நெசவு 2022’ கைத்தறி கண்காட்சியை மத்திய அமைச்சர் சென்னையில் தொடங்கி வைத்தார்
இந்திய கைத்தறித் தயாரிப்புகள் மற்றும் கைவினைத்திறனை ஊக்குவிக்கும் முயற்சியில், நெசவாளர்களின் கைவினைப் பொருட்களைக் கொண்ட "நெசவு 2022" கைத்தறி கண்காட்சியை மத்திய குடிசைத் தொழில் கழகம் நடத்துகிறது.
2022 ஏப்ரல் 2 முதல் 12 வரை, சென்னை நந்தனம் அண்ணாசாலையில் அமைந்துள்ள டெம்பிள் டவர் கட்டிடத்தில் உள்ள ஷோரூமில், காலை 10:30 முதல் இரவு 8:00 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது. மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் திருமதி தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
ஜவுளி அமைச்சகத்தின் வளர்ச்சி ஆணையர் (கைத்தறி) அலுவலகம் இந்தக் கண்காட்சிக்கு நிதியுதவி அளித்துள்ளது. இந்தியா முழுவதிலுமிருந்து சிறந்த கைவினைப்பொருட்கள் மற்றும் கைத்தறிகளை புது தில்லி, கொல்கத்தா, பெங்களூர், செகந்திராபாத், குஜராத் மற்றும் சென்னையில் உள்ள அதன் மையங்களில் விற்பனை செய்யும் ஒரே மத்திய அரசு நிறுவனமாக மத்திய குடிசைத் தொழில் கழகம் திகழ்கிறது. .
சென்னை நந்தனம் அண்ணாசாலையில் அமைந்துள்ள டெம்பிள் டவர் கட்டிடத்தில் 13,000 சதுர அடியில் முழு குளிரூட்டப்பட்ட விற்பனையகத்தை மத்திய குடிசைத் தொழில் கழகம் கொண்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பிரத்தியேகமாக கையால் நெய்யப்பட்ட புடவைகள், சால்வைகள், துணிகள், ஆடைகள், அணிகலன்கள், தளவாடங்கள், வீட்டுத் துணிகள் மற்றும் பலவற்றைக் கண்காட்சி காட்சிப்படுத்துகிறது.
வளமான ஜவுளி பாரம்பரியத்தை இந்தியா கொண்டுள்ளது. கண்காட்சி இதை வெளிப்படுத்துவதோடு, நெசவாளர்கள் மற்றும் கலை ஆர்வலர்களிடையே கலாச்சார மற்றும் கலை பரிமாற்றத்திற்கான ஒரு தளமாகவும் உள்ளது. பெருமையுடன் கைத்தறிகளை அணிய பார்வையாளர்களை ஊக்குவிப்பதும், கைத்தறி பொருட்களை அவர்களது அன்றாட வாழ்வில் பின்பற்ற வைப்பதும் கண்காட்சியின் முக்கிய குறிக்கோள்கள் ஆகும்.
இந்திய நெசவாளர்கள் மற்றும் ஜவுளிக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை இத்தகைய முன்முயற்சிகள் தக்கவைத்து, அவர்களுக்கு அதிக சந்தை வாய்ப்புகளை அளித்து, தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதன் மூலம் அவர்களை ஊக்குவிக்கும்.
கருத்துகள்