குடியரசுத் தலைவர் செயலகம் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு குடியரசுத் தலைவர் வாழ்த்து
ஆசிரியர் தினம்
கொண்டாடப்படவிருப்பதை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
“தலைசிறந்த கல்வியாளர், தத்துவஞானி மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் ஆசிரியர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அனைத்து ஆசிரியர்களுக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் குழந்தைகளின் அறிவாற்றல் மற்றும் ஒழுக்க மேம்பாட்டில் முன்னிலை வகிக்கும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பை கௌரவிக்கும் தருணமாக ஆசிரியர் தினம் அமைகிறது. இந்திய பாரம்பரியத்தில் இறைவனுக்கு சமமாக ஆசிரியர்கள் கருதப்படுகிறார்கள்.
கொவிட்-19 தொற்றின்போது ஆசிரியர்கள் பின்பற்றிய கற்பித்தல் வழிமுறையும் மாபெரும் மாற்றத்தை சந்தித்தது. பொதுமுடக்கத்தின் போது இணையவழி கல்வி அறிமுகப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட ஒவ்வொரு சவாலையும் அவர்கள் ஏற்றுக்கொண்டனர். மாணவர்களுக்கு தங்குதடையற்ற கல்வியை வழங்க தரமான முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டனர்.
வலுவான மற்றும் வளமான நாட்டின் கட்டமைப்பை நோக்கிய விலைமதிப்பில்லாத பங்களிப்பை வழங்கிவரும் ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்திற்கு இந்தத் தருணத்தில் நாம் அனைவரும் நமது நன்றியைத் தெரிவிப்போம்.”
பிரதமர் அலுவலகம் சார்பில்
ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர்களுக்கு பிரதமர் வாழ்த்து; முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதையும் செலுத்தியுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள தொடர் சுட்டுரைச் செய்திகளில்,
“இளம் மனங்களை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்தினருக்கு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துகள். கொவிட்-19 தருணங்களில் மாணவர்களின் கல்விப் பயணம் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்காக புதுமையான வழிகளை உருவாக்கிய ஆசிரியர்களுக்கு பாராட்டுகள்
டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளன்று அவருக்கு மரியாதை செலுத்துவதுடன் நாட்டிற்கு அவர் அளித்த பங்களிப்பு மற்றும் போற்றத்தக்க ஞானத்தை நினைவு கூர்கிறேன்”, என்று குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்