சட்டக் கல்லூரிப் பேராசிரியர்கள் நியமன வழக்கில் மாநில சட்டத்துறைச் செயலாளர் உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார்
சட்டக் கல்லூரியில் காலியான பணியிடங்களையே நிரப்பாமல் தரமான கல்வியை எப்படி வழங்க முடியும் தமிழ்நாடு அரசிடம் உயர்நீதிமன்றம் கேள்வி.
தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக் கல்லுரிகளில் நிரந்தரமாக இணைப் பேராசிரியர், மற்றும் உதவிப் பேராசிரியர்களை நியமிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் மூலம் தெரிவிக்கப்பட்ட நிலையில் காலிப்யிடங்களை நிரப்பாமல் தரமான சட்டக் கல்வியை எப்படி வழங்க முடியும் என நீதிபதி வினவினார்.
தமிழ்நாட்டிலுள்ள அரசு சட்டக் கல்லுரிகளில் காலியாக உள்ள இணைப் பேராசிரியர் பணிக்கு மறைமுக நியமனங்கள் இல்லாமல் நேரடியான நியமனங்கள் மேற்கொள்ள வேண்டும் எனக் கோரி வசந்தகுமார் என்ற நபர் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2018 ஆம் ஆண்டு தாக்கல் செய்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்தது அதில்
சட்டக்கல்வி இயக்குநர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தமிழ்நாட்டிலுள்ள 15 அரசு சட்டக் கல்லூரிகளில், அனுமதிக்கப்பட்ட 20 இணைப் பேராசிரியர் பணியிடங்களில் 19 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், மொத்தமுள்ள 206 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில், 70 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் பதில் மனுவை ஆய்வு செய்த உயர் நீதிமன்றம், அரசு சட்டக் கல்லூரிகளில் அதிகமாக காலியிடங்கள் இருப்பது துரதிர்ஷ்டவசமானதென அதிருப்தி தெரிவித்தது. மேலும், தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்க முடியாவிட்டால், சட்டக் கல்லூரிகளை மூடி விடுவது நல்லதென காட்டமாக நீதிபதி கருத்துத் தெரிவித்தார். தகுதியான ஆசிரியர்களை நியமிக்காமல், கௌரவ விரிவுரையாளர்கள் மூலம் பாடம் நடத்துவது மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கி விடுமெனவும், அதை ஏற்றுக் கொள்ள முடியாதெனவும் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, தமிழ்நாடு அரசின் சட்டத்துறைச் செயலாளரை இன்று உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்தா முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு சட்டத்துறைச் செயலாளர் ஜார்ஜ் அலெக்சாண்டர் நேரில் ஆஜரானார். அரசு தரப்பில் ஆஜரான தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவது தொடர்பாக தேர்வு நடத்துவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளதாகவும், ஆசிரியர் தேர்வு வாரியம் சில விளக்கங்களைக் கோரியுள்ளதால், அதற்கு நாளைக்குள் பதில் அளிக்கப்படும் அதன் பிறகு தேர்வு நடத்தும் அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடுமென்றும் தெரிவித்தார்.
இதையடுத்து காலிப் பணியிடங்களை நிரப்பாமல் தரமான சட்டக் கல்வியை எப்படி வழங்க முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதி, அரசின் விளக்கத்தைப் பதிவு செய்து கொண்டு, அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து தெரிவிக்கும் வகையில், வழக்கின் விசாரணையை அக்டோபர் மாதம் 21 ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.
கருத்துகள்