மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியம் விராதனூர் கிராமத்தில் கணேசனுடைய மனைவி
முருகேசுவரி. கணேசன் 2019-ஆம் ஆண்டு காலமானார். அவரது பெயரிலுள்ள சொத்துக்களை பெயர் மாற்றம் செய்ய இறப்புச் சான்றிதழ் அடிப்படையில் வாரிசுச் சான்றிதழ் கேட்டு முருகேசுவரி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விராதனூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் சென்ற விண்ணப்பத்தை பரிந்துரை செய்யாமல் லஞ்சம் கொடுக்காத காரணமாக அப்போது நிராகரிக்கப்பட்டதாக தெரிகிறது அதனால் இரண்டாம் முறையாக முருகேசுவரி வாரிசு சான்றிதழ் கேட்டு, விராதனூர் கிராம நிர்வாக அலுவலர் இந்திரா (வயது 46) ஐ அணுகியுள்ளாராம். அப்போது கிராம நிர்வாக அலுவலர் இந்திரா, வாரிசுச்சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்ய வேண்டுமென்றால் ரூபாய்.18 ஆயிரம் எல்லோரும் கொடுப்பது போல் லஞ்சமாகக் கொடுக்க வேண்டுமெனக் கூறியதாகத் தெரிகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத முருகேசுவரி, தன்னிடம் லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க விரும்பினார். அதுதொடர்பாக மதுரை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், துணைக் கண்காணிப்பாளர் சத்தியசீலன் மற்றும் ஆய்வாளர் குமரகுரு தலைமையிலான ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் புகார் தாரர் கொண்டு வந்த பணத்தை பினாப்தலீன் இரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட்டுக்களை அரசு சாட்சி முன்னிலையில் முருகேசுவரியிடம் கொடுத்து, கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்குமாறு தெரிவித்ததன் பேரில் முருகேசுவரி, கிராம நிர்வாக அலுவலர் இந்திராவை தொடர்பு கொண்டபோது அவர் ரூபாய்.18 ஆயிரத்துடன், மதுரை அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் அருகே உள்ள இடத்திற்கு வரும்படி கூறியுள்ளார். அந்த சமயத்தில், ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினரும் அங்கு மறைந்து நின்று கண்காணிப்பில் ஈடுபட்டார்கள். இரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை முருகேசுவரியிடம் இருந்து இந்திரா வாங்கிய போது, மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை பணம் பெற்ற கையுடன் பிடித்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்திய பின்னர் கிராம நிர்வாக அலுவலர் இந்திராவைக் கைது செய்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் சேர்த்தனர்.
கருத்துகள்