முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் 41வது பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத் தலைவர் ஆற்றிய உரை

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் 2020 டிசம்பர் 17-ல் நடந்த 41வது பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு ஆற்றிய உரை


. வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்விக்காக செய்த சேவைகளுக்காக பாராட்டப்படும், பிரசித்தி பெற்ற இந்த வேளாண் பல்கலைக்கழகத்தின் 41வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தனித்துவமான இந்தக் கல்வி நிலையத்தில் இப்போது பட்டங்கள், விருதுகள், தனிச்சிறப்புகள் பெறும் அனைவருக்கும் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவர்களை வழிநடத்தி, தரமான கல்வி பெற உதவி, சரியான மாண்புகளை அவர்களுக்குப் போதிப்பதில் பங்கெடுத்துக் கொண்ட ஆசிரியர்களுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கல்வி நிலையத்தில் படித்தவர்கள் பிரசித்தி பெற்ற ஆராய்ச்சி நிலையங்களிலும், கொள்கை முடிவு எடுக்கும் அமைப்புகளிலும், சிவில் சர்வீசஸ் பணிகளிலும் இடம் பெற்றிருப்பதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

நமது பொருளாதாரத்தின் ஒருங்கிணைந்த அம்சமாக மட்டுமின்றி, நமது கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தில் பிணைப்பு கொண்டதாகவும் விவசாயம் இருக்கிறது. எனவே, எனதருமை நண்பர்களே, முக்கியமான துறையாக மட்டுமின்றி, புனிதமான துறையாகவும் இதை நீங்கள் தேர்வு செய்திருக்கிறீர்கள். உண்மையில் சொல்லப்போனால், எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம் விவசாயம். அரிசி உற்பத்திக்குப் பெயர் பெற்ற பகுதியில் இருந்து நான் வந்திருக்கிறேன்.

மக்கள் தொகையில் 50 சதவீதத்துக்கும் மேலானவர்கள் தங்கள் வாழ்க்கைக்கு இன்னும் விவசாயத்தைச் சார்ந்துள்ள நிலையில், நமது கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இந்தத் துறை இருக்கிறது. எனவே, பருவநிலைக்கு இயைந்ததாக, லாபகரமானதாக, அதிக உற்பத்தி சார்ந்ததாக விவசாயத்தை ஆக்க வேண்டியது இப்போதைய தேவையாக உள்ளது. அதேசமயத்தில், பல மில்லியன் மக்களின் உணவு மற்றும் சத்து பாதுகாப்பையும் உறுதி செய்திட வேண்டும்.

அன்பான என் மாணவர்களே,

இப்போது ஏற்பட்டுள்ள பெருந்தொற்று அனைத்து செயல்பாடுகளையும் பாதித்துவிட்டது. முன் எப்போதும் இல்லாத வகையில் இந்தியாவிலும், மற்ற நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி குறையும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், 2021-ல் உற்சாகமான வளர்ச்சியைக் காணும் என்றும், வேகமாக வளரும் பொருளாதார நாடு  என்ற அந்தஸ்தை மீண்டும் பெறும் என்றும் எனக்கு நம்பிக்கை உள்ளது.

இந்தப் பெருந்தொற்று காலத்தில், மற்ற அனைத்துத் துறைகளின் வளர்ச்சியும் பாதிக்கப் பட்டுள்ள நிலையில், விவசாயம் மட்டுமே சிறப்பான வளர்ச்சியைக் காட்டி, பொருளாதாரத்துக்கு முக்கியமான ஆதரவு அளித்தது. உண்மையில், காரிப் பருவத்தில் சாகுபடி நடந்த பகுதிகளில், கோவிட்-19 காலத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, காரிப் பருவத்தில் சுமார் 59 லட்சம் ஹெக்டர் அளவுக்கு சாகுபடிப் பரப்பு அதிகரித்துள்ளது. விதைகள், பூச்சிக்கொல்லிகள், உரங்கள், வேளாண் இயந்திரங்கள் போன்றவற்றுக்கு முன்கூட்டியே அரசு ஏற்பாடு செய்து, கடன் வசதிக்கும் ஏற்பாடு செய்ததால், முடக்கநிலை காலத்தில் அதிக அளவில் சாகுபடி பணிகள் தொடங்குவது சாத்தியமானது.

2020-21 காரிப் பருவத்தில் உணவு தானிய உற்பத்தி 144.52 மில்லியன் டன்கள் அளவுக்கு இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. 2019-20 ஆம் ஆண்டில் கோவிட் 19 நெருக்கடியிலும் உணவு தானிய உற்பத்தி 143.38 மில்லியன் டன்களாக இருந்தது. மிக சிரமமான காலங்களிலும் இணையற்ற உத்வேகத்தையும்,  அர்ப்பணிப்பையும் காட்டியமைக்காக விவசாயிகளுக்கு நான் வணக்கம் செலுத்திக் கொள்கிறேன்.

அன்பான சகோதர, சகோதரிகளே,

மக்கள் தொகை வளர்ச்சி, சாகுபடி பரப்புகள் குறைவது, நிலத்தின் வளம் குறைவது, நகரமயமாக்கல் அதிகரிப்பது, நுகர்வுப் போக்கில் ஏற்படும் மாற்றங்கள், பருவநிலை மாற்றம், மழையை சார்ந்திருக்கும் நிலை அதிகரிப்பு, பலவீனமான சந்தைத் தொடர்புகள், போதிய செயல்திறன் இல்லாத வழங்கல் தொடர்புகள், அதிக அளவில் வீணாதல் போன்ற பல மாறுபடும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, வேளாண்மைத் துறையின் வளர்ச்சியைப் பார்க்க வேண்டும்.

நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே போகிறது, நீர்நிலைகள் மாசுபடுதல் அதிகரிக்கிறது, வேளாண் உற்பத்திக்கு இதனால் பெரிய பிரச்சினைகள் ஏற்படுகின்றன, குறிப்பாக தமிழ்நாடு போன்ற தண்ணீர் பற்றாக்குறை மாநிலங்களில் இந்தப் பிரச்சினைகள் மிகுந்த கவலையை ஏற்படுத்துபவையாக இருக்கின்றன. எனவே, வறட்சியைத் தாங்கும் பயிர் வகைகளை, தண்ணீரை சேமிக்கும் தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது.

பாரம்பர்ய மற்றும் உயிரி தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி, மரபணுப் பயிர்களை உருவாக்குவதில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் முத்திரை பதித்திருப்பதை நான் அறிந்திருக்கிறேன். இந்தத் துறையில் ஆராய்ச்சியை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ள நான் விரும்புகிறேன். தானாகவே சூழ்நிலைகளைத் தாங்கும் திறன் கொண்ட பயிர்கள், பல பருவநிலை பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும்.

2019 ஆம் ஆண்டுக்கான `நீர் மேலாண்மைக்கான சிறந்த மாநிலம்'' என்ற விருதை ஜல்சக்தி அமைச்சகத்திடம் இருந்து தமிழகம் பெற்றிருப்பதை நான் பாராட்டுகிறேன். 2020 நவம்பர் 11 ஆம் தேதி இந்த விருதை நான் அளித்தேன். கடந்த காலத்தில் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறைகளில் தமிழகத்தின் செயல்பாடு உற்பத்திப் பெருக்கத்தை ஏற்படுத்தி இருப்பது மட்டுமின்றி, உயர் விளைச்சல் தரும் ரகங்களையும், தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி அதிகபட்ச விளைச்சல் பெற்றிருக்கிறது.

அன்பு மாணவர்களே,

பருவநிலை மாற்றத்தின் நேரடி பாதிப்புகள் அடுத்த சில ஆண்டுகளில், வேளாண்மைத் துறையின் மீதுதான் இருக்கும். எனவே, பருவ மாறுபாடுகளை தாங்கக் கூடிய பயிர் ரகங்களை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. வறட்சி, வெள்ளம், வெள்ளத்தில் மூழ்குதல், வெப்பம், குளிர், உப்புத்தன்மை, பூச்சிகள் மற்றும் நோய்கள் போன்ற சூழலைத் தாங்கும் வகையில் அவை இருக்க வேண்டும்.

இந்திய வேளாண்மைத் துறையின் தாக்குப்பிடிக்கும் தன்மையை மேம்படுத்துவதற்கான எந்த முயற்சியும், பருவநிலை மாறுபாடுகளை சமாளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். சிறிய மற்றும் விளிம்புநிலை விவசாயிகளின் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் தொழில்நுட்பங்கள் மற்றும் வழிமுறைகள் இருக்க வேண்டும். வேளாண்மைத் துறையின் நீடித்த வளர்ச்சியை அப்போது தான் உறுதி செய்ய முடியும்.

மரபணு மாற்றம், குறிப்பாக CRISPR-Cas9 - புரட்சிகரமான விஷயங்களாக உள்ளன. அறிவியல், உணவு உற்பத்தி ஆகியவற்றிலும், வரக் கூடிய நாட்களில் சமூகத்திலும் அவை தாக்கத்தை  ஏற்படுத்தும். உயிரினங்கள் சார்ந்த மற்றும் அவற்றைச் சாராத பிரச்சினைகளைத் தாக்குப் பிடித்து, விளைச்சல் மற்றும் சத்துகளை அதிகரிக்கும் வகையிலான விவசாய முறைகளை உருவாக்கும் திறன் நம்மிடம் உள்ளது.

துரிதப்படுத்தப்பட்ட பயிர் மேம்பாட்டுக்கு இந்தத் தொழில்நுட்பத்தை இந்தப் பல்கலைக்கழகம் ஏற்கெனவே பயன்படுத்துவதை அறிவதில் மகிழ்ச்சி அடைகிறேன். உதாரணமாக, அரிசியில் பீட்டா-கரோட்டின் மற்றும் வாசனையை மேம்படுத்த இது பயன்படுத்தப் படுகிறது. பூச்சிகள் பாதிக்காத வகையில், உப்புத்தன்மையால் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்தப் பயிர்கள் உள்ளன.

நவீனப்படுத்தல் மற்றும் வணிகமயமாக்கலுக்கு, வேளாண்மையை இயந்திரமயமாக்குதல் முக்கியமானதாக உள்ளது. உற்பத்தியை 30 சதவீதம் வரை அதிகரிக்கவும், உற்பத்திச் செலவை 20 சதவீதம் வரை குறைக்கவும், மேம்படுத்தப்பட்ட கருவிகளைப் பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளது. தேவையின் அடிப்படையில் இயந்திரங்களை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

நாற்று நடும் இயந்திரப் பயன்பாட்டுக்கு தமிழகம் உதவி  அளிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். மின்விளக்கு, மின்வேலி மற்றும் சாகுபடி பொருட்களை உலர்வித்தல் போன்றவற்றுக்கு சூரியசக்தி மின்சாரத்தை பயன்படுத்த வேண்டியதும் அவசியமானதாக இருக்கிறது.

நானோ தொழில்நுட்பம், புதிதாக வளரும் முக்கியமான துறையாக இருக்கிறது. வேளாண்மைத் துறையில் சில பிரச்சினைகளைக் கையாள்வதில், இந்தத் தொழில்நுட்பத்தை நல்ல முறையில் பயன்படுத்த முடியும். வேளாண் ஆராய்ச்சிக்காக நானோ தொழில்நுட்ப மையம் ஒன்றை 2010 ஆம் ஆண்டிலேயே அமைத்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் முன்னோடியாக இருப்பதை நான் பாராட்டுகிறேன்.

ஈரப்பதம், ஊட்டச்சத்துக் குறைபாடு, பூச்சிக்கொல்லி கழிவுகள் தேக்கம் போன்றவற்றை களத்திலேயே உடனுக்குடன் மதிப்பிடுதல் மற்றும் நானோ வேளாண் இடுபொருட்கள் விஷயத்தில் இந்த மையம் நிறைய பணிகள் ஆற்றியிருப்பதாக எனக்குத் தெரிவித்தார்கள்.

அன்பு சகோதர, சகோதரிகளே,

வேளாண்மைத் துறைக்குப் புத்துயிரூட்ட இந்திய அரசு சமீப காலமாக ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொள்கை அளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக ஆக்க வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது. சமீபத்தில் தொடங்கப்பட்ட பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டம் இந்திய விவசாயிகளில் 72 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களுக்குப் பயன் தரும். பல்வேறு திட்டங்களில் அளிக்கும் மானியத்துடன், இந்த வருமான உதவித் திட்டம் விவசாயிகளின் பொருளாதாரப் பயன்களில் பல மடங்கு பயன்களைத் தருவதாக இருக்கும்.

விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கு, நாம் உற்பத்தியைப் பெருக்க வேண்டும், இயற்கை வளங்களின் பயன்பாட்டை செம்மையாகப் பயன்படுத்த வேண்டும், சாகுபடி எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், உயர் மதிப்பு பயிர்கள் சாகுபடியில் ஈடுபட வேண்டும்.  நல்ல சேமிப்பு வசதி, பதப்படுத்தல் வசதி மூலம் விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்கச் செய்தல், வேளாண் இடுபொருள்களுக்கு செம்மையான வசதிகள், கடன் வசதி, விளைபொருளை விற்பதற்கான வசதி ஆகியவை செய்யப்பட வேண்டும். மேலும், சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, பசுமையான, பாதுகாப்பான பூமியை எதிர்கால தலைமுறையினருக்கு விட்டுச் செல்ல வேண்டியது நமது புனிதமான கடமையாக உள்ளது.

பிரசித்தி பெற்ற இந்த வேளாண் பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் என்ற வகையில், தொழில்நுட்பம் சார்ந்த, நீடித்த வேளாண் வளர்ச்சியை நீங்கள் ஒவ்வொருவரும் முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதன் மூலம் விசாயிகள் கூடுதல் வருவாய் பெறவும், பல மில்லியன் மக்களுக்கு உணவு மற்றும் சத்துகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். உங்களுடைய ஆராய்ச்சி சமூகத்தின் தேவைகளுக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டும். பருவநிலை மாறுதல், ஆரோக்கியப் பிரச்சினைகள் போன்ற மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பவையாக உங்கள் ஆராய்ச்சிகள் இருக்க வேண்டும்.

கோவிட்-19 காரணமாக, நமது எழுச்சியை, எதிர்கால சிந்தனைகள் தடைபட்டுவிடக் கூடாது. சவால் நிறைந்த உலகில் நீங்கள் நுழையும் நிலையில், மாறுதல்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சவால்களை துணிச்சலாக எதிர்கொண்டு, வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். புதுமை சிந்தனை, கருணையுடன் நல்ல உலகை உருவாக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது.

100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்தக் கல்வி நிலையம், சிறப்புக்குரிய பல அறிஞர்களை உருவாக்கியுள்ள பெருமையைப் பெற்றிருக்கிறது. தன் ஆற்றலை நல்ல முறையில் பயன்படுத்தி, வரக் கூடிய ஆண்டுகளில் நிறைய சாதனைகளைப் படைக்கும் என்று உறுதியாக நம்புகிறன்.

உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

நண்பர்களே, இந்த நாட்டின் இளைஞர்கள் எதிர்கால தலைமுறையினர் பற்றி சிந்திக்க வேண்டும் என்றும், அழகான, வளமையான, பசுமையான, வாழ்வதற்கு உகந்த பூமியை நாம் விட்டுச் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு, நான் நிறைவு செய்கிறேன்.

ஜெய் ஹிந்த்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த