இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா ஆய்வு
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது ஜம்மு பயணத்தின் இரண்டாம் நாளில் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் உள்ள ‘குர்நாம்’ மற்றும் ‘போபியா’ எல்லைப் பாதுகாப்புப் படை சாவடிகளுக்குச் சென்றார்.
'அஜய் பிரஹாரி' நினைவிடத்தில் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய அவர், வீரர்களின் நலனுக்காக ரூ. 7 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்ததுடன், ரூ. 242 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குத் அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் வீரர்களிடையே உரையாற்றிய அமித் ஷா, "கடினமான சூழல்களிலும் தேசத்தைக் காக்கும் பிஎஸ்எஃப் வீரர்களின் அர்ப்பணிப்பு உணர்வு நாட்டுக்கே முன்மாதிரியாக உள்ளது. 'ஆபரேஷன் சிந்துர்' நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் 118 எல்லைச் சாவடிகள் மற்றும் 3 பயங்கரவாத முகாம்களை அழித்து பிஎஸ்எஃப் வீரர் சாதனை படைத்துள்ளனர். இதில் வீரமரணம் அடைந்த முகமது இம்தியாஸ் அகமது மற்றும் தீபக் சிங்காக்கம் ஆகியோருக்கு 'வீர் சக்ரா' விருது வழங்கப்பட்டது ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமை" என்றார்.
மேலும், பிஎஸ்எஃப்-இன் 61-வது ஆண்டை நவீனமயமாக்கல் மற்றும் வீரர்களின் நலனுக்காக அர்ப்பணிக்க உள்ளதாகத் தெரிவித்த அவர், எல்லைப் பாதுகாப்பில் தொழில்நுட்பத்தைப் புகுத்தவும், வீரர்களுக்குச் சிறப்பு நலத்திட்டங்களைக் கொண்டு வரவும் மத்திய அரசு உறுதியாக உள்ளதாகக் கூறினார். எல்லையில் பணியாற்றும் பெண் வீரர்களின் பங்களிப்பையும் அவர் வெகுவாகப் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர். இறுதியில் அமைச்சர் திரு. அமித்ஷா வீரர்களுடன் அமர்ந்து மதிய உணவு அருந்தினார்






கருத்துகள்