இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா காலமானார். உடல்நலக் குறைவால் உயிரிழந்தவருக்கு வயது 102.
இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா சென்னை குரோம்பேட்டை நியூ காலனியில் வசித்தவருக்கு சளி்த் தொந்தரவு, காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் தேவை ஏற்பட்டதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்த நிலையில் பலனின்றி உயிரிழந்தார்.
முன்னதாக, அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று அவரைப் பார்த்ததுடன், மருத்துவர்களையும் சந்தித்து சிகிச்சை தொடர்பாகக் கேட்டறிந்தனர். சங்கரய்யாவின் மகன் நரசிம்மன் மற்றும் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உடனிருந்து கவனித்தனர். ஆனால், சிகிச்சைக்கு அவர் உடல் ஒத்துழைக்காமல் உயிர் பிரிந்தது. அவரது மறைவு அக்கட்சியினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது
உழைக்கும் மக்களின் தோழராக வாழ்ந்த சங்கரய்யா ஒரு சுதந்திரப் போராட்ட வீரரும் இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவருமாவார்.
கோவில்பட்டியில் 1922 ஆம் ஆண்டில் பட்டு நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர் தூத்துக்குடியில் அவரது தாத்தா வீட்டில் தங்கி, அரசு ஆரம்பப் பள்ளியில் பயின்றார். பாரதியார் கவிதைகள் இவருக்கு பெரும் உந்துசக்தியாகின. புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை உள்ளிட்ட சங்ககால இலக்கியங்களையும் கற்றார்.
பள்ளிக் கல்வி முடிந்து, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வரலாறு பாடத்தில் சேர்ந்தார். அங்கு பரிமேலழகர் தமிழ்க் கழகத்தின் இணைச் செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜாஜி, சத்தியமூர்த்தி, பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்ட பல தலைவர்களை அழைத்துப் பேச வைத்தார். மாணவப் பருவத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து பல போராட்டங்களிலும் பங்கேற்றார். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்திய போது தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைதானார். கல்லூரிப் படிப்பும் முடிவுக்கு வந்தது. மகன் வழக்கறிஞராக வேண்டும் என்ற இவரது தந்தையின் ஆசையும் நிறைவேறவில்லை.
சிறையில் காமராஜர், ப.ஜீவானந்தம், எம்.ஆர்.வெங்கட்ராமன் உள்ளிட்ட பல தலைவர்களைச் சந்தித்தார். விடுதலையாகி வந்த பிறகு, பொதுவாழ்க்கைக்குத் தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்தார். நேதாஜி 1939- ஆம் ஆண்டில் மதுரை வந்தபோது மாணவர் கூட்டம் ஏற்பாடு செய்து, நேதாஜியை உரையாற்ற வைத்தார்.
‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்ட தலைவர்களை விடுதலை செய்யக் கோரி மாணவர்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தினார். பிரிட்டிஸ் கிழக்கிந்தியக் காவல்துறை நடத்திய தடியடிகள், தலைமறைவு வாழ்க்கை, சிறைத் தண்டனை என போராட்ட வாழ்க்கை நடத்தினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது அதன் முக்கியத் தலைவர்களுள் ஒருவராக இருந்தார். 1938- ஆம் ஆண்டில் சென்னை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களில் ‘சென்னை மாணவர் சங்கம்’ என அமைத்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரையிலும் மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டு, அதன் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொழிலாளர் நலனுக்காக ஏராளமான பொதுக்கூட்டங்கள், மாநாடுகளை நடத்தியதோடு களப்பணிகளிலும் துடிப்புடன் ஈடுபட்டார். பல்வேறு இதழ்களில் தனது கருத்துகளைக் கட்டுரைகளாக எழுதியவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தொடங்கப்படுவதற்கு முக்கியப் பங்களிப்பை வழங்கியவர். ‘ஜனசக்தி’ இதழில் மூன்றாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.
1967, 1977, 1980. ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், தொடர்ந்து 11 ஆண்டுகள் உறுப்பினராகச் செயல்பட்டுள்ளார்.சட்டப்பேரவையில் பல முக்கியப் பிரச்சினைகள் குறித்து ஏராளமாக உரையாற்றியுள்ளார்,
எளிமையான வாழ்க்கையில், கதராடையே அணிந்தவர். கம்யூனிஸ்ட் கட்சியில் பல பொறுப்புகளை வகித்து, அவற்றில் திறம்படச் செயலாற்றி ஓய்வுபெற்ற பின்பும் கூட, கட்சி அலுவலகத்துக்கு வருவது, ஆலோசனைகள் வழங்குவது உள்ளிட்ட பணிகளைச் செய்தார்.சென்னையில் உடல்நலக்குறைவால் காலமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவின் உடலுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கௌரவ முனைவர் பட்டம் வாங்கவும் போராடிய பலரின் மத்தியில் கிடைக்காமல் சென்றே விட்ட சங்கரய்யாவிற்கு பல அரசியல் கட்சி மற்றும் தொழிற்சங்க வாதிகள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்
கருத்துகள்