சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல் தலை சேகரிப்பு தின போட்டிகள்
அஞ்சல் துறையால் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 09 முதல் 15 வரை தேசிய அஞ்சல் வாரம் நடத்தப்படுகிறது. பொதுமக்களின் வாழ்க்கையிலும் வர்த்தகர்களுக்கும் அஞ்சல் துறையின் அன்றாட பங்களிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த உலக அஞ்சல் தினம் அக்டோபர் 9 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில் தேசிய அஞ்சல் வாரத்தையொட்டி, சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை அஞ்சலகம் சார்பில் தபால் தலை சேகரிப்பு தினம் 2022 அக்டோபர் 11 அன்று நடத்தப்பட்டது. சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவையொட்டி பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அஞ்சல் தலை சேகரிப்பு தொடர்பான வினாடி-வினா போட்டியில், ஆர்பிஏஎன்சி, சி கல்யாணம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முருக தனுஷ்கோடி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, எம்சிசி பொதுப் பள்ளி ஆகியவற்றின் மாணவ-மாணவியர் பங்கேற்றனர். இந்த போட்டிகளில் எம் சி சி பொதுப்பள்ளி முதலாவது இடத்தையும், முருக தனுஷ்கோடி பெண்கள் மேல்நிலைப் பள்ளி இரண்டாவது இடத்தையும் பெற்றன.
வெற்றிபெற்றவர்களுக்கு அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தின் முதன்மை போஸ்ட் மாஸ்டர் திரு என் பிரகாஷ் கோப்பைகளையும், பரிசுகளையும் வழங்கினார். துணை முதன்மை போஸ்ட் மாஸ்டர் திரு ஜி வி சீனிவாசலு உள்ளிட்டோர் உடனிருந்தனர். அஞ்சல்தலை சேகரிப்பு பழக்கத்தை மாணவர்களின் இளம் மனங்களில் பதிய வைப்பது இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும் என்று முதன்மை போஸ்ட் மாஸ்டர் திரு என் பிரகாஷ் கூறினார்.
முன்னதாக, அண்ணாசாலையில் உள்ள கிறிஸ்ட் சர்ச் ஆங்கிலோ இந்திய பள்ளியைச் சேர்ந்த 50 க்கும் அதிகமான மாணவர்கள் தலைமை அஞ்சலகம் மற்றும் அஞ்சல் தலை சேகரிப்பு குழுமத்தை பார்வையிட்டனர். அஞ்சலகத்தின் அடிப்படைப் பணிகள் பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ள இதுவொரு வாய்ப்பாக அமைந்தது.
இதைத் தொடர்ந்து, இந்த மாணவர்களுக்கு அஞ்சல் தலை சேகரிப்பு தொடர்பான பயிலரங்கமும் நடத்தப்பட்டது.
கருத்துகள்