சிவகுமார் முருகேசன் எனும் இளைய புதிய இயக்குனர் தந்த முதிய சிந்தனைகள் தான் தாய் கிழவி (அப்பத்தா -ஆயா) தற்கால முதியோர் இல்லத்தில் மூழ்கடித்த பலரின் சோகம், சுயநலம் கலந்த கூட்டுக்குடும்பச் சிதைவுகள் கடக்க முடியாத இக்காலத்தில் 2K வுக்கு பின் பிறந்த தென்மாவட்ட பிள்ளைகளான மக்களுக்குத் தெரியாத நிகழ்வுகள் அதிகம்.
இனித் திரைப்பட விமர்சனம் :-
'அதிகாலையில் மூதாட்டி பவுனுத்தாயி கண் விழித்து, வட்டிப் பணத்தை வசூலிக்க வெளி வருகையில் கிராமமே அலறுகிறது. தாயை மறந்து சொத்தை மட்டுமே பிரிக்கப் பார்க்கும் மூன்று மகன்களும், மாமியாரை யாரோ என நினைக்கும் மூன்று மருமகள்களும், நகைக்காக மாமியாரை விரோதியாகவே, பார்க்கும் மருமகனும், வில்லன்களாகவே விரோதிகளாகவே கதாபாத்திரத்தில் ஜொலிக்க வைத்து, வாழாவெட்டியான மகள் மட்டும் தனது மகனுடன் தாய்க்குத் துணையாக இருக்கிறாள். பவுனுத்தாயி பக்கவாதத்தில் விழுந்து நினைவிழக்க, ஊரே அதை விழாவாவாகக் கொண்டாடுகிறது.
ஒரு சிலரைத் தவிர எல்லோருமே பவுனுத்தாயின் மரணத்திற்குக் காத்திருக்க, கோல்டு குமாரின் வருகையால் காட்சி தலைகீழாக மாறுகிறது. நகைக் கடைக்காரரான கோல்டு குமாரிடமிருந்து பவுனுத்தாயி வாங்கிய 160 பவுன் எங்கிருக்கிறது? என்ற கேள்விக்கான விடை, இரண்டு காட்சியில் வரும் இளவரசுவின் பைத்தியக்காரன் பாத்திரம் தான் கதையில் திருப்பம், நினைவற்ற நிலையில் பவுனுத்தாயி கை அசைப்பதில் இருக்கிறது எனத் தேடி அலைகிற அத்தனை பேரும் பவுனுத்தாயின் உயிரைக் காப்பாற்றப் போராடுகின்றனர்.
அவர்கள் வெற்றியடைந்தார்களா? 160 பவுன் தங்கம் என்ன ஆனது?என்பதையெல்லாம் கலகலப்பாகச் சொல்கிறது திரைப்படம். வெற்றிலைக் கறைபடிந்த வெள்ளந்தி என்பதை விட வஞ்சகமில்லாத புன்னகையும், கூந்தலை அள்ளிமுடித்த அலட்சியக் கொண்டையுமாய் வலம் வரும் பல பாட்டியை சிறுவயது முதல் பார்த்தவர்கள் நாம் சிந்திக்கும்போது, முதலில் மனதுக்குள் வருவது அவர்கள் காதுகளில் அணிந்திருந்த அந்தக் கனத்த காதணி தான்.
‘தண்டட்டி, பாம்படம், முடிச்சு, குண்டலம், கொப்பு அல்லது பூடி, நகைகள் சங்க இலக்கியத்தில் ‘தண்டட்டி’ பற்றிய குறிப்புகளுண்டு பாண்டிய நாட்டில் 12 மாவட்டங்களில் பெண்கள் அணிந்ததாகக் குறிப்புகள் சொல்கின்றன. ஆண்கள் கூட இந்தக் காதணிகளை அணிந்ததாகவும் குறிப்புகள் இருக்கிறது.
பவுனுத்தாயின் சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன் என மூன்று மகன்களோடு எல்லோருமே சிறப்பாக நடித்திருந்தாலும், மருமகனான வேட்டைக் குமாரும் ,மகளான டாக்டர் ரேச்சல் ரேபக்காவும் மனதில் உட்கார்ந்து விடுகின்றனர். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை நோக்கி நகர்பவர் வேலூர் பிலிப்ஸ் மகளான நடிகை டாக்டர் ரேச்சல் ரெபெக்கா தற்போது தெரிகிறார். மருத்துவரான ரேச்சல், 'இப்படை வெல்லும்' திரைப்படம் மூலம் அறிமுகமாகி 'கடைசி விவசாயி' திரைப்படத்தில் நீதிபதியாக சில நிமிடங்கள் நடித்திருந்தாலும் இதில் அழுத்தமான கதாபாத்திரமானார். தொடர்ந்து, மணிகண்டன் நடிப்பில் ஹிட் அடித்த குட் நைட் படத்தில் அக்காவாக நடித்து கவனம் ஈர்த்தார். கடைசி விவசாயி படத்திற்காக சிறந்த துணை நடிகை விருதை வென்றார். தற்போது, தாய்கிழவி திரைப்படத்தில் ராதிகாவின் மகளாக நடித்து படம் முழுவதும் வந்து பலரையும் ஈர்த்துள்ளார். முக்கியமாக, இப்படத்தில் பதின்ம வயது மகனுக்கு அம்மாவாக நடித்ததுடன் உசிலம்பட்டி வட்டார வழக்கில் வசனம் உச்சரிப்புகளை அட்டகாசமான உடல்மொழிக்குக் கொண்டு வந்து பலரிடமும் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.
தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இடத்திற்கு முன்னேறிய டாக்டர் ரேச்சல் ரெபெக்கா எதிர்காலத்தில் விருதுகள் வாங்கும் நடிகையாகவே வலம் வருவார். நடிகர் ஒளிப்பதிவாளர் இளவரசு இரண்டே காட்சிகள் தான். படத்தின் போக்கை அப்படியே திருப்பிப் போட்டு விடுகிறார், வழக்கம் போலவே கலக்கியிருக்கிறார்.
கலகலப்பாக நகரும் படத்தில், ஆம்புலன்ஸில் உயிர் காப்பைத் துண்டிக்கும் காட்சியிலும், இத்தனை வயசுக்கு மேலே கல்யாணம் பண்ணி என்ன பண்ணப் போற?என்ற கேலிக்கு, பென்னிகுயிக்காக வரும் நடிகர் முனீஸ்காந்த் பதில் சொல்கிற காட்சியிலும் கலங்கடித்து விடுகிறார்கள். குறிப்பாக, நடிகர் முனீஸ்காந்த் பேசுகையில், படத்தைப் பார்க்கிற கல்யாணமான அத்தனை பேரும் தாங்கள் எத்தனை பெரிய அதிர்ஷ்டசாலி என்பதை உணர்ந்து உடனே தங்கள் மனைவிகளை அணைத்துக் கொள்ளவே நினைத்திருப்பார்கள்.
திரையிலும் கதையிலும் இத்தனை பணத்தை வசூலிக்கும் பவுனுத்தாயி, ஞாயிறு அன்று எங்கே செல்கிறார்? என்ன செய்கிறார்?என்பதுதான் சுவாரஸ்யமே.
அருகிப் போன பெண்களின் விளையாட்டுக்களில் ஒன்றான பல்லாங்குழியை வைத்து பெண்களுக்கு மிகப் பெரிய பாடத்தை நடத்துகிறார் பவுனுத்தாயி.
நிவாஸ் கே பிரசன்னாவின் இசையும், விவேக் விஜயகுமாரின் ஒளிப்பதிவும் வைகை உற்பத்தி ஆகும் வருஷநாட்டு மலையையும் ஒரு கருமாத்தூரைச் சுற்றிய கிராமத்தையும், அதன் வாழ்வியலையும் நேர்த்தியாகப் பதிவு செய்ய பெரும் உதவியாக இருந்திருக்கிறது. இயக்குனர் சிவகுமார் முருகேசனுக்கு முதல் படமாம். ஆச்சர்யம்.
தலைப்பில் ஒற்றுப் பிழை சென்டிமென்ட் தொடர்கிறது. தாய் (க்) கிழவி அல்ல.தாய் கிழவி தான். ஊரையே அதிரடித்து வட்டி வசூல் செய்கிற, சுகர்,பிரஷர் ஒண்ணும் கிடையாது என்றபடி பழைய காலக் கும்பாவில் உள்ள கறிச் சோற்றைக் குழைத்தடிக்கிற, குழந்தையின் கையில் இருக்கிற காசைக் கூடப் பிடுங்குகிற, சொத்தைப் பிரிக்காததால் சண்டையிடும் மகன்களையும்,நகை தராததால் மகளுடன் வாழாத மருமகனையெல்லாம் இடது கையால் டீல் செய்கிற,மகளின் திருமணத்தை அறுத்து மறுமணம் கட்டுகிற,ஒரு வேளை தனித்து வாழ நேர்ந்தாலும் சொந்தக் காலில் வாழ வகை செய்கிற,மகாராணி பவுனுத்தாயாக ராதிகா,சிறிது தவறினாலும்,அதீத நடிப்பாகி விடக் கூடிய ஆபத்தை அலட்சியமாகக் கடந்திருக்கிறார்.அவரது நடிப்பிற்கும்,ஆச்சர்யமான ஒப்பனைக்கும் உசிலம்பட்டி பிறமலைக் கள்ளர் வாழ்வியல் வட்டார வழக்கில் ஒய்யாரமாக நடக்கிறார் தங்கம் 2கிலோ நானூறு கிராம் பவுன்களைச் சேர்த்த பவுனுத்தாய் எனும் உசிலை காது வளர்த்த பம்படக் கிழவி, நகர்புற அப்பத்தாவாக நடித்த ஊர்வசிக்கும், கிராமத்து அப்பத்தாவாக நடித்த ராதிகாவுக்கும் போட்டி வைக்கலாம். எல்லோருக்கும் வயதாகும் ஆனால் வாழ்வியல் மட்டுமே வரலாறு பேசும்.“’கடைசி விவசாயி’ மணிகண்டனின் உதவி இயக்குநர் சிவகுமார். பிறந்த மண் சார்ந்து ஒரு கதாபாத்திரம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தை ஒரு கதாபாத்திரமாக ‘தாய் கிழவி’ படத்தில் முத்துக்குமாருக்கு கிடைத்திருக்கிறது. பேஷன் ஸ்டுடியோஸ், நடிகர் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்த தாய்(க்)கிழவி வெற்றியைத் தொடர்ந்து பல வட்டார வாழ்வியல் சார்ந்த படங்கள் வரும். அலலிநகரத்து இயக்குனர் பாரதிராஜா பதிவுசெய்யத் தவறிய கதைக்களமிது.






கருத்துகள்