தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில், தமிழகத்திற்கு நிதியாண்டின் முதல் தவணை ரூபாய்.2650 கோடியை மத்திய அரசு அளித்தது
மகாத்மா காந்தி நூறு நாள் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில், தமிழகத்திற்கு இந்த நிதியாண்டின் முதல் தவணையாக ரூபாய்.2650 கோடியை மத்திய அரசு அளித்து விட்டது.மேலும், கடந்த மார்ச் மாதம் பணியாற்றிய 26,84,989 பேருக்கு மாநில பேரிடர் நிதியிலிருந்து இரண்டு நாள் ஊதியமான ரூபாய். 458 ஐ ( 229×2) கூடுதல் சலுகையாக, மொத்தம் ரூபாய்.123 கோடியே, 10 லட்சம் அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த 2650 கோடி நிதியின் மூலம், உடனடியாக, கட்டுப்படுத்தபடாத பகுதிகளில் இத்திட்டத்தின் அடிப்படையில் வேலை கொடுக்கலாம் என்று மத்திய அரசு அனுமதியளித்த நிலையில், 82,76,000 பணியாளர்கள் தமிழகத்தில் உள்ள நிலையில், சராசரியாக ஒரு நாளைக்கு 10 லட்சம் பேர் பணிபுரிவது வழக்கமான நிலையில் நேற்று வரை 1,95,000 பேர் மட்டுமே பணிக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கொரானோ தொற்று பரவும் என்ற அச்சத்தினால் மக்கள் பணிக்கு வரவில்லை என்றும், மக்கள் பணிபுரிய வந்தால் கொரானோ தொற்று அதிகரித்து விடுமோ என்று உள்ளாட்சி நிர்வாகங்கள் தயங்குகின்றன என கூறப்படுகிறது. ஆனால் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக வருமானம் இல்லாமல் இருக்கும் மக்களை தைரியப்படுத்தி, தனி நபர் விலகலை உறுதிப்படுத்தி அவர்களுக்கு பணியளித்து ஊதியம் அளிப்பதன் மூலம் மட்டுமே சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய முடியும்.
ஆனால், தொற்று பரவிவிடுமோ என்று அச்சப்படும் மாநில அரசும், மக்களும், முறையே, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மது விற்பனையை துவக்கியதை பல லட்சக்கணக்கான மக்கள் வரவேற்று வரிசை கட்டி நிற்பதையும் பார்க்கும் போது, நூறு நாள் வேலை திட்டத்திற்கு மக்கள் வராததற்கான காரணம் ஏற்புடையதாக இல்லை என்பது கண்கூடாகிறது. குடிக்கு ஏங்குகிற குடிமகன்களும், மக்களின் வாழ்வாதாரம் குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியமான நேரமிது.குடிக்காமல் வாழும் கிராம மக்களின் வாழ்வாதாரம் 100 நாள் வேலையாகும்.அதில் சமூக இடைவெளி விட்டு பணிக்கு அனுமதிக்க வேண்டும் என்பதே பல கிராமத்தில் எதிர்பார்ப்பு.
கருத்துகள்