத் தேர்ந்தெடுத்தனர், டெல்லி மக்கள்.
யூனியன் பிரதேசம் என்பதால் காவல்துறை அதிகாரம் கிடையாது. நில உரிமையும் கிடையாது. இந்தச் சூழலிலும், தரமான இலவசக் கல்வி, சிறந்த கட்டணமில்லாத மருத்துவம், குறைந்த கட்டிணத்தில் மின்சாரம், நடைபாதை வியாபாரிகளிடம் மாமூல் வாங்கியதை ஒழித்தது.. என நிர்வாக சாதனைகளை படைத்தது ஆம் ஆத்மி.
அதன் நேர்மையான ஆட்சி மீது களங்கம் கற்பித்து, அதனை கேரக்டர் அசாசினேஷன் செய்தால் தான் நாம் ஆட்சிக்கு வர முடியும் என சி.பி.ஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றை ஏவி, ஆம் ஆத்மி அரசு அறிமுகம் செய்த புதிய மதுபான கொள்கையில் (2022) முறைகேடு நடந்ததாக புகார் உருவாக்கி, அது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்தது.
இந்த வழக்கில் அப்போது டெல்லியின் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட ஐந்து முக்கிய ஆம் ஆத்மி தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து என்னென்னவோ அவதூறுகள், அவமானங்கள் அடுத்தடுத்து ஆம் ஆத்மி தலைவர்களை அலைக்கழித்தது.
இதையே தேர்தல் பிரச்சாரத்தில் ஊடக பலத்தோடு முன்னிறுத்தி ஆம் ஆத்மியை தோற்கடித்தது பாஜக.
சிபிஐ விசாரித்த வழக்கில் இருந்து ஆம் ஆத்மி தலைவர்கள் உள்ளிட்ட 21 பேரையும் நிரபராதிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்து இப்போது முற்றிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பாஜகவை எதிர்த்து சும்மா வசனங்கள் பேசியவரல்ல, அரவிந்த் கேஜ்ரிவால். உண்மையிலேயே எதிர்த்தார். இந்து மத நம்பிக்கையாளர் என்றாலும், இஸ்லாமியர்களிடம் இணக்கம் பாராட்டி அதிகாரத்திலும் பிரதிநிதித்துவம் தந்தார்.
உண்மையாகவே களத்தில் பாஜகவை எதிர்க்கும் ஜார்கண்ட் ஹேமந்த் சோரன் கைது, சிறை என்று அவரும் பலத்த எதிர்ப்புகளை எதிர் கொண்டார். மேற்கு வங்கத்தில் மம்தா நாளும், பொழுதும் களத்தில் பாஜகவோடு மல்லுகட்டி வருகிறார். பீகார் தேர்தலின் போது தேஜஸ்வி யாதவ் எதிர்கொண்ட சவால்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
தமிழகத்தில் என்ன நிலைமை? இங்கு நடக்காத மதுபான ஊழலா?
ஆயிரக்கணக்கான கல், மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மீறி இயற்கை வளம் மோசமாக சுரண்டப்பட்டு நடக்கும் ஊழல்கள் கொஞ்சமா?
20 வருடங்களாக வழக்கு நடத்தி தண்டிக்கப்பட்ட அமைச்சர் பொன்முடிக்கு உடனே விடுதலை கிடைத்தது.
ஒரு வருடத்திற்கும் மேலாக கே.என். நேரு விவகாரம் கேர்லஸாக அணுகப்படுகிறது. அவ்வளவு ஏன்?
ஒவ்வொரு துறையிலும் உச்சகட்ட ஊழல்கள் அரங்கேறியுள்ளன…!
ஆனால், ‘’காங்கிரசும் திமுகவும் பிரியக் கூடாது’’ பதிவிடுகிறார் குருமூர்த்தி. ‘’அடுத்து திமுகவே ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளது’’ என அமித்ஷாவே ஒ.பன்னீர் செல்வத்துக்கு நம்பிக்கை தந்துள்ளார்!
என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை….!


கருத்துகள்