பத்ம விருது வழங்கும் விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த திருமதி வாணி ஜெயராமுக்கு கலைத்துறையில் பத்ம பூஷன்
(மறைவிற்குப் பிறகு) விருதையும், திரு பி. கல்யாணசுந்தரத்திற்கு சமூக சேவை துறையில் பத்ம ஸ்ரீ விருதையும் குடியரசுத் தலைவர் வழங்கினார்
பத்ம விருது வழங்கும் விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த திருமதி வாணி ஜெயராமுக்கு கலைத்துறையில் பத்ம பூஷன் (மறைவிற்குப் பிறகு) விருதையும், திரு பி. கல்யாணசுந்தரத்திற்கு சமூக சேவை துறையில் பத்ம ஸ்ரீ விருதையும் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு நேற்று வழங்கினார்.
1. திருமதி வாணி ஜெயராமுக்கு கலைத்துறையில் பத்ம பூஷன் (மறைவிற்குப் பிறகு) விருது வழங்கப்பட்டுள்ளது.
நேர்த்தியான கலைத்திறன் மற்றும் அபாரமான திறமைக்குப் புகழ்பெற்றவர், திருமதி வாணி ஜெயராம். 19 இந்திய மொழிகளில் திரைப்படப் பின்னணிப் பாடல்களைப் பாடியிருப்பதோடு, இந்துஸ்தானி, கர்நாடக இசை, பக்திப் பாடல்கள், அபங், தும்ரி போன்றவற்றின் பதிவு செய்யப்பட்ட மற்றும் நேரலை நிகழ்ச்சிகளிலும் பல தசாப்தங்கள் அவர் கலந்துகொண்டார்.
1943, நவம்பர் 30-ஆம் தேதி தமிழகத்தில் பிறந்த திருமதி வாணி, சென்னை ராணி மேரிக் கல்லூரியில் இளங்கலை பொருளாதார பட்டம் பெற்று, பாரத ஸ்டேட் வங்கியில் பணியில் சேர்ந்தார். எனினும் அவரது எதிர்காலம் இசை துறையில் அமைந்தது. இரண்டு வயது முதலே ராகங்களைக் கண்டறியும் புலமையுடன் குழந்தை மேதையாக அவர் விளங்கினார். திரு கடலூர் ஸ்ரீனிவாச அய்யங்கார், திரு டி. ஆர். பாலசுப்பிரமணியன் மற்றும் திரு ஆர். எஸ். மணி ஆகிய தலைசிறந்த வித்வான்களிடம் முறைப்படி கர்நாடக சங்கீத இசையைப் பயின்று 8 வயதில் மேடை ஏறியதோடு, அகில இந்திய வானொலியிலும் திருமதி வாணி தமது திறமையை வெளிப்படுத்தினார்.
உஸ்தாத் அப்துல் ரகுமான் கானின் வழிகாட்டுதலில் திருமதி வாணி, இந்துஸ்தானி இசையைப் பயின்றார். 1971-ஆம் ஆண்டு குட்டி (Guddi) என்ற இந்தி திரைப்படத்தில் மூன்று பாடல்களைப் பாடுவதற்காக பிரபல இசையமைப்பாளர் வசந்த் தேசாய் அவரை அழைத்தார். ‘போல ரே பப்பிஹரா’ என்ற பாடல் அனைவரையும் கட்டி போட்டது. அதே திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஹம் கோ மன் கி சக்தி தேனா’ என்ற பாடல் நாடு முழுவதும் பள்ளிகளில் இன்றளவும் இறைவணக்கப் பாடலாக ஒலிக்கிறது.
மதன் மோகன், நௌஷத், ஓ.பி. நய்யார், ஜெய்தேவ், லக்ஷ்மிகாந்த்-பியாரேலால் மற்றும் ஆர். டி. பர்மன் போன்ற தலைசிறந்த இந்தி திரைப்பட இசையமைப்பாளர்களின் நுணுக்கமான படைப்புகளும் திருமதி வாணிக்கு வழங்கப்பட்டது. குல்சரால் இயக்கப்பட்டு, மாபெரும் வெற்றிபெற்ற மீரா திரைப்படத்தில் பண்டித ரவி சங்கரின் இசையில் அவர் பாடிய பாடல்கள், திருமதி வாணியின் இசை பயணத்தின் மகுடத்திற்கு மேலும் மகுடம் சூட்டுவதாக அமைந்தன. மொழி பேதம் இல்லாமல் குஜராத்தியில் ‘ஓதுன் டு ஓதுன்’, மராத்தியில் ‘சுகட்சேஹைசுகா', வங்காள மொழியில் ‘செய்கான் கேனா அமி’, ஒடியாவில் ‘மேகாபராசிலா’ போன்ற ஏராளமான புகழ்பெற்ற பாடல்கள் இந்தியா முழுவதும் இன்றும் ஒலித்து வருகின்றன. 1973-ஆம் ஆண்டு தென்னிந்தியாவிற்குக் குடியேறிய திருமதி வாணி, தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்களின் மனதை நொடியில் கவர்ந்தார். எம்.எஸ். விஸ்வநாதனின் இசையில் ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்' என்ற பாடல் உட்பட தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஆயிரக்கணக்கான மனதை விட்டு அகலாத பாடல்களை திருமதி வாணி பாடினார்.
ஏராளமான விருதுகளையும், கௌரவங்களையும் திருமதி வாணி பெற்றிருக்கிறார். ‘போலே ரே பப்பிஹரா’ என்ற அவரது முதல் பாடலுக்கு சிறந்த சாஸ்திரிய இசைக்கு பிரசித்தி பெற்ற தான்சேன் சம்மான் விருது வழங்கப்பட்டது. 1976, 1980 மற்றும் 1991-ஆம் ஆண்டுகளில் சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதுகளை அவர் வென்றார். கலைமாமணி விருது மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதை தமிழக அரசு வழங்கியதுடன், கேரளா மற்றும் குஜராத் மாநில அரசுகளின் விருதுகளும் அவருக்கு வழங்கப்பட்டது.
பிப்ரவரி 4, 2023 அன்று திருமதி வாணி மறைந்தார்.
2. திரு பி. கல்யாணசுந்தரத்திற்கு சமூக சேவை துறையில் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
திரு பி. கல்யாணசுந்தரம், அன்பு பாலம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிறுவன தலைவராவார். கல்வி மற்றும் மருத்துவத்தின் வாயிலாக ஏழைகளுக்கு சேவையாற்றும் பணிக்காக உலகம் முழுவதும் அவர் போற்றப்படுகிறார்.
1940, மே 10-ஆம் தேதி பிறந்த திரு கல்யாணசுந்தரம், மதுரை தியாகராஜர் கல்லூரியில் இளங்கலை தமிழ் பட்டம் பெற்றார். 1963-ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் நூலக அறிவியலில் சான்றிதழ் வகுப்பில் தேர்ச்சி பெற்று, 1963, ஆகஸ்ட் 25-இல் தூத்துக்குடியின் ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் கலை கல்லூரியில் நூலகராக அவர் தமது பணியைத் தொடங்கினார். தமது ஊதியம் முழுவதையும் பயனாளிகளுக்கு அளித்துவிட்டு, உணவகம் ஒன்றில் உணவு பரிமாறுபவராக வேலை செய்து தமது சொந்த தேவைகளுக்கு பணம் ஈட்டினார்.
தமது பணிக்காலத்தின் போது தொலைதூர கல்வி வாயிலாக பல்வேறு பட்டங்களை திரு கல்யாணசுந்தரம் பெற்றார். 1995-ஆம் ஆண்டு கோவா பல்கலைக்கழகம், இந்தியாவின் சிறந்த நூலகர் விருதை அவருக்கு வழங்கியது. ‘உலகளவில் தலைசிறந்த 10 நூலகர்களுள் ஒருவர்' என்ற கௌரவத்தை தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் 1996-ஆம் ஆண்டு அவருக்கு அளித்தது. 1997-ஆம் ஆண்டு 'உலகின் குறிப்பிடத்தக்க அறிஞர்’ என்ற பட்டத்தை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வழங்கியது.
ஆகஸ்ட் 15, 1953 இல், தமது 14-ஆவது வயதில் அன்பு பாலத்தை திரு கல்யாணசுந்தரம் நிறுவினார். பணி ஓய்வுக்குப் பிறகு, 1998 முதல், சீரான சேவையை திறம்பட செய்து வருகிறார்.
6.5 மில்லியன் டாலர்களுடன் ‘நூற்றாண்டின் மனிதன்' என்று அமெரிக்கா அவரை கௌரவித்தது. 35 கோடி ரூபாய் முழுவதையும் ஏழைக் குழந்தைகளின் நலனுக்காக அவர் வழங்கினார். ‘20-வது நூற்றாண்டின் ஈடு இணையற்ற 20 சாதனையாளர்களுள் ஒருவர்’ என்ற பட்டத்தை 2002-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவருக்கு அளித்தது.
2013-ஆம் ஆண்டு நடைபெற்ற அன்பு பாலம் நிறுவனத்தின் வைர விழாவில் கலந்து கொண்டு பேசிய டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், “பாலம் அய்யாவை தங்களது முன்மாதிரியாகக் கொண்டு செயல்படுமாறு” மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். தமிழ், ஆங்கிலம் மற்றும் கன்னட மொழிகளில் திரு கல்யாணசுந்தரத்தின் சுயசரிதை வெளியாகி இருப்பதுடன், இதர இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.
பத்ம விருதுகள் 2023-ஐ வழங்கினார் குடியரசுத் தலைவர்
ஆண்டிற்கான 3 பத்ம விபூஷன், 5 பத்ம பூஷன் மற்றும் 47 பத்மஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று மாலை (05.04.2023) நடைபெற்ற நிகழ்வில் திருமதி திரௌபதி முர்மு வழங்கி சிறப்பித்தார்.
இதில் பிரதமர், குடியரசுத் துணைத் தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் உள்ளிட்ட பிற அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
விருது பெற்றவர்களின் விவரங்களை கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்வதன் மூலம் காணலாம் https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2023/apr/doc202345178301.pdf.
கருத்துகள்