பணி நிரந்தரமும், சம வேலைக்கு சம ஊதியமும் வழங்கக் கோரி சென்னையில் உண்ணாவிரதமிருந்த செவிலியர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து,
தமிழ்நாடு முழுவதும் மருத்துவ செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலிப்பணியிடங்களே இல்லாத நிலையில் போராடுவது ஜனநாயக உரிமை அல்ல என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்..
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, பணி நிரந்தரம் வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு செய்த மேல்முறையீட்டை வாபஸ் அல்லது கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தொகுப்பூதிய செவிலியர்கள் நேற்று முன்தினம் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டுக் கழகம் சார்பில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 750-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றதைத் தொடர்ந்து, மாலையில் செவிலியர்களைக் கைது செய்து வாகனத்தில் ஏற்றிய காவல்துறை கிளாம்பாக்கம் பேரூந்து நிலையத்தில் இறக்கி விட்டனர். இதையடுத்து, பேருந்து நிலையத்தில் செவிலியர்கள் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அவர் களைக் கைது செய்து, ஊரப்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். அங்கும் செவிலியர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். செவிலியர்கள் கைது செய்யப்பட்டதைக்கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில் நேற்று செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை வெளியிட்ட செய்திக்குறிப்பில்: உண்ணாவிரதம் மேற்கொண்ட செவிலியர்களைக் கைது செய்தது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளை நாடும் நோயாளிகள் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளதாக அமைச்சர் பெருமையாகத் தெரிவித்துள்ளார். (நோயாளிகள் பெருகுவது சுகாதாரத்துறைக்கு பெருமையல்ல) ஆனால் அதற்கு ஏற்றார்போல மருத்துவர், செவிலியர் பணியிடங்களை அதிகரிக்கவில்லை.
கரோனா பரவிய நேரத்தில், அரசுக்கு உறுதுணையாக இருந்து, மக்களுக்காக போராடியவர்களை, ஆட்சி நிறைவடையும் நிலையில் சம ஊதியம் வேண்டிப் போராட வைப்பது அரசுக்கு அழகல்ல. எனவே, முதல்வர் தலையிட்டு, செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். எனத் தெரிவித்துள்ளார்.இதனிடையே அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் : செவிலியர்களை புறக்கணிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள், இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு பணியில் சேர்ந்தவர்களில்லை.
ஏற்கெனவே 9 ஆண்டுகளாக பணியாற்றி கொண்டிருப்பவர்கள்.(எப்போது சேர்ந்தால் என்ன அவர்களும் அரசு பணியாளர்கள் தானே) இவர்களுக்கு பணிநியமனம் வழங்குவது தொடர்பாக அரசாணை உள்ளது. காலியிடம் உருவாவதைப் பொறுத்து, இவர்களைச் சேர்க்க வேண்டும்.
இந்த அரசுப் பொறுப்பேற்றதற்கு பிறகு 3,783 செவிலியர்கள், பயன்பெற்றிருக்கிறார்கள். இன்னும் 8,322 பேர் பணிநிரந்தரம் செய்யப்பட வேண்டும். பணி ஆணைகள் வழங்கப்படும் போதே காலிப்பணியிடங்கள் உருவாகும் பட்சத்தில் பணிநிரந்தரம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்களே இல்லை என்ற நிலையில் போராட்டங்கள் நடத்துவது ஜனநாயக உரிமையல்ல.
அதேபோல் அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி ஆணைகளில் உள்ள விதிமுறைகளைத் தெரிந்து கொள்வது நல்லது. யாரையும் இந்த அரசு கைவிடவில்லை. கரோனா காலங்களில் பணிபுரிந்த 714 பேர் பட்டியலில் சேர்க்க இருக்கிறோம். போராடும் செவிலியர்களுடன் பேசத் தயாராக இருக்கிறோம். மருத்துவக் கலந்தாய்வு தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 23 எம்பிபிஎஸ், 27 பிடிஎஸ் இடங்களை நிரப்ப டிசம்பர் 20-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை சிறப்புக் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது. னத் தெரிவித்தார்.











கருத்துகள்