மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணனை விடுதலை செய்ய தமிழக முதல்வர் தலையீடு தேவை. சென்னை பிரஸ் கிளப் மற்றும் பத்திரிகையாளர் சங்கங்கள் வேண்டுகோள்
மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணனை விடுதலை செய்ய தமிழக முதல்வர் தலையீடு தேவை. சென்னை பிரஸ் கிளப் மற்றும் பத்திரிகையாளர் சங்கங்கள் வேண்டுகோள்
சென்னை சாஸ்திரி நகரில் வசித்து வந்த மூத்த பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணன்(வயது 57) இன்று முற்பகலில் கைது செய்யப்பட்டார்.
அதன் விவரம் வருமாறு:
கடந்த 35 ஆண்டுகளாக தமிழகப் பத்திரிக்கை உலகில் நன்கு அறியப்பட்டவர்.
தீக்கதிர், துக்ளக் போன்ற ஏடுகளில் நீண்ட காலம் எழுதியவர். தந்தி தொலைக்காட்சியிலும் சில காலம் முக்கியப் பொறுப்பிலிருந்தார்.
மனதில் பட்டதை அச்சமின்றி சுதந்திரமாக எழுதக்கூடிய பத்திரிகை யாளர். "அறம்" இதழ் என்ற இணைய இதழின் ஆசிரியராக கடந்த மூன்று வருடமாக உள்ளார்.
அந்த இதழின் வாயிலாக மாநில, தேசிய பிரச்சனைகளை தனக்குரித்தான பாணியில் எழுதி வந்தார்.
கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட அப்பாவிகள் அனைவரையும் பேட்டி கண்டு உண்மை நிலவரத்தை எழுதினார்.
இவருடைய முயற்சியின் விளைவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் கவனத்திற்கு பல அப்பாவி இளைஞர்கள் பட்ட துயரங்கள் தெரிய வந்து ஆறுதலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு
நிவாரணங்களும் கிடைக்க இவருடைய எழுத்துக்கள் காரணமாக இருந்தது.
அதே நேரத்தில் பள்ளி நிர்வாகத்துக்கு கண்மூடித்தனமாக ஆதரவாக இருந்த அதிகாரிகள், ஆட்சியாளர்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து எழுதிவந்தார்.
இந்தச் சூழலில் இன்று முற்பகலில் சீருடை அணியாக நான்குபேர் அவருடைய வீட்டிற்குள் வந்து அவரை அதிரடியாக கைது செய்தனர்.
அவருடைய செல்போனையும் பறிமுதல் செய்தனர்.
அவருடைய மனைவி செல்போனையும் வாங்குவதற்கு முயற்சி செய்து உள்ளனர்.
"சாஸ்திரி நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்கிறோம்." என்று அவர் மனைவியிடம் சொல்லிவிட்டு, கிழக்குக் கடற்கரைச் சாலையில் காரை செலுத்தி உள்ளதாகவும்
பத்திரிக்கை உலக நண்பர்கள் தொடர்பு கொண்டு காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது "கைது செய்தது, கள்ளக்குறிச்சி காவலர்கள்" என்று தெரிய வந்தது.
பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் மதவாத சக்திகளுக்கும் ஊழல்வாதிகளுக்கும் எதிராக தொடர்ந்து கடுமையாக எழுதியும் காட்சி ஊடகங்களில் பேசியும் வந்தார்.
செப்டம்பர் 3 ஆம் தேதி அவருடைய அறம் இதழ் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவும் நூல் வெளியீடும் சென்னை தி.நகர், தக்கர் பாபா வளாகத்தில் நடைபெற்றது. அவரால் மிகவும் நேசிக்கப்படும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை அவ்விழாவில் அழைத்திருந்தார். உடல் ஒத்துழைப்பு தராததால் அவர் வாழ்த்துக் கூறியிருந்தார்.
எழுத்தாளர், பத்திரிக்கையாளர் என்ற நிலையைக் கடந்து சமூகத்திற்காகச் செயல்படவும் வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் சாவித்திரி கண்ணன்.
தமிழகம் முழுவதும் பயணித்து தமிழக விவசாயம், விவசாயிகள் நிலைமை
ஆகியவற்றை ஆய்வு செய்து பல கட்டுரைகள், புத்தகங்கள் எழுதியுள்ளார்.
தன் ஆய்வின் போது, புற்றுநோய் உள்பட பல்வேறு நோய்கள் பெருக்கத்திற்கு உணவு முறை சீர் கெட்டுப்போனது தான் என்பதை அறிந்து,
பாரம்பரிய உணவுகள் பழக்கத்திற்கு வரவேண்டும் என்று பாடுபட்டு வந்தார். அவர் எழுதிய "நோய் தீர்க்கும் பாரம்பரிய உணவுகள்"
என்ற நூல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. தன் மனைவியுடன் சேர்ந்து பாரம்பரிய உணவு வகைகளை சுவையாக சமைத்து
பல அரங்குகளில் காட்சியும் படுத்திக் காட்டி, இதை பழக்கத்திற்கு கொண்டு வாருங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
ஏழை, எளிய, பாட்டாளி மக்களை அழித்துக் கொண்டிருக்கும் மது தமிழ் நாட்டில் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவும் எழுத்திலும் செயலிலும் பணியாற்றி வந்தார்.
மகாகவி பாரதியார் அறச்சீற்றத்தை பின்பற்றி வந்த சாவித்திரி கண்ணன் மகாகவி பாரதியார் நினைவு நாளான இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அறம் இணைய இதழ் மூத்த பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணன் கடந்த 35 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார். வள்ளலார் வாழ்வியலை பின்பற்றி வருபவர். அவருடைய எளிமையும் வெளிப்படைத்தன்மையையும் அறியாத மூத்த பத்திரிகையாளர்கள் சென்னையில் இருக்க முடியாது.
இவர் கைது செய்யப்பட்டு , கையாளப்பட்ட விதம் மூத்த பத்திரிகையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.! காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணனை விடுதலை செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறைக்கு உடனடி உத்தரவிட வேண்டும். என் சென்னை பிரஸ் கிளப் பொதுச் செயளாலர் திரு.ச.விமலேஷ்வரன் மற்றும் பல்வேறு முன்னனிப் பத்திரிகைகளில் பணியாற்றிய பத்திரிகையாளர்கள் பலர் இக் கோரிக்கையை முதல்வரிடம் முன் வைத்துள்ளார். இன்று காலை (11.09.22) சென்னையிலுள்ள அவருடைய இல்லத்திற்கு வந்த கள்ளக்குறிச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் அவரை விசாரணை என்ற பெயரில் வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளனர்.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பான செய்திகளை தனது அறம் ஆன்லைன் இணையதளத்தில் சாவித்ரி கண்ணன் தொடர்ந்து வெளியிட்டு வந்த நிலையில், அம்மாவட்ட காவல்துறையினர் அவரை அழைத்துச் சென்றிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
சமீபத்தில், கள்ளக்குறிச்சி வழக்கு தொடர்பாக டிஜிட்டல் ஊடகங்கள் செய்தி வெளியிடக் கூடாது என்ற வகையில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்ததும், அதைத்தொடர்ந்து சமூக வலைதளங்களை கண்காணிக்க சிறப்புப் பிரிவை தமிழ்நாடு காவல்துறை உருவாக்கியதும் கடும் விமர்சனத்திற்குள்ளானது. இது பத்திரிகையாளர்களைப் பயமுறுத்தும் நடவடிக்கை என்றும், பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் செயல் என்றும் பத்திரிகையாளர் அமைப்புகளும், பல மூத்த பத்திரிகையாளர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், பாத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் கள்ளக்குறிச்சி காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டிருப்பது, அதிகாரத்தை பயன்படுத்தி பத்திரிகையாளர்கள் தங்கள் பணியை செய்யாம விடாமல் தடுக்கும் நடவடிக்கை என்பதுடன் அப்பட்டமான கருத்துச் சுதந்திர ஒடுக்குமுறையாகும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலளார்கள் மையம் சார்பில் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆகவே, காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் உடனே விடுதலை செய்யப்பட வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலார்கள் மையமும் வலியுறுத்துகிறது.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனே தலையிட்டு பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணனை உடனே விடுதலை செய்யவும், இனி இதுபோல் பத்திரிகையாளர்களை மிரட்டும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என்றும் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்பதே சென்னை பிரஸ் கிளப் சார்பில் கோரிக்கையாகும்.
கருத்துகள்