பாதுகாப்பு அமைச்சகம் பசிபிக் விமானப்படை தலைவர்களின் கருத்தரங்கு 2021
ஹவாயில் உள்ள ஜாயின்ட் பேஸ் பியர்ல் ஹார்பர்-ஹிக்காமில் 2021 ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 2 வரை நடைபெற்ற பசிபிக் விமானப்படை தலைவர்களின் கருத்தரங்கு 2021-ல் இந்திய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஆர் கே எஸ் பதூரியா கலந்து கொண்டார்.
“பிராந்திய நிலைத்தன்மைக்காக ஒத்துழைப்பை மேம்படுத்துதல்” எனும் தலைப்பிலான இந்த நிகழ்ச்சியில், இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் விமானப்படை தலைவர்கள் கலந்து கொண்டார். இந்த கருத்தரங்கின் தலைவராக இந்திய விமானப்படை தளபதி நியமிக்கப்பட்டார்.
விவாதங்கள், பயிற்சிகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு, வான் விழிப்புணர்வு, மனிதநேய மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளில் விமானப்படைகளுக்கிடையே ஒத்துழைப்பு உள்ளிட்ட தலைப்புகளில் சிறப்புரைகள் ஆகியவை கருத்தரங்கின் போது நடைபெற்றன.
அமெரிக்க விமானப்படையின் தலைவர் ஜெனரல் சார்லஸ் கியூ பிரவுன் மற்றும் பசிபிக் விமானப்படைகளின் தளபதி ஜெனரல் கென்னெத் எஸ் வில்ஸ்பாக் ஆகியோரை இந்திய விமானப்படை தளபதி சந்தித்தார். ராணுவ ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து 11 இதர நாடுகளின் விமானப்படை தளபதிகளுடன் இருதரப்பு மற்றும் பலதரப்பு கூட்டங்களையும் அவர் நடத்தினார்.
ஒத்த கருத்துடைய நாடுகள் தங்களது பரஸ்பர புரிதலை மேம்படுத்திக் கொள்வதற்கும், உறவுகளை ஆழப்படுத்திக் கொள்வதற்குமான வாய்ப்பாக பசிபிக் விமானப்படை தலைவர்களின் கருத்தரங்கு 2021 அமைந்தது.
கருத்துகள்