தொழிலதிபரைக் கடத்தி சொத்தை அபகரித்த வழக்கில் இந்து மகா சபை தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை அயப்பாக்கம் தொழிலதிபரான ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரைக் 2019 ஆம் ஆண்டு கடத்திச் சொத்துக்களை அபகரித்ததாக காவல்துறை உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உள்ளிட்டவர்கள் மற்றும் கோடம்பாக்கம் ஸ்ரீ, தொழிலதிபர் வெங்கடேஷ் சீனிவாசராவ் உட்பட 10 நபர்கள் மீது அளிக்கப்பட்ட புகாரில் காவல்துறை அதிகாரிக்கு சம்பந்தமிருப்பதால் வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டதனையடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் சம்பந்தப்பட்ட காவல்துறை உதவி ஆணையர் சிவகுமார், ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உள்ளிட்ட பத்து நபருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர். கோடம்பாக்கம் ஸ்ரீ மட்டும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. சிபிசிஐடி காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தொழிலதிபர் சீனிவாசராவ் தான் கொடுத்த கடனுக்காக தொழிலதிபர் ராஜேஷுக்கு ரவுடிகள் மூலமாகவும், காவல்துறை அதிகாரிகள் மூலமாகவும் பிரச்சனை கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. காவல்துறை அதிகாரிகளுக்குத் தொடர்பு இருந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக தமிழக டிஜிபிக்கு விரிவாக அனுப்பப்பட்ட அறிக்கையை ஆய்வு செய்த தமிழக டிஜிபி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டதன் அடிப்படையில், திருமங்கலம் காவல் நிலைய உதவி ஆணையர் சிவக்குமார், காவல் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், அப்போது காவலர்களாக இருந்த கிரி, பாலா, ஷங்கர் மற்றும் அனைத்து இந்திய இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ, சீனிவாசராவ், அவரது மகன் தருண் கிருஷ்ண பிரசாத், சிவா உள்ளிட்ட பத்து நபர்கள் மீது சிபிசிஐடி பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்தனர். பொய்யான ஆவணத்தைத் தயாரித்தல், ஏமாற்றுவதற்காக பொய்யாகத் தயாரிக்கப்பட்ட ஆவணத்தை உண்மை எனப் பயன்படுத்துதல், மோசடி, கூட்டு சதி என ஐந்து பிரிவுகளின் படி
சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில் சம்பந்தப்பட்ட பத்து பேரையும் கைது செய்யும் பணியில் சிபிசிஐடி காவல்துறையினர் மும்முரமாகச் செயல்பட்டு தலைமறைவாக இருந்த அனைத்திந்திய இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ யை இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை நடத்தி, பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கோடம்பாக்கம் ஸ்ரீயை ஜூலை மாதம்27-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் மீதமுள்ள காவல்துறை அதிகாரிகள் உள்பட 9 பேரை தனிப்படை தீவிரமாகத் தேடி வருவதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், எழும்பூர் சிபிசிஐடி நீதிமன்ற நீதிபதி குடியிருப்பு வளாகத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் மீது கோடம்பாக்கம் ஸ்ரீயின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், கேமராவை உடைத்ததால் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது. அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்