ஹோவர்கிராப்ட் பராமரிப்பு மையம்: மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை தளத்தில் தொடக்கம்
மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர பாதுகாப்புப்படை தளத்தில், ‘ஏர் குஷன் வாகன’ (ACV ஹோவர்கிராப்ட்) ஹேங்கர்-ஐ (பராமரிப்பு மையம்) இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குனர் திரு.கிருஷ்ணசாமி நடராஜன், கடலோர காவல்படை, கடற்படை மற்றும் மத்திய/மாநில அரசு அதிகாரிகள் முன்னிலையில், தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் டாக்டர் சி.சைலேந்திர பாபு இன்று தொடங்கி வைத்தார்.
இந்த ஏசிவி ஹேங்கர், நிலத்தில் 15 மீட்டர் நீளத்திலும், கடலுக்குள் 7.5 மீட்டர் நீளத்திலும் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் ஹோவர் கிராப்ட்டை பாதுகாப்பாக கையாள முடியும். இந்த ஹேங்கரில் ஹோவர்கிராப்ட்டை பாதுகாப்பாக நிறுத்த முடியும் மற்றும் பராமரிக்க முடியும்.
இதன் மூலம் ஹோவர்கிராப்ட்டின் ஆயுள் அதிகரிக்கும். அரசு செலவினத்தை குறைக்க, இந்த ஹேங்கரில் பழுது பார்க்கும் பணிகளையும் மேற்கொள்ள முடியும்.
ஏசிவி ஹேங்கர் மற்றும் அது தொடர்பான கட்டமைப்புகள், இந்திய கடலோர காவல்படையால் உருவாக்கப்பட்டது. நமது நாட்டின் கடல்சார் நலன்களுக்கு சேவையாற்றுவதிலும் மற்றும் பாதுகாப்பதிலும் இந்திய கடலோர காவல்படை உறுதியாக உள்ளது.
கருத்துகள்