ஹிந்து சமய அறநிலையத் துறை, இஸ்லாமிய வக்ஃபு வாரியம் போலவே கிறிஸ்தவ மதத்தின் சொத்துகளை இந்தியாவில் நிர்வகிக்க தனிப்பட்ட சட்ட வாரியம் தேவை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியின் தாளாளர் நியமனம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்த போது அது தொடர்பாக நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு :- ''கல்லூரி தாளாளராக ஒருவரை நியமிக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், பேராசிரியர்கள் சிலர் புகார் அளித்ததால், அந்த நியமனத்துக்கு சிஎஸ்ஐ ஆயர் தடை விதித்துள்ளார். தாளாளர் தேர்வு விவகாரத்தில் சிஎஸ்ஐ விதிகள் முறையாகப் பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை. ஒரு சில நபர்கள் சிஎஸ்ஐ நிர்வாகத்தின் பைலாக்கள் மெமோரண்ட விதிகளைப் பின்பற்றாமல் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் கட்டுப்படுத்தும் நோக்கில் செயல்பட்டுள்ளது தெரியவருகிறது.
பல்வேறு வழக்குகளில் ஆலயத்தின் சொத்துகள் முறைகேடாக நிர்வாகம் செய்யப்படுவதும், நிதி தவறாகப் பயன்படுத்தப்படுவதும் தெரிகிறது. இந்தச் சிக்கலைத் தீர்க்க, அவ்வப்போது தற்காலிக நடவடிக்கையாக நிர்வாகிகளை நியமிப்பது என்பது வழக்கமான நடைமுறையாகும். அதே நேரத்தில் அதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டிய நேரம் வந்துள்ளதாக நீதிமன்றம் கருதுகிறது.
ஹிந்து சமய அறநிலையத் துறை, இஸ்லாமிய வக்ஃபு வாரியம் போல் கிறிஸ்தவ சொத்துகளை நிர்வகிக்க தனியாக சட்ட வாரியம் தேவை ஏற்பட்டுள்ளது எனக் கருதலாம்.
ஹிந்து, இஸ்லாமிய நிறுவனங்களை நிர்வகிக்க தனியாக அமைப்பு இருப்பது போல் கிறிஸ்தவ நிறுவனங்களை நிர்வாகம் செய்ய தனி சட்ட வாரியம் ஏற்படுத்த வேண்டும் எனவும், இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
. ஆனால், கிறிஸ்தவ அமைப்புகளுக்கு அத்தகைய விரிவான ஒழுங்குமுறை எதுவும் இல்லை.கிறிஸ்தவ நிறுவனங்களை மேலும் பொறுப்புடன் செயல்பட வைக்க, நிர்வாக விவகாரங்களை ஒழுங்கமைக்க ஒரு சட்டபூர்வ வாரியம் இருக்க வேண்டும். எனவே, மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலர் மற்றும் தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளரை நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கில் சேர்க்கிறது. இருவரும் கிறிஸ்தவ நிறுவனங்களை முறைப்படுத்த சட்டப்பூர்வமான வாரியத்தை ஏற்படுத்துவது தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை நவம்பர் மாதம்.18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது'' என நிதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
கருத்துகள்