முதியவர்களை குழந்தைகள் போல கவனமாகப் பார்த்துக் கொள்ள சித்த மருத்துவர் டாக்டர் ஆ.இராஜேந்திரகுமார் வேண்டுகோள்
முதியவர்கள் குழந்தைகள் போன்றவர்கள். கூடுதல் கவனத்துடன் அவர்களைப் பராமரிக்க வேண்டும்.
அவர்கள் கிடைத்தற்கரிய பொக்கிஷம். அவர்களின் முதுமையையும் இயலாமையையும் காரணம் காட்டி அவர்களை ஒதுக்குவது சமுதாய சீர்கேடாகும். முதியோர் இல்லங்கள் தாங்கள் பராமரிக்கும் முதியவர்களின் மன நலத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என்று புதுச்சேரியில் உள்ள மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் ஆராய்ச்சி அலுவலரும் தலைவருமான டாக்டர் ஆ.இராஜேந்திரகுமார் கேட்டுக்கொண்டார்.
மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும் கோர்க்காடு புஷ்பகாந்தி முதியோர் அரவணைப்பு இல்லம் ஆகியவை இணைந்து இன்று (02.09.2021) முதியோர் இல்ல வளாகத்தில் நடத்திய நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் அமுக்கரா சூரண மாத்திரை வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய போது டாக்டர் ராஜேந்திர குமார் இவ்வாறு தெரிவித்தார்.
இந்திய சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டின் பெருவிழாவையொட்டி ஆயுஷ் அமைச்சகம் நாடு முழுவதும் இந்திய மருத்துவ முறைகளில் உள்ள மிக முக்கியமான நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் மருந்துகளை இலவசமாக வழங்கும் பணியைத் தொடங்கியுள்ளது. மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் சார்பில் அமுக்கரா சூரண மாத்திரை வழங்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக முதியோர்களுக்கு இம்மாத்திரைகளை வழங்கும் இந்த நிகழ்ச்சி இன்று நடத்தப்பட்டது.
மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி அலுவலர் டாக்டர் இரத்தினமாலா தனது உரையில் இம்மருந்து அமுக்கரா, கிராம்பு, சிறுநாகம்பூ, சுக்கு, மிளகு, ஏலக்காய், திப்பிலி ஆகிய 7 மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட கூட்டு மருந்தாகும் எனத் தெரிவித்தார். இம்மருந்து வயிற்றுப் புண், ரத்தசோகை, நரம்பு தளர்ச்சி, தூக்கமின்மை, முதியோரின் மறதி ஆகியவற்றுக்கு பயன்படுவதோடு பொதுவான நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கிறது என்று குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் மக்கள் தொடர்பு கள அலுவலக துணை இயக்குநர் டாக்டர் தி.சிவக்குமார் வரவேற்புரை ஆற்றினார். முதியவர்களை எந்தவிதமான தொற்று நோய்களும் பாதிக்காமல் பார்த்துக் கொள்வது சவாலான காரியம். முதியவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் வழக்கமானதுதானே என குடும்பத்தினர் கவனிக்காமல் விட்டுவிடுகின்றனர். அது சரியான அணுகுமுறை அல்ல. முதியோருக்கு ஏற்ற வாழ்க்கை முறையை குடும்பத்தினர் வழங்கி அவர்களின் மகிழ்ச்சியை உறுதி செய்ய வேண்டும் என்று சிவக்குமார் கேட்டுக்கொண்டார்.
புஷ்பகாந்தி முதியோர் இல்ல செயலாளர் கோ.மோகன் நன்றியுரை கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கள விளம்பர உதவியாளர் மு.தியாகராஜன் செய்திருந்தார்.
மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் ஆராய்ச்சி அலுவலரும் தலைவருமான டாக்டர் ஆ.இராஜேந்திரகுமார் முதியோர் இல்லவாசிகளுக்கு அமுக்கரா சூரண மாத்திரைகள் கொண்ட குப்பிகளை வழங்குகிறார்.
மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி அலுவலர் டாக்டர் இரத்தினமாலா முதியோர் இல்லவாசிகளுக்கு அமுக்கரா சூரண மாத்திரைகள் கொண்ட குப்பிகளை வழங்குகிறார்.
கருத்துகள்