வரி செலுத்திய சான்றிதழ் வழங்க 9 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்ற திருப்பூர் வணிக வரித்துறை அலுவலர் மற்றும் பெண் எழுத்தர் கைது
வரி செலுத்திய சான்றிதழ் வழங்க 9 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்ற திருப்பூர் வணிக வரித்துறை அலுவலர் மற்றும் பெண் எழுத்தரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர்.
கோயமுத்தூர் குணசேகரன்; பொக்லைன் மற்றும் கிரேன் வாகனங்கள் இயக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். திருப்பூரில் இந்நிறுவனத்தின் கிளை இருந்ததை இரண்டாண்டுக்கு முன்னால் நாமக்கல் பகுதிக்கு மாற்றி விட்டார். 2011 ஆம் ஆண்டிலிருந்து 2017 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் நிறுவனம் சார்பில் செலுத்த வேண்டிய வரியினங்கள் நிலுவையிலிருந்தது குறித்து வணிக வரித்துறை அறிக்கை படி அதற்கான தொகையை அவர் செலுத்தியதற்கான நிலுவை இல்லா சான்றிதழ் பெற வேண்டியிருந்ததற்காக குணசேகரன் திருப்பூர் - வடக்கு எண் 2 வணிக வரித்துறை உதவி ஆணையர் ஜெய்கணேஷ் (வயது 44 ) என்பவரை அணுகியபோது சான்றிதழ் வழங்க அவர் 9 லட்சம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார்.
அதனால் அதிர்ச்சியடைந்த குணசேகரன் திருப்பூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் செய்தார் அவர்களின் அறிவுரைப்படி மாலை 5:00 மணியளவில் பணத்துடன் திருப்பூர் வணிக வரித்துறை அலுவலக 3 வது மாடியிலுள்ள ஜெய்கணேஷ் அறையில் சென்று அரசு தரப்பில் சாட்சி உடன் குணசேகரன் பணத்தைக் கொடுத்தார்.
அவரிடம் பணத்தை ஜெய்கணேஷ் பெற்று அதில் குறிப்பிட்ட தொகையை எழுத்தர் ரத்னாவிடம் கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் இருவரையும் கையுடன் பிடித்தனர். உடனடியாக அலுவலக வெளிப்புறக் கதவு மூடப்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் தட்சிணாமூர்த்தி ஆய்வாளர் சசிலேகா ஆகியோர் விசாரணை நடத்தினர்.
லஞ்ச ஒழிப்புத் துறையினர் கூறுகையில் 'வணிக வரி உதவி கமிஷனர் ஜெய்கணேஷ் 7 லட்சம் ரூபாயும் எழுத்தர் ரத்னா 2 லட்சம் ரூபாயும் லஞ்சம் பெற்றது. விசாரணையில் உறுதிபடுத்தப்பட்டதால் இருவரையும் கைது செய்தோம்' எனத் தெரிவித்தார்..
கருத்துகள்