தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராகப் பதவியேற்றார் இராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி நேற்று 12.03.2026 சென்னை, லோக் பவன் மக்கள் மாளிகையில், பாரதியார் மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு ஆளுநர் பதவியேற்பு விழாவில், தமிழ்நாடு மாநிலத்தின் ஆளுநராக இராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு பதவிப்பிரமாணமும், இரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநரின் மனைவி அனகா ஆர்லேகர், மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
பின்னர் தமிழ்நாடு ஆளுநர் இராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், மற்றும் குடும்பத்தினர் சென்னை மயிலாப்பூரில் அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். தமிழ்நட்டின் பொறுப்பு ஆளுநராக பதவியேற்ற இராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்
1954 ஆம் ஆண்டு கோவா யூனியன் பிரதேசத்தின் பனாஜியில் பிறந்தார். ஆரம்பக் கல்வியை கோவாவில் வாஸ்கோடகாமாவில் உள்ள செயின்ட் ஜோசப் கல்வி நிறுவனத்தில் பயின்றவர்
பின்னர் அதே பகுதியில் உள்ள எம்.இ.எஸ். கல்லூரியில் வணிகவியல் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார்.
அவரது இளமைக் காலத்திலேயே சமூக மற்றும் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறார். இவரது தந்தை ஜனசங்கத்தின் கோவா யூனியன் பிரதேசத் தலைவராக இருந்தவர். ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆர்எஸ்எஸ் உடன் ஆரம்பத்தில் இருந்தே தொடர்பு கொண்டிருந்திருக்கிறார்.
பின்னர் 1989 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அரசியல் பணிகளில் தீவிரமாகச் செயல்பட தொடங்கினார்.
இந்தியாவில் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டிருந்த 1975 முதல் 1977 வரை இருந்த காலகட்டத்தில் தனது தந்தையுடன் சேர்ந்து சிறை சென்ற அனுபவமும் இவருக்கு இருக்கிறது.2002 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை கோவா யூனியன் பிரதேசதில் சட்டமன்ற உறுப்பினராகவும் 2003 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை கோவா மாநில பாஜக தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.
அதேபோல 2012 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை கோவா யூனியன் பிரதேச சபாநாயகராக பதவி வகித்திருக்கிறார்.
கோவா யூனியன் பிரதேசச் சட்டமன்றத்தை இந்தியாவின் முதல் டிஜிட்டல் சட்டமன்றமாக அதாவது காகிதம் இல்லா சட்டமன்றமாக மாற்றியிருக்கிறார். இது இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
ஹிமாச்சல் பிரதேசம், மற்றும் பீஹார் மாநிலங்களின் ஆளுநராகவும் பதவி வகித்திருக்கிறார். தொடர்ந்து கடந்த ஆண்டு கேரளம் மாநிலத்தின் 23 ஆவது ஆளுநராகப் பதவியேற்றவர் தற்போது தமிழ்நாட்டில் பொறுப்பு ஆளுநராக பதவியேற்றுள்ளார்















கருத்துகள்