இலவசப் பயணம் மேற்கொள்ளும் பெண்களிடம் நடத்துனர்கள், ஓட்டுநர்கள் கண்ணியக்குறைவாக நடந்து கொள்ளக் கூடாது சுற்றறிக்கை
தமிழ்நாடு அரசு நகர் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும்
பெண்களிடம் நடத்துனர்கள், ஓட்டுநர்கள் கண்ணியக்குறைவாக நடந்து கொள்வதாகங் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கும் மகளிர் பயணிகளை முறையாக நடத்த வேண்டுமென ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கு சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவுரை வழங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளதில், பயணிகள் பேருந்திற்காக நிற்கும்போது பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். ஒரு பயணி நின்றாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும். ஓட்டுநர் பேருந்தை குறித்த இடத்தில்தான் நிறுத்த வேண்டும். பேருந்தை நிறுத்ததிற்கு முன்போ, தாண்டியோ நிறுத்தி பயணிகளுக்கு இடையூறு செய்யக் கூடாது.
நடத்துனர்கள் பெண் பயணிகளிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது. உபசரிப்புடனும், அன்புடனும் நடந்து கொள்ள வேண்டும். நடத்துனர்கள் வேண்டுமென்றே பேருந்தில் இடம் இல்லை என்று கூறி ஏறும் பெண் பயணிகளை இறக்கி விடக்கூடாது. வயது முதிர்ந்த பெண் பயணிகளுக்கு இருக்கையில் அமர உதவி புரிய வேண்டும். பெண் பயணிகள் ஏறும் போதும், இறங்கும் போதும் கண்காணித்து பாதுகாப்பாக இறக்கி விட வேண்டும் என்பன உள்ளிட்ட அறுவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இது பலரும் பாராட்டும் நடவடிக்கையாகும்.
கருத்துகள்