கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது நாளாகத் தொடரும் நாடாளுமன்ற உறுப்பினரின் உள்ளிருப்புப் போராட்டம்
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது நாளாகத் தொடரும் நாடாளுமன்ற உறுப்பினரின் உள்ளிருப்புப் போராட்டம்.
கரூர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் . செ.ஜோதிமணி தன் அலுவலகப் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உறுப்புகள் பொருத்துவதற்காக மத்திய அரசின் சமூகநீதி - அதிகாரமளித்தல் துறையின் மூலம் செயல்படுத்தப்படுகிறதிட்டத்தின்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சியின் மூலமும் பரிந்துரை மூலமும், பெரிய அளவில் முகாம் நடத்தி பயனாளிகள் கண்டறியப்படுவதுண்டு.
அதன்படி, கரூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் செ.ஜோதிமணி ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு தேவை இருப்பதை அறிந்து கரூர் மக்களவைத் தொகுதியில் அடங்கிய திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த பகுதிகளில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்குத் தெரிவித்து, சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பலருக்கு பயன் கிடைக்க செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தன்னை அலட்சியம் செய்வதாகவும் மைய அரசின் உதவியை மக்களுக்குச் செல்லவிடாமல் தடுப்பதாகவும் குற்றம்சாட்டுகிறார் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் செ.ஜோதிமணி.
இந்த பிரச்னைக்குக் காரணம், இது தொடர்பான தகவல்பரிமாற்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜோதிமணிக்கு ஆட்சியர் அனுப்பிய விளக்கக் கடித வாசகம்தான் என்கிறார்கள், மாவட்டத்திலுள்ள பலர்.
மாநில அரசாங்கத்தின் மூலம் இப்படியான முகாம்கள் நடத்தப்படுவதாகவும் தேவைப்பட்டால் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜோதிமணியின் யோசனைப்படி முகாம் நடத்தலாமென்றும் அவர் குறிப்பிட்டிருப்பதை, செ.ஜோதிமணி பிரச்னையாக எடுத்துக்கொண்டுள்ளார் நான் எனது கரூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6800 கிராமங்களில் 6300 கிராமங்களுக்கு போய் மக்களைச் சந்தித்திருக்கிறேன். உதவி கேட்டு மனு அளித்த ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கையைக் கண்டு அதிர்ந்து போனேன். தேவை இருக்கிறது என்று தெரியாமலா இந்தத் திட்டத்தைக் கேட்டு வாங்கியிருப்பேன்?” என்பது அவரின் பதில் வாதம்.
”மத்திய அரசின் திட்டத்தைச் செயல்படுத்த மறுக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் உள்ளதா?எதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் இப்படியொரு பதில் கடிதம் கொடுக்கிறார்? மத்திய அரசின் திட்டமானாலும், தமிழக அரசின் திட்டமானாலும் அடிப்படையில் மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படுவது தான். கரூருக்கு மத்திய அரசின் திட்டம் இப்பொழுது தேவையில்லை என்று எதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் முடிவுக்கு வந்தார்?
மத்திய அரசின் சமூக நீதி அமைச்சகத்திடம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க ADIP முகாம் நடத்த வேண்டுமென்று கேட்டுப் பெற்று வந்தேன். கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை ஆட்சியர்கள் முகாம் நடத்தும் போது ஏன் கரூர் மாவட்ட ஆட்சியர் நடத்தவில்லை?” என வரிசையாக கேள்விகளை அடுக்குகிறார், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் செ.ஜோதிமணி.
ஆர்ப்பாட்டம் செய்த செ.ஜோதிமணியிடம், அவருக்கு முன்பாக தரையில் அமர்ந்து சமாதானப்படுத்த முயன்றார், மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர். ஆனால் செ.ஜோதிமணியோ, மைய அரசின் உதவிக்கான முகாம்களை நடத்தும் தேதியை உடனே சொன்னால் தான் ஆர்ப்பாட்டத்தை முடிப்பேன் என உறுதியாகச் சொல்லிவிட்டார். இதில் அரசியல் கலந்த நடவடிக்கையா அல்லது வேறு வகை நிகழ்வின் பின்னணியாக என்பது புரியாமல் மக்கள் குழப்பமடைந்துள்ளார்கள். அது போராட்டம் முடிவுக்கு வரும் போது தெரியும்.
கருத்துகள்