மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுவை பல்கலைக்கழக கல்விக் கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுகின்றார்
புதுவை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங், 2017 ஆம் ஆண்டு புதுவைப் பல்கலைக்கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றதிலிருந்து பல்கலைக்கழக வளாகக் கட்டிடங்களையும் உள்கட்டமைப்பையும் விரிவுபடுத்துவதில் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஐந்தாண்டுகளாக நடைபெற்று வரும் முன்னேற்றங்களுக்கு மேலும் மெருகூட்டும் வகையில், மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா அவர்கள் 24 ஏப்ரல் 2022, ஞாயிறன்று ரூ.48.66 கோடி மதிப்பிலான மூன்று கல்விக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இயற்பியல் மற்றும் வேதியியல் துறையின் இணைப்புக் கட்டடங்களுக்கும், பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகத்தில் உள்ள உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கான புதிய கட்டடத்திற்கும் அடிக்கல் நாட்டப்படும்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு, புதுச்சேரி துணைநிலை ஆளுநரும், புதுவைப் பல்கலைக்கழக முதன்மை தலைவருமான டாக்டர் (திருமதி) தமிழிசை சௌந்தரராஜன், மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் திரு. என்.ரங்கசாமி, மாண்புமிகு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.
இயற்பியல் துறையின் இணைப்புக் கட்டிடம்:
இயற்பியல் துறைக்கான இணைப்புக் கட்டடங்கள், ரூ.13.30 கோடி மதிப்பீட்டில் 2835 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படவுள்ளன. இந்த ஜி+3 பலமாடிக் கட்டடத்தில், இயற்பியல் துறைச் சார்ந்த கல்விச் செயல்பாடுகளுக்குத் தேவையான நிபுணத்துவம் கொண்ட அனைத்து அதிநவீன வசதிகளும் இருக்கும்.வேதியியல் துறையின் இணைப்புக் கட்டிடம்:
வேதியியல் துறைக்கான இணைப்புக் கட்டடங்கள் ரூ.15.58 கோடி மதிப்பீட்டில் 3260 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படவுள்ளன. இந்த ஜி+3 பலமாடிக் கட்டடத்தில், வேதியியல் துறை சார்ந்த கல்விச் செயல்பாடுகளுக்குத் தேவையான நிபுணத்துவம் கொண்ட அனைத்து அதிநவீன வசதிகளும் இருக்கும்.
உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறைக் கட்டிடம் :
உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கான கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்படும். ரூ.19.78 கோடி மதிப்பீட்டில் 4909.60 சதுர மீட்டர் பரப்பளவில், உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்குத் தேவையான அனைத்து அதிநவீன வசதிகளுடன் கூடிய ஜி+3 அடுக்குகளைக் கொண்ட கட்டடம் கட்டப்படும்.
இந்தக் கட்டிடங்கள் அனைத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கு இணக்கமானதாகவும், பயனாளர்களுக்கு ஏற்றதாகவும் இருக்கும். இப்பகுதிகளில் ஒரு நல்ல சூழலை உருவாக்க தோட்டக்கலை மற்றும் நிலத்தோற்றப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் மூன்று கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவுடன், புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தத்துவமேதை ஸ்ரீ அரவிந்தரின் 150 வது பிறந்த நாள் விழாவும் 2022 ஏப்ரல் 24 அன்று புதுவை பல்கலைக்கழக மாநாடு மற்றும் கலாச்சார மையத்தில் நடைபெறுகிறது, இதில் மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.
கருத்துகள்