தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் 2020 டிசம்பர் 17-ல் நடந்த 41வது பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு ஆற்றிய உரை
. வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்விக்காக செய்த சேவைகளுக்காக பாராட்டப்படும், பிரசித்தி பெற்ற இந்த வேளாண் பல்கலைக்கழகத்தின் 41வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தனித்துவமான இந்தக் கல்வி நிலையத்தில் இப்போது பட்டங்கள், விருதுகள், தனிச்சிறப்புகள் பெறும் அனைவருக்கும் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவர்களை வழிநடத்தி, தரமான கல்வி பெற உதவி, சரியான மாண்புகளை அவர்களுக்குப் போதிப்பதில் பங்கெடுத்துக் கொண்ட ஆசிரியர்களுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தக் கல்வி நிலையத்தில் படித்தவர்கள் பிரசித்தி பெற்ற ஆராய்ச்சி நிலையங்களிலும், கொள்கை முடிவு எடுக்கும் அமைப்புகளிலும், சிவில் சர்வீசஸ் பணிகளிலும் இடம் பெற்றிருப்பதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
நமது பொருளாதாரத்தின் ஒருங்கிணைந்த அம்சமாக மட்டுமின்றி, நமது கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தில் பிணைப்பு கொண்டதாகவும் விவசாயம் இருக்கிறது. எனவே, எனதருமை நண்பர்களே, முக்கியமான துறையாக மட்டுமின்றி, புனிதமான துறையாகவும் இதை நீங்கள் தேர்வு செய்திருக்கிறீர்கள். உண்மையில் சொல்லப்போனால், எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம் விவசாயம். அரிசி உற்பத்திக்குப் பெயர் பெற்ற பகுதியில் இருந்து நான் வந்திருக்கிறேன்.
மக்கள் தொகையில் 50 சதவீதத்துக்கும் மேலானவர்கள் தங்கள் வாழ்க்கைக்கு இன்னும் விவசாயத்தைச் சார்ந்துள்ள நிலையில், நமது கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இந்தத் துறை இருக்கிறது. எனவே, பருவநிலைக்கு இயைந்ததாக, லாபகரமானதாக, அதிக உற்பத்தி சார்ந்ததாக விவசாயத்தை ஆக்க வேண்டியது இப்போதைய தேவையாக உள்ளது. அதேசமயத்தில், பல மில்லியன் மக்களின் உணவு மற்றும் சத்து பாதுகாப்பையும் உறுதி செய்திட வேண்டும்.
அன்பான என் மாணவர்களே,
இப்போது ஏற்பட்டுள்ள பெருந்தொற்று அனைத்து செயல்பாடுகளையும் பாதித்துவிட்டது. முன் எப்போதும் இல்லாத வகையில் இந்தியாவிலும், மற்ற நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி குறையும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், 2021-ல் உற்சாகமான வளர்ச்சியைக் காணும் என்றும், வேகமாக வளரும் பொருளாதார நாடு என்ற அந்தஸ்தை மீண்டும் பெறும் என்றும் எனக்கு நம்பிக்கை உள்ளது.
இந்தப் பெருந்தொற்று காலத்தில், மற்ற அனைத்துத் துறைகளின் வளர்ச்சியும் பாதிக்கப் பட்டுள்ள நிலையில், விவசாயம் மட்டுமே சிறப்பான வளர்ச்சியைக் காட்டி, பொருளாதாரத்துக்கு முக்கியமான ஆதரவு அளித்தது. உண்மையில், காரிப் பருவத்தில் சாகுபடி நடந்த பகுதிகளில், கோவிட்-19 காலத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, காரிப் பருவத்தில் சுமார் 59 லட்சம் ஹெக்டர் அளவுக்கு சாகுபடிப் பரப்பு அதிகரித்துள்ளது. விதைகள், பூச்சிக்கொல்லிகள், உரங்கள், வேளாண் இயந்திரங்கள் போன்றவற்றுக்கு முன்கூட்டியே அரசு ஏற்பாடு செய்து, கடன் வசதிக்கும் ஏற்பாடு செய்ததால், முடக்கநிலை காலத்தில் அதிக அளவில் சாகுபடி பணிகள் தொடங்குவது சாத்தியமானது.
2020-21 காரிப் பருவத்தில் உணவு தானிய உற்பத்தி 144.52 மில்லியன் டன்கள் அளவுக்கு இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. 2019-20 ஆம் ஆண்டில் கோவிட் 19 நெருக்கடியிலும் உணவு தானிய உற்பத்தி 143.38 மில்லியன் டன்களாக இருந்தது. மிக சிரமமான காலங்களிலும் இணையற்ற உத்வேகத்தையும், அர்ப்பணிப்பையும் காட்டியமைக்காக விவசாயிகளுக்கு நான் வணக்கம் செலுத்திக் கொள்கிறேன்.
அன்பான சகோதர, சகோதரிகளே,
மக்கள் தொகை வளர்ச்சி, சாகுபடி பரப்புகள் குறைவது, நிலத்தின் வளம் குறைவது, நகரமயமாக்கல் அதிகரிப்பது, நுகர்வுப் போக்கில் ஏற்படும் மாற்றங்கள், பருவநிலை மாற்றம், மழையை சார்ந்திருக்கும் நிலை அதிகரிப்பு, பலவீனமான சந்தைத் தொடர்புகள், போதிய செயல்திறன் இல்லாத வழங்கல் தொடர்புகள், அதிக அளவில் வீணாதல் போன்ற பல மாறுபடும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, வேளாண்மைத் துறையின் வளர்ச்சியைப் பார்க்க வேண்டும்.
நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே போகிறது, நீர்நிலைகள் மாசுபடுதல் அதிகரிக்கிறது, வேளாண் உற்பத்திக்கு இதனால் பெரிய பிரச்சினைகள் ஏற்படுகின்றன, குறிப்பாக தமிழ்நாடு போன்ற தண்ணீர் பற்றாக்குறை மாநிலங்களில் இந்தப் பிரச்சினைகள் மிகுந்த கவலையை ஏற்படுத்துபவையாக இருக்கின்றன. எனவே, வறட்சியைத் தாங்கும் பயிர் வகைகளை, தண்ணீரை சேமிக்கும் தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது.
பாரம்பர்ய மற்றும் உயிரி தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி, மரபணுப் பயிர்களை உருவாக்குவதில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் முத்திரை பதித்திருப்பதை நான் அறிந்திருக்கிறேன். இந்தத் துறையில் ஆராய்ச்சியை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ள நான் விரும்புகிறேன். தானாகவே சூழ்நிலைகளைத் தாங்கும் திறன் கொண்ட பயிர்கள், பல பருவநிலை பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும்.
2019 ஆம் ஆண்டுக்கான `நீர் மேலாண்மைக்கான சிறந்த மாநிலம்'' என்ற விருதை ஜல்சக்தி அமைச்சகத்திடம் இருந்து தமிழகம் பெற்றிருப்பதை நான் பாராட்டுகிறேன். 2020 நவம்பர் 11 ஆம் தேதி இந்த விருதை நான் அளித்தேன். கடந்த காலத்தில் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறைகளில் தமிழகத்தின் செயல்பாடு உற்பத்திப் பெருக்கத்தை ஏற்படுத்தி இருப்பது மட்டுமின்றி, உயர் விளைச்சல் தரும் ரகங்களையும், தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி அதிகபட்ச விளைச்சல் பெற்றிருக்கிறது.
அன்பு மாணவர்களே,
பருவநிலை மாற்றத்தின் நேரடி பாதிப்புகள் அடுத்த சில ஆண்டுகளில், வேளாண்மைத் துறையின் மீதுதான் இருக்கும். எனவே, பருவ மாறுபாடுகளை தாங்கக் கூடிய பயிர் ரகங்களை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. வறட்சி, வெள்ளம், வெள்ளத்தில் மூழ்குதல், வெப்பம், குளிர், உப்புத்தன்மை, பூச்சிகள் மற்றும் நோய்கள் போன்ற சூழலைத் தாங்கும் வகையில் அவை இருக்க வேண்டும்.
இந்திய வேளாண்மைத் துறையின் தாக்குப்பிடிக்கும் தன்மையை மேம்படுத்துவதற்கான எந்த முயற்சியும், பருவநிலை மாறுபாடுகளை சமாளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். சிறிய மற்றும் விளிம்புநிலை விவசாயிகளின் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் தொழில்நுட்பங்கள் மற்றும் வழிமுறைகள் இருக்க வேண்டும். வேளாண்மைத் துறையின் நீடித்த வளர்ச்சியை அப்போது தான் உறுதி செய்ய முடியும்.
மரபணு மாற்றம், குறிப்பாக CRISPR-Cas9 - புரட்சிகரமான விஷயங்களாக உள்ளன. அறிவியல், உணவு உற்பத்தி ஆகியவற்றிலும், வரக் கூடிய நாட்களில் சமூகத்திலும் அவை தாக்கத்தை ஏற்படுத்தும். உயிரினங்கள் சார்ந்த மற்றும் அவற்றைச் சாராத பிரச்சினைகளைத் தாக்குப் பிடித்து, விளைச்சல் மற்றும் சத்துகளை அதிகரிக்கும் வகையிலான விவசாய முறைகளை உருவாக்கும் திறன் நம்மிடம் உள்ளது.
துரிதப்படுத்தப்பட்ட பயிர் மேம்பாட்டுக்கு இந்தத் தொழில்நுட்பத்தை இந்தப் பல்கலைக்கழகம் ஏற்கெனவே பயன்படுத்துவதை அறிவதில் மகிழ்ச்சி அடைகிறேன். உதாரணமாக, அரிசியில் பீட்டா-கரோட்டின் மற்றும் வாசனையை மேம்படுத்த இது பயன்படுத்தப் படுகிறது. பூச்சிகள் பாதிக்காத வகையில், உப்புத்தன்மையால் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்தப் பயிர்கள் உள்ளன.
நவீனப்படுத்தல் மற்றும் வணிகமயமாக்கலுக்கு, வேளாண்மையை இயந்திரமயமாக்குதல் முக்கியமானதாக உள்ளது. உற்பத்தியை 30 சதவீதம் வரை அதிகரிக்கவும், உற்பத்திச் செலவை 20 சதவீதம் வரை குறைக்கவும், மேம்படுத்தப்பட்ட கருவிகளைப் பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளது. தேவையின் அடிப்படையில் இயந்திரங்களை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
நாற்று நடும் இயந்திரப் பயன்பாட்டுக்கு தமிழகம் உதவி அளிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். மின்விளக்கு, மின்வேலி மற்றும் சாகுபடி பொருட்களை உலர்வித்தல் போன்றவற்றுக்கு சூரியசக்தி மின்சாரத்தை பயன்படுத்த வேண்டியதும் அவசியமானதாக இருக்கிறது.
நானோ தொழில்நுட்பம், புதிதாக வளரும் முக்கியமான துறையாக இருக்கிறது. வேளாண்மைத் துறையில் சில பிரச்சினைகளைக் கையாள்வதில், இந்தத் தொழில்நுட்பத்தை நல்ல முறையில் பயன்படுத்த முடியும். வேளாண் ஆராய்ச்சிக்காக நானோ தொழில்நுட்ப மையம் ஒன்றை 2010 ஆம் ஆண்டிலேயே அமைத்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் முன்னோடியாக இருப்பதை நான் பாராட்டுகிறேன்.
ஈரப்பதம், ஊட்டச்சத்துக் குறைபாடு, பூச்சிக்கொல்லி கழிவுகள் தேக்கம் போன்றவற்றை களத்திலேயே உடனுக்குடன் மதிப்பிடுதல் மற்றும் நானோ வேளாண் இடுபொருட்கள் விஷயத்தில் இந்த மையம் நிறைய பணிகள் ஆற்றியிருப்பதாக எனக்குத் தெரிவித்தார்கள்.
அன்பு சகோதர, சகோதரிகளே,
வேளாண்மைத் துறைக்குப் புத்துயிரூட்ட இந்திய அரசு சமீப காலமாக ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொள்கை அளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக ஆக்க வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது. சமீபத்தில் தொடங்கப்பட்ட பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டம் இந்திய விவசாயிகளில் 72 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களுக்குப் பயன் தரும். பல்வேறு திட்டங்களில் அளிக்கும் மானியத்துடன், இந்த வருமான உதவித் திட்டம் விவசாயிகளின் பொருளாதாரப் பயன்களில் பல மடங்கு பயன்களைத் தருவதாக இருக்கும்.
விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கு, நாம் உற்பத்தியைப் பெருக்க வேண்டும், இயற்கை வளங்களின் பயன்பாட்டை செம்மையாகப் பயன்படுத்த வேண்டும், சாகுபடி எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், உயர் மதிப்பு பயிர்கள் சாகுபடியில் ஈடுபட வேண்டும். நல்ல சேமிப்பு வசதி, பதப்படுத்தல் வசதி மூலம் விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்கச் செய்தல், வேளாண் இடுபொருள்களுக்கு செம்மையான வசதிகள், கடன் வசதி, விளைபொருளை விற்பதற்கான வசதி ஆகியவை செய்யப்பட வேண்டும். மேலும், சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, பசுமையான, பாதுகாப்பான பூமியை எதிர்கால தலைமுறையினருக்கு விட்டுச் செல்ல வேண்டியது நமது புனிதமான கடமையாக உள்ளது.
பிரசித்தி பெற்ற இந்த வேளாண் பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் என்ற வகையில், தொழில்நுட்பம் சார்ந்த, நீடித்த வேளாண் வளர்ச்சியை நீங்கள் ஒவ்வொருவரும் முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதன் மூலம் விசாயிகள் கூடுதல் வருவாய் பெறவும், பல மில்லியன் மக்களுக்கு உணவு மற்றும் சத்துகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். உங்களுடைய ஆராய்ச்சி சமூகத்தின் தேவைகளுக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டும். பருவநிலை மாறுதல், ஆரோக்கியப் பிரச்சினைகள் போன்ற மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பவையாக உங்கள் ஆராய்ச்சிகள் இருக்க வேண்டும்.
கோவிட்-19 காரணமாக, நமது எழுச்சியை, எதிர்கால சிந்தனைகள் தடைபட்டுவிடக் கூடாது. சவால் நிறைந்த உலகில் நீங்கள் நுழையும் நிலையில், மாறுதல்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சவால்களை துணிச்சலாக எதிர்கொண்டு, வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். புதுமை சிந்தனை, கருணையுடன் நல்ல உலகை உருவாக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது.
100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்தக் கல்வி நிலையம், சிறப்புக்குரிய பல அறிஞர்களை உருவாக்கியுள்ள பெருமையைப் பெற்றிருக்கிறது. தன் ஆற்றலை நல்ல முறையில் பயன்படுத்தி, வரக் கூடிய ஆண்டுகளில் நிறைய சாதனைகளைப் படைக்கும் என்று உறுதியாக நம்புகிறன்.
உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
நண்பர்களே, இந்த நாட்டின் இளைஞர்கள் எதிர்கால தலைமுறையினர் பற்றி சிந்திக்க வேண்டும் என்றும், அழகான, வளமையான, பசுமையான, வாழ்வதற்கு உகந்த பூமியை நாம் விட்டுச் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு, நான் நிறைவு செய்கிறேன்.
ஜெய் ஹிந்த்!
கருத்துகள்