அவதூறு வழக்கில் ஹெச். ராஜாவுக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதித்த சிறப்பு நீதிமன்றம்
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
ஹெச்.ராஜா 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவரது சமூக வலைதளப்பதிவில், “திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல தமிழகத்திலும் பெரியார் சிலை உடைக்கப்படும்” என பதிவிட்டிருந்தார். மேலும் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திமுக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி குறித்தும் கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டிருந்தார். அதையடுத்து ஹெச்.ராஜாவுக்கு எதிராக திமுக நிர்வாகிகளும், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சார்பிலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பெரியார் சிலை உடைப்பு குறித்து ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் காவல்துறை, கனிமொழி்க்கு எதிரான புகார் குறித்து ஈரோடு நகர காவல் நிலையத்தில் ஹெச்.ராஜாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்திருந்த வழக்குகளை இரத்து செய்யக் கோரி ஹெச். ராஜா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்குகளை மூன்று மாதங்களில் விசாரித்து முடிக்க சென்னை மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்ததன்படி இந்த வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பாக நடந்த போது ஹெச். ராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராமமூர்த்தி, ஹெச்.ராஜாவுக்கு எதிராக பதியப்பட்ட இரண்டு வழக்குகளிலும் அவர் அரசியல் ரீதியாகவே கருத்து தெரிவித்துள்ளதாகவும், மூன்றாவது நபர்கள் அளித்த புகார்களின் பேரில் அவர் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இந்த வழக்குகளுக்கு போதிய ஆதாரங்களை புகார்தாரர்கள் தாக்கல் செய்யவில்லை என்றும் வாதிட்டார். பதிலுக்கு காவல் துறை தரப்பிலும், புகார்தாரர்கள் தரப்பிலும் “ஹெச்.ராஜா மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் உள்ளது. பெரியார் சிலையை உடைப்பேன் என்றும், திமுக நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி குறித்தும் அவரது சமூக வலைதளத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் கருத்து தெரிவி்த்துள்ளார்” என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி. ஜெயவேல், “இந்த வழக்கில் ஹெச்.ராஜாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் காவல் துறை தரப்பி்ல் சரிவர ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதால் இரு வழக்குகளிலும் அவரை குற்றவாளி என தீர்மானிக்கிறேன். எனவே இரு வழக்குகளிலும் அவருக்கு தலா 6 மாதங்கள் சிறை தண்டனையும் ரூபாய்.5 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன்” எனத் தீர்ப்பளித்தார்.
இந்த சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும், அதுவரை இந்தத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டுமென ஹெச்.ராஜா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதையேற்ற நீதிபதி, அவருக்கு விதிக்கப்பட்ட தலா 6 மாதம் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள்