செட்டிநாடு குழுமத்துக்குச் சொந்தமான ரூபாய்.298 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கம்
செய்த அமலாக்கத்துறை தென் இந்திய கார்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாட்டிற்கு நிலக்கரி கொண்டு வருவதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, தென்னிந்தியக் கார்ப்பரேஷன் நிறுவனத்தின், 298.21 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் தற்போது முடக்கப்பட்டுள்ளன.தமிழ்நாட்டில் அனல் மின் நிலையங்களுக்கு சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்களிலிருந்து நிலக்கரி வாங்கப்பட்டு, விசாகப்பட்டினம் துறைமுகத்தின் வழியாக, தமிழ்நாடு துறைமுகங்களுக்குக் கொண்டு வரப்படுகிறது. விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து, தமிழ்நாடு துறைமுகங்களுக்கு கடல் வழியாக நிலக்கரியை எடுத்து வருவதற்கான ஒப்பந்தப் பணியை, செட்டிநாடு குழுமத்துக்குச் சொந்தமான தென்னிந்தியக் கார்ப்பரேஷன் நிறுவனம் செய்தது.
அப்போது பணியிலிருந்த மின்சார வாரியத்தின் உயர் அலுவலர்கள் உடந்தையுடன் போலியான கணக்குக் காட்டி, 900 கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதாகப் புகாரளிக்கப்பட்டதன்படி, ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய விசாரணையில், 2011 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை நிலக்கரி கொண்டு வருவதற்கு, 234 கோடி ரூபாய் மட்டுமே கடல்வழிப் போக்குவரத்துக்குச் செலவு செய்து விட்டு, 1,267 கோடி ரூபாய்க்குப் பொய்யான கணக்குக் காட்டி மோசடி செய்தது தெரியவந்தது.மோசடிச் செயலுக்கு உடந்தையாக இருந்த மின்சார வாரிய உயர் அலுவலர்கள் மற்றும் தென்னிந்தியக் கார்ப்பரேஷன் நிறுவன நிர்வாகிகள் உள்ளிட்ட, 10 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில், அமலாக்கத் துறை உயர் அலுவலர்களும் விசாரணை நடத்தினர். கடந்தாண்டு, அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான வீடு, மற்றும் அலுவலகங்களில், அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையில், 2011 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆவண ஆதாரங்கள் சிக்கியது. அதனால், அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான, 360 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து, கடலுார் மாவட்டத்தில், அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான, 298.21 கோடி ரூபாய் மதிப்பிலான 300 ஏக்கர் நிலத்தை, இரண்டு நாட்களுக்கு முன்பு அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. தென் இந்தியக் கார்பரேஷன் நிறுவன நிர்வாகப் பணியாளர்கள், அப்போதைய மின்சார வாரியத்தின் உயர் அலுவலர்கள் உடந்தையுடன் போலியான கணக்கு காட்டி ரூபாய்.900 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக ஒரு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் நடத்திய விசாரணையில் தென் இந்தியக் கார்பரேஷன் நிறுவனம் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் நிலக்கரியை கையாள்வதற்கு ரூ.234 கோடி மட்டும் செலவு செய்துவிட்டு ரூ.1,267 கோடிக்கு போலி கணக்கு காட்டி முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றச்சாட்டும் பதிவு செய்தனர்.
கருத்துகள்