2011 ஆம் ஆண்டிலிருந்து 81 ஆயிரம் துணை ராணுவப்படையினர் விருப்ப ஓய்வு; 16 ஆயிரம் வீரர்கள் பணிவிலகல்
சி.ஆர்.பி.எப்., எல்லை பாதுகாப்பு படை, இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ், சாஷஸ்ட்ரா சீமா பால், மத்திய தொழிலக பாதுகாப்பு படை, அசாம் ரைபிள்ஸ் ஆகிய 6 துணை ராணுவப்படைகளில் மொத்தம் 10 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள்.இந்த படைகளில் கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டுவரை 81 ஆயிரத்து 7 பேர் விருப்ப ஓய்வு பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதிகபட்சமாக, எல்லை பாதுகாப்பு படையிலிருந்து மட்டும் 36 ஆயிரத்து 768 பேர் விலகி உள்ளனர்.கடந்த 2017 ஆம் ஆண்டில் மட்டும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர். மேலும், இதே காலத்தில்
துணை ராணுவப்படையைச் சேர்ந்த 15 ஆயிரத்து 904 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.
விருப்ப ஓய்வு, ராஜினாமா காரணங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு எதுவும் நடத்தவில்லை. இருப்பினும், தனிப்பட்ட மற்றும் குடும்ப பிரச்சினைகள், உடல்நலக்குறைவு, வேறு சிறந்த பணிவாய்ப்பு ஆகியவை தான் முக்கியமான காரணங்கள் என துணை ராணுவப்படையினரே நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தப் புள்ளிவிவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.இந்திய ராணுவத்தில் பணியாற்றும் அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயது 54-58 ஆக இருக்கும் நிலையில், வீரர்கள் 37-38 வயதில் ஓய்வு பெறுகின்றனர். எனவே வீரர்களின் ஓய்வு வயதையும் 58 ஆக உயர்த்த பரிசீலித்து வருவதாக முப்படை தலைவர் பிபின் ராவத் கூறியுள்ளார்.
கருத்துகள்